Saturday, April 12, 2014

அம்மாவாசை நிலா

             "என் மகன் கோபாலகிருஷ்ணனுக்கு முப்பத்திரெண்டு வயசாகுது. இன்னும் கல்யாணம் முடிக்கல. எப்பப்பாரும் கம்ப்யூட்டரும் கையுமா இருக்கான். அப்பிடி வேல எதுவும் இல்லனா அந்த மொபைல்ல விளையாட ஆரம்பிச்சிடிறான். அப்பிடி என்னத்தான் விளையாட்டோ ரயில் ரயிலா குதிச்சிக்கிட்டு.", கோயிலில் நெடுநாள் பிறகு பார்த்த  தோழியிடம் தன் மனவருத்தத்தை கூறினாள் பகவதி.
             "பகவதி! இங்கப்பாரு. அவன் அவனக்கு யாருன்னு உள்ள இருக்கறவன் எப்பவோ எழுதிட்டான். கோபாலகிருஷ்ணன் நல்லா சம்பாதிக்கறான். அப்பப்ப அமெரிக்கா வேற போயிட்டு வரான். அப்பறம் என்ன? சம்பாத்தியமும் சும்மாவா. ரெண்டு காரு.காரைக்குடில ஒரு வீடு.போதாதுக்கு ஊட்டி ல கெஸ்ட் ஹவுஸ் வேற. அடப்போம்மா.", என பகவதிக்கு ஆறுதல் வார்த்தை கூறினாள்
            "வீட்ட கட்டிட்டே போறான். மண்டைல சொட்ட விழ ஆரம்பிச்சிடுச்சு."
            "சும்மா இரு பகவதி. மகனப்பத்தி நீயே இப்படி சொல்லலாமா? லேஸ் சொட்டைங்களுக்கு தான் கல்யாண மார்க்கெட்ல மவுசு ஜாஸ்தி. இளஞ்சொட்ட தானே அமெரிக்கா. அந்த கண்ணாடிய போட்டுக்கிட்டு லைட்டா இங்கிலீஷ் பேசினாலே போதும் உனக்கு ஈஸியா சம்மந்தி அமைஞ்சிடுவாங்க.", என மேலும் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
           "என்னவோ? கிருஷ்ணன்னு பேர் வெச்சிக்கிட்டு இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கான்.", என புலம்பிவிட்டு தாயார் சன்னதிக்குள் நுழைந்தார்.
         
           கோபாலகிருஷ்ணன் ஐடி கம்பெனியில் டெக்னாலஜி அனலிஸ்ட். அமெரிக்க கம்பெனி என்பதால் மாதத்தில் பாதி நாட்கள் சென்னையிலும் மீதி நாட்கள் சிலிக்கன் வேலியிலுமாய் வேலை. லேஸ் சொட்டை, பிரெஞ்ச் தாடி என முப்பது வயது மதிக்கத்தக்க ஐடி வாசியின் சகலாம்சங்களும் கோபாலகிருஷ்ணனுக்கு. மாப்பிள்ளை கேட்டு இன்னும் ஒரு வரனும் வந்ததில்லை.  பெண்கேட்டு சென்றதில்லை. எழுத்து இவனின் இன்னொரு வேலை. ஊதியமின்றி சுயதிருப்திக்காக. நண்பர்கள் வட்டாரமும் அப்படியே. அதுவும் தமிழெழுத பிடிக்கும். ஔவை தெரிந்த கம்ப்யூட்டர் காரன். எளிமையும் பிடிக்கும். ஆடம்பரமும் பிடிக்கும்.  இவனுக்கு இன்னும் திருமண எண்ணம் வந்ததில்லை. கல்லூரியில் இறுதி ஆண்டில் வந்த காதல் விண்ணப்பத்திற்கு,
          "நண்பன், காதலியிடம் காதல்கொடு
            என மன்மதனை வேண்டுகிறான்.
            இன்னொருவன், காதலிக்க காதலியாய்
            நீயே பெண்ணுருவம் எடுத்து வா
            என ரதியை வேண்டுகிறான்.
            காதல் செய்ய என்னிடம் காதலில்லை,
            நீயும் மன்மதனிடம் அழ வேண்டாம்
            காதல்தேடும் மன்மதனுக்கு காதலை தந்திடு ரதியே", என கவிலெட்டர் கொடுத்தான்.
             முதலில் கிழித்தெறியப்பட்ட கவிதை. அன்றிலிருந்து இன்றுவரை காதலிக்க காதலில்லை என்று திருமணமறுப்பு சொல்வான்.
             "டேய்! எப்பப்பாரு இதையே சொல்லாதே டா. உங்கப்பாவ கல்யாணம் பண்ணும்போது, அதுக்கு முன்னாடி 'மானே! தேனே! டியர்!' னுலாம் சொல்லியா கல்யாணம் பண்ணேன்? நிச்சயத்துல பாத்தேன். மூஞ்சு மனசுல ஏறுறதுக்குள்ள கல்யாணமே ஆயிடுச்சு. ஆனா நீயே கவித எழுதினல,
             'அம்மா அப்பா போட்டோவுக்கு மாலையிடுகையில்
               போட்டோவிலும் ஒரு காதல் சிரிப்பு
               இவ்வுலகிலன் சிறந்த காதல்'னு. கல்யாணம் பண்ணிக்கோடா.", என தன் மகனிடம் கூறினாள்.
             "என் தந்தை பிம்பத்தில் இருந்த அந்த காதல் சிரிப்பு
               எனக்கு இன்னும் எட்டாதூரத்தில். "
              "டேய். ஏன்டா? உனக்கெதாவது கோளாறா? இருந்தா வெட்கப்படாம சொல்லுடா. சரி பண்ணிடலாம்."
           
               "அம்மாவாசையில் இருள்!
                நிலா எங்கும் போய்விடவில்லை.
                பார்ப்பவர் பார்வைக்கு
                தெரியாமல் போய்விடுகிறது."
               
               "பதினஞ்சே நாள்ல பௌர்ணமி வந்துடுமே டா. "
             
                 "சாதுர்யம். என் தாயின் அழகு.
                 உன் போல் சாதுர்யம் என் கண்பட்டால்
                 பௌர்ணமி என்ன
                 அம்மாவாசையிலும் நிலவு மின்னும்."

               "இன்னிக்கென்ன ப்ராஜெக்ட் எதுவும் இல்லையா? இல்ல செல்போன் பேட்டரி தான் முடிஞ்சி போச்சா? ஒரே கவிதையா வருது?"
             
                 "ஏனோ என்னாவிற்கு கவிதை பசி
                 அல்சர் வராமல் பார்த்து கொளிகிறேன்"
           
                 "உன் கண்கள் அழகு, உன் புருவம் அழகு, உன் பற்கள் அழகுன்னு எழுதி இருந்த, இன்னிக்கு பேரன் எல்.கே.ஜி போயிருப்பான். போடா டேய். தோச ஊத்தறேன் சாப்புடு."
                "கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல. இப்ப எனக்கு தோனல. அவளோ தான்."
               "அம்மாவாசை நிலா. கேக்க நல்லா தான் இருக்கு. சீக்கரம் நிலவ கொண்டு வர பாரு.", என சமையலறைக்குள் நுழைந்தாள் பகவதி.
                   
                எப்படியேனும் கோடியைத்தொடவேண்டும் என்ற உத்வேகத்துடன் சப்வே சர்பில் மூழ்கியிருந்தான் கோபாலகிருஷ்ணன். சப்வே சர்பில் ஒரு வேகம் வந்துவிட்டால் அலுவலாவது டெக்னாலஜி அனலிஸ்ட் ஆவது. அப்பொழுது தமிழ் வட்டத்திலிருந்து ஒருவர் செல்லில் அழைத்து மாலை அவர் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வேலை முடிந்து நேராக நண்பர் கிஷோர் வீட்டிற்கு கிளம்பினான் கோபாலகிருஷ்ணன்.
               கிஷோர், நர்மதா, திவாகர், சந்துரு, கிரிதர், சுமதி- இவர்கள் கோபாலகிருஷ்ணனின் தமிழ் நண்பர்கள். இதில் கிரிதரும் சுமதியும் தம்பதியினர். தமிழ்பற்றினால் புரிதல் ஏற்பட்டு  திருமணம் செய்தவர்கள்.
               "என்ன? இன்னிக்கி பேச தலைப்பு கெடைச்சிருச்சா?", என எல்லோரையும் பார்த்து கேட்டான் கோபாலகிருஷ்ணன்.
              "சும்மா தான். எல்லாரும் சேர்ந்து ரெண்டு வாரம் ஆகுதே", என பதிலளித்தான் சந்துரு.
கோபாலகிருஷ்ணன்: "நல்ல விஷயம் தான்."
சுமதி                            : "அப்பறம் கிருஷ்ணன். இந்த வருஷம் கல்யாணம் பண்ணிடுவீங்க போல இருக்கே."
கோபாலகிருஷ்ணன்: "போங்க சுமதி. காதல் இல்ல."
கிஷோர்                       : "ஐயோ சீனியர்! போதும். அறமும் பொருளுமா இருந்தா எப்படி? இன்பம் எப்போ?"
கோபாலகிருஷ்ணன்: "இன்ப தேவதை வருவா. அப்போ சொல்றேன்.
நர்மதா                         : "இருங்கய்யா. எப்ப பாத்தாலும் கோபால் கல்யாணத்த பத்தியே பேசிக்கிட்டு. தோற்பன தொடரேல்."
கோபாலகிருஷ்ணன்: "நடக்காதுன்னே முடிவு பண்ணிட்டேங்களா?  ஏங்க இப்படி? அந்தம்மா தானே சொல்லிவெச்சிருக்கு மெல்லிநல்லாள் தோள் சேருன்னு. இன்னும் மெல்லிநல்லாள் கிடைக்கலைங்க."
நர்மதா                         : "அதுக்கு வீட்டுல பொண்ணு பாக்க சொல்லு. இல்ல நீ போ. இப்படியே இருந்தா?"
கோபாலகிருஷ்ணன்: "நடக்குங்க." "அப்பறம் கிஷோர். கல்கில உன் கதை படிச்சேன். காதல விட்டா உனக்கு வேற தெரியாதா?"
கிஷோர்                       : "படிச்சியா?"
கோபாலகிருஷ்ணன்: "ம். ஏன்டா இப்படி?"
கிஷோர்                       : "ஒவ்வொரு கதையிலயும் காதல் இப்படில்லாம் வரும்னு உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். நீ கல்யாணம் பண்றேன்னு தெரியட்டும், உன் நிச்சையத்தன்னிக்கே நல்லா சோழனுக்கும் சேரனுக்கும் நடக்குற மாதிரி ஒரு யுத்த சரிதரமே எழுதறேன்.
                  இவ்வாறே சென்ற இவர்கள் உரையாடல்கள் இலக்கியங்களை படித்த புத்தகங்களை எல்லாம் தொட்டு முடிவுக்கு வந்தது.
                   அப்பொழுது கிரிதர், "நம்ம ஃபிரண்ட் ரமேஷ் இருக்காருல்ல. அவங்க நண்பர்கள் ஒன்னு சேந்து ரெண்டுமூணு குழந்தைகள் இல்லத்துலேர்ந்து இருந்து பசங்கள் வரவழைச்சு தீபாவளிக்கு முன்னாடி டிரஸ் சாப்பாடு எல்லாம் குடுப்பாங்க. இந்த தடவ கூப்புடுவாங்க. எல்லாரும் போலாம்." என முன்வைத்தான். எல்லோரும் வருவதாக கூறி கலைந்தனர்.
                 
                   மறுநாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு சென்றான் கோபாலகிருஷ்ணன். அவன் உள்ளே நுழையும்போதே, "கோபாலகிருஷ்ணா! கோபாலகிருஷ்ணா! உன்ன வரன் கேட்டு ஜாதகம் வந்துருக்கு. முதல் ஜாதகம். பொண்ணுக்கும் முப்பத்திரெண்டு வயசு. உன்னோட ரெண்டு மாசம் கம்மி. வயசு கம்மியா இருந்தா போதுமே, வருஷம் என்ன? மாசம் என்ன? பண்ணிக்கோடா." என கூறினார்.
                   "சொன்ன பாயின்ட் எல்லாம் ஞாபகம் இருக்குல்ல. அப்படி இருந்தா கண்டிப்பா பண்ணிப்பேன்."
                   "அதுவே போதும். அதுவே போதும். எங்க வேண்டாம்னு சொல்லிடிவியோன்னு பயந்துட்டேன்."
                  "என்ன தொந்தரவு பண்ணாதீங்க. வேண்டாம்னே இருந்தேன். எல்லாரும் முப்பத்தி ரெண்டு முப்பத்தி ரெண்டுன்னே பிரஷர் ஏத்தாதீங்க. இது என்ன காலை கடனா? நேரத்துல முடிக்கறதுக்கு. டோன்ட் பிரஷரைஸ் மீ வித் திஸ் மேரேஜ் திங். அங்க கிஷோர், கிரிதரும் கூட கல்யாணம் கல்யாணம்னு ஒரே புடுங்கல். திருப்பி சொல்றேன். டோன்ட் பிரஷரைஸ் மீ,"
                  "நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவடா. எட்டே நாள்ல அம்மாவாசை பௌர்ணமி ஆகும் பாரு."
                 "அம்மா, நீங்க இப்படி எல்லாம் நினைக்காதீங்க. அப்பறம் நடக்கலைனா கஷ்டமாயிடும்."
                "உனக்கு இந்த முற தோனும். நீ வேணும்னா பாரேன்.", என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
               
                 ஞாயிற்று கிழமை தீபாவளி விழாவிற்கு வருவதாக கூறியிருந்ததால் புறப்பட்டான் கோபாலகிருஷ்ணன். ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் இனிசியல் ஆர். அனைவரும் தங்கள் தந்தையின் பெயர் ராஜேஷ் என்று கூறியே ஆரம்பித்தனர். ராஜேஷ் அந்த குழந்தைகள் இல்லத்தை நடத்துபவர். இவ்வளவு நாட்கள் ஏன் இது போல் ஒரு எண்ணம் வரவில்லை என எண்ணினான். இனி நாமும் ஏதோ செய்ய வேண்டும் என்ற  எண்ணம் உள் எழுந்தது. அந்த இல்லத்தின் ஒரு ஆசிரியையை பார்த்து அம்மாவாசை சஷ்டி வரை சென்றது. முதல் காதல் என்றே சொல்லலாம். இறக்கத்தினால் வந்த ஒரு அதீத பிரியம். நற்குணம் பார்த்து காதல் வரலாம் என உள்ளிருந்துவ் ஒரு மாய குரல். கல்யாண பிரஷர் வேறு சேர்து அந்த ஆசிரியையை நோக்கி கோபாலகிருஷ்ணனை செலுத்தியது. மிக அருகில் சென்று, அப்பெண்ணின் கால்மேட்டியை பார்த்து சற்றே தோற்று திரும்பினான் கோபாலகிருஷ்ணன்.
               "எங்க காதலில்லாம கதை எழுத வேசிடுவியோனு ஒரு செகண்ட் பயந்துட்டேன். கோபாலகிருஷ்ணனை நம்பினோர் கைவிடப்படார். காதல சொல்லி ஒரு புரட்சி செய்ய வேண்டியது தானே!"
              "நீ வேற. உங்ககிட்ட தமாசுக்கு சொன்னேன். அவங்கள பாராட்டணும்னு தோனிச்சு. சேவைக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்துட்டேன். கருணை பார்த்து காதல் செய்ய கூடாது."
             "ஆமாம். கால் மெட்டி,கழுத்து தாலி இது போன்றவைகளையும் முதலில் பார்க்க வேண்டும்.", என கிஷோர் கூறினான்.

            "டேய். அவங்க வீட்டுக்கு போகணும். இன்னுமா கிளம்பல?", பெண் பார்க்க செல்ல தயாரான பகவதி கோபாலகிருஷ்ணனிடம் கூறினாள்.
            "போயிட்டு. பாவம் அந்த பொண்ண பாட்டு பாட சொல்லி, எதுக்கு மா?"
            "கச்சேரி பண்ண சொல்ல தான். நீ சினிமா நெறைய பாத்து கெட்டு போயிருக்க. நேரா போவோம். நாங்க பெரியவங்கல்லாம் பேசுறோம். நீங்க ரெண்டு பெரும் தனியா பேசுங்க. இப்படி அப்படின்னு ஒரு ஒருமணிநேரம் ஆக்கிடறேன். ஒரு செகன்டாவது தோணும்டா. எதாவது பொண்ணு கிட்ட ஒன் அவர் கண்டினுயஸா பேசிரிக்கியா?"
           "வை மாம்?"
           "ஸ்டார்ட் கிருஷ்."

            பெண் வீட்டினை அடைந்தனர். முதல் கவிதை கிழித்த பெண்ணே அங்கு வரனாய். கூட படித்தவள் என்று கோபாலகிருஷ்ணன் சொல்லிகொள்ளவில்லை. இருவரும் பேச சென்றனர்.
               
           "என்ன கிருஷ்ணன்? முடியெல்லாம் போய் சொட்டை?"
           "கிண்டலா? எப்படி இருக்க?"
           "நல்லா இருக்கேன்."
           "இன்னுமா கல்யாணம் ஆகல?" என்று கேட்கும் போதே நம்மாலே வேண்டாம்னோம் இவளுக்கு ஆவது கல்யாணம் ஆவது என்ற உள்ளோட்டம்.
          "காதல் தோன்றவில்லை." எத்தன தடவ இத சொல்லி டார்ச்சர் பண்ணியிருப்பே என்று இவளுக்குள் ஒரு உள்ளோட்டம்.
           "அய்யோ வேண்டாம்."
           "மன்மதன் கிடைக்கவில்லை."
           "பரவா இல்ல. பொண்ணு பாக்கற பேர் வழின்னு நமக்கு மீட் பண்ண ஒரு சான்ஸ்."
            இப்படியே பேசிக்கொண்டிருந்தால் ஒரு வேலை சரி என்று சொல்லிவிடுவோமோ என்று எண்ணி அந்த பெண், "ஆமாம். உன்ன எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது பா. மீட்டிங்னு சொன்னியே அதோட போதும்.", என்று கூறும் போதே பண்ணேன் ப்ளீஸ் என மனதின் குரல்.
             "ஆமாம். எஸ்கேப் ஆயிடு. பொண்ணுக்கு கொஞ்சம் ஹிப் சைஸ் ஜாஸ்தி, பிடிக்கலன்னு சொல்லிடறேன்."
             "ஏய்!"
             "இல்ல இல்ல. திருக்குறள்ல நாபத்திமூனாவது அதிகாரத்துக்கு பெயர் தெரியலன்னு சொல்லிடறேன். ஓகேவா?" என சொல்லும்போதே இவனுக்குள்ளும் ஒரு உள்ளோடல் அழகா இருக்கா பண்ணிக்கலாம்னு சொல்லிடலாம். ஆனா காலேஜ்ல ஓவரா கவிதைலாம்  சொல்லிட்டு வேறவழியில்லாம சொல்றான்னு பின்னாடி நினைக்ககூடாது என்ற பயம் கலந்த உள்ளோடல்.
            "சரி. நான் இப்போ அதே லெட்டர் தரேன். நீ ஒரு கவிதை எழுதி தரனும். உன் பதிலையே எழுதி தாயேன்." சரி என்று சொல்லிவிடுவான் என்ற நம்பிக்கை.
             "பதினோரு வருடங்கள்
               ரதி இன்னும் தன மன்மதனை தேடி
               மன்மதன் வருவான் என்ற ஒரு நம்பிக்கை
                இந்த ரதி அவ்வளவு நல்லவள்
                காதினில் இது கேட்டு கொண்டிருக்கிறது
                இந்த ரதிக்கில்லாத மன்மதனுக்கு."
               "தேங்க்ஸ். செரி போலாம் வா.", என கிளம்பினர். கோபாலகிருஷ்ணன் சென்றவுடன் அந்த கவிதையும் கிழிக்கப்பட்டது.

              "காதல் தோன்றிய பெண்ணுக்கோ காலில் மெட்டி
                இன்று காதல் சொல்ல வாய்ப்பு
                நிலா தெரியும் தருவாயில்
                ஈகோ சூரியன் மறைத்திற்று
                என்று சூரியன் விலகும்?
                என்று நிலா கண்ணில் படும்?
                என் தாய் நண்பர்களிடம் இருந்து தப்பிக்க
                கல்யாண பைத்தியம் இன்று நான் இந்த சூழலால்" என தனக்கு தானே கவியரங்கம் நடத்தி காரில் வீடு செல்கையில்  ஒரு இருபத்தியாறு வயது மதிக்கத்தக்க சேலை கட்டிய பெண் தெருவோரம் இருக்கும் பள்ளியிலிருந்து வெளியே வந்தால். கல்யாண பிரஷர்  குக்கர் வெடித்து அந்த பெண்ணை நோக்கி சென்றது. ஆறே மாதத்தில் நடந்தேறியது ராதாகல்யாணம் - கோபாலகிருஷ்ணன் கல்யாணம்.

No comments:

Post a Comment