Sunday, August 3, 2014

குணசேகரனின் தந்தை கந்தசாமி

"என்னத் தம்பி? சொகமா?", தன் வேலையை முடித்து வீடுத் திரும்பிய கந்தசாமி ஊரிலிருந்து வந்திருந்த மகனிடம் கேட்டார்.
"இருக்கேன்.", வேண்டா வெறுப்பாய் பதிலளித்தான் குணசேகரன்.
"என்னடாத் தம்பி? பிரயாணக் களைப்பா?"
"ஒன்னும் இல்ல."
"என்னடி லட்சுமி? புள்ள ஒரு மாறி பேசுது? சோறுப் போட்டியா?", தன் மனைவியிடம் பேச்சைத் திருப்பினார் கந்தசாமி.
"சாப்டுட்டான்."
"அம்மிணி தட்ட எடுத்து வை. இதோ வரேன்." என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றான் கந்தசாமி.

லட்சுமி கந்தசாமிக்கு உணவு பரிமாறினாள்.
"லட்சுமி. லூசு! புள்ளைக்கு ரேஷன் அரிசிச் சோத்தையாப் போட்ட?"
"இல்ல. அவன் இட்டுலிக் கேட்டான். நமக்குத்தான் ரேஷன் சோறு."
"பதறிட்டேன். புள்ள நாலு மாசத்துக்கு அப்புறம் வந்துருக்கு. நல்லா நாளைக்கு நண்டு வறுவல் செய்யனும். லாலி ரோட்டுப் பக்கம் சின்ன வயசுல அப்படித் திம்பான்."
"செஞ்சிடறேன்."

மறுநாள் காலை
"மணி அஞ்சரைக்கெல்லாம் புள்ளைய எழுப்பாதே அம்மிணி. எனக்கு வேல நான் கிளம்பனும். பையன் ஊர்ல தூங்குறானோ இல்லையோ எழுப்பாத. எட்டு வாக்குல எழுப்பி தோசையக் குடு. நான் நாளுக்கெல்லாம் வந்துடறேன்."
கந்தசாமி காக்கி சட்டையும் காக்கி டிரௌசரையும் அணிந்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டான்.

"கணேஷா! பையன் மெட்ராசுல இருந்து வந்துருக்கான். என்னம்மா சோக்காயிட்டான் தெரியுமா? கையில செல் போனு. பட்டனெல்லாம் இல்ல. விரல்ல தடவினாலே போதும். டச்சு. இந்த ப்ரூக்பீல்ட்ஸ், ஆர். எஸ். புறத்துக்கு வரவங்கல்லாம் வெச்சிருப்பாங்கல்ல, அது மாதிரி. ஆளும் கலர் ஆயிட்டான்."
"பின்ன என்ன? மெட்ராசுல இருக்கான். எப்படியும் பத்தாயிரம் கிட்ட வாங்குவானல்ல?"
"ஜாஸ்தி!! பதினாறு வாங்குறானாம். லட்சுமி சொல்லிச்சு."
"மகன் என்ன வாங்கிட்டு வந்தான்?"
என்ன  சொல்வதென்று சிறிது யோசித்து, " நல்ல வெளுப்பா சட்டையும், வேட்டியும்.  எதுக்கு குணானுக் கேட்டேன். மூஞ்சத் தூக்கிவெச்சிக்கிட்டான். போட்டு காமிச்சிட்டு வந்தேன் காலையில. ஜோடி ஆயிட்டான்.  போட்டோலாம் புடிச்சான் செல்போனுல."
"உனக்கென்ன சாமி. பையன் சிங்கக்குட்டி."
சிரித்தவாறேத் தலையசைத்தார் கந்தசாமி.

வேலை முடிந்து விடு திரும்பி குளித்துவிட்டு வந்தான் கந்தசாமி.
"அம்மிணி. குணசேகரன காணும்?"
"பிரிண்ட்ஸுகளோட படத்துக்கு போயிருக்கான். அப்படியே நைட்டு வெளில போய் சாப்டுட்டு வருவானாம். நம்மளத் தூங்கச் சொல்லிட்டான்."
"அது செரி. படத்துக்குப் போகட்டும். இளந்தாரிப் பையன் நம்மக்கூடயே உக்காந்து, நீங்கப் பாக்குற சீரியல்லாமாப் பாப்பான். போயிட்டு வரட்டும். சாப்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்குலாம்ல. தேவி ஸ்கூலுல இருந்து வந்துட்டாளா?"
"வந்துட்டேன் பா."
"வா வா. என்னச் சட்டப் புதுசா இருக்கு?"
"அண்ணன் வாங்கிக்குடுத்துச்சுப் பா."
"நல்லா இருக்கு அம்மிணி. லட்சுமி! லட்சுமி! நம்ம பிள்ளையப் பாத்தியா எவ்வளவுப் பாசமா தங்கச்சிக்கு புதுச் சட்ட வாங்கிக் குடுத்துருக்கு.", எனப் பெருமிதமாகக் கூறினார்.
"அம்மாவுக்கும் புடவை வாங்கியிருக்கு அப்பா."
"அப்படியா? அம்மிணி என் கிட்டச் சொல்லலையே! மறந்துருப்பாங்க."
 "ஆமாங்க. சொல்ல மறந்துட்டேன். சிவப்புக் கலர்."
"ம்ம்ம்..."

மணி பத்து அடித்தவுடன் தூங்கச் சென்றார் கந்தசாமி. தன் மகன் ஏன் தன்னிடம் பேசவே இல்லை என்றச்  சிந்தனை. அம்மாவுக்கும் தங்கைக்கும் புத்தாடை. தன்னை மறந்துவிட்டனோ என்ற சலனம். சின்ன வயதிலிருந்து அதட்டியதுக்  கூட இல்லை.ஏன் இந்த வெறுப்பு. நேரடியாய் கேட்கலாம். ஏதாவது காரணம் சொல்லி, இருந்தே இறக்கும் நிலை வேண்டாம் என்ற நிந்தனை. தூக்கம் சரி வர இல்லை. மண் ஒரு மணியளவில் வந்துத் தூங்கச்  சென்றதும் தெரியும்.  அப்படியே தூங்கலானார். மறுநாள் மதிய ரயிலில் மகன் கிளம்பிவிடுவான். நலம் விசாரித்ததோடு சரி. மகனின் மெட்ராஸ் வாழ்க்கையைப் பற்றிக் கேட்க வேண்டும். குடும்பத்துடன் பேரூர் கோவில் செல்ல வேண்டும் என்று ஆசைகள் ஆசைகளாகவேத் தொடரும் நிலை.

மறுநாள் காலை வேலைக்குப் புறப்பட்டார் கந்தசாமி. குணசேகரன் தூங்கிக் கொண்டிருந்தான்.
"எழுப்ப வேண்டாம். பத்தரமாப் போயிட்டு வரச் சொல்லு. நான் வரேன்.", என்று சொல்லிவிட்டு, தூங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்து ஒரு புன்னகைத்து வேலைக்குச் சென்றான்."

"கணேஷா! என்ன இன்னிக்கி லேட்டு."
"நேத்து நைட்டு செரியாத் தூங்கல."
"சரக்கு அடிச்சியா?"
"ஆமாங்க."
"எதுக்கு கணேஷா போதையெல்லாம், நாளைக்கு உன்னப்பாத்தே உன் பிள்ளக் கெட்டுப்போகக் கூடாதல்ல?"
"சரிதானுங்க."(சொல்லும் போதே லேசாய் கணேசன் கண்களில் கண்ணீர்)
"சரின்னு சொன்னா மட்டும் பத்தாது. விட்டுறணும். செரி அத  விடு, நேத்து நான், லட்சுமி, மவன், மவ எல்லாரும் பேரூர் கோவில் போனோம். புள்ளக்  கூட்டிட்டுப்போனான்."
"அப்டியா அண்ணேன்?"
"ஆமாம். பஸ்சுல போயிட்டு பஸ்லயே வந்துட்டோம். இன்னிக்கிக்  கிளம்பறான்."

வேலை நடுவே, "இப்போதைக்கு  ரோட்டுல செய்வோம். ஒரு மணிக்கு ஒரு வேல இருக்கு, அத முடிச்சிட்டு இறங்கலாம்.", என கந்தசாமிக் கூறினார்.
"சரி அண்ணேன்", என ஆமோதித்தார் கணேசன்.

ஒரு மணி அளவில் ரயில் நிலையம் அருகில் வந்து சேர்ந்தார் கந்தசாமி. சுமார் இருபது நிமிடங்கள் கழித்து குணசேகரன் ரயில் நிலையம் அடைந்தான். அவனை வழியனுப்ப லட்சுமியும் தேவியும் வந்திருந்தனர். ரயில் கிளம்பிச் செல்லும் வரை ஓரமாய் இருந்து பார்த்துவிட்டு வேலைக்குத் திரும்பினார்.

தேவி வீடுத் திரும்பியவுடன், "அம்மா! ஸ்டேசன்ல கீழக்கெடந்துச்சு."
"கீழக்கெடந்துத எல்லாம் ஏன் எடுக்கறத் தப்பு. புதுசா இருக்கேக் கொடு.", என்றுக் கூறி வாங்கிக்கொண்டாள்."

(சொல்லும் போதே லேசாய் கணேசன் கண்களில் கண்ணீர்)
முந்தைய இரவு - அரசு மதுபானக் கடை.
தட்டுத்தடுமாறிக் கொண்டே கணேசன் வீடுத்திரும்பத் தயாரானார். குணசேகரன் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தான். பார்த்துவிட்டுத் தள்ளாடிக் கொண்டே அவனிடம் சென்றார்.
"குணசேகரா! கந்தசாமி அண்ணேன் மகன் நீ! நீ குடிக்கலாமா?" என்று கூறி அவன் கைகளைப் பிடித்தார்.
"கை எடு டா?"
"தம்பி. என்ன டான்னுலாம் சொல்லுற?"
"பீ அள்ளுற நாய். இஷ்டத்துக்கு கை வெப்பியா?"
"தம்பி. பாத்துப் பேசணும்."
"கிட்ட வராத ஒரேச் சாக்கட நாத்தம், அப்பன மாதிரியே."
"தம்பி (அழுதவாறே). அப்பா!..", என்று ஏதோ சொல்ல வர.
"டேய்! உன் அப்பா சாக்கட கிளீன் பண்றவரா?", எனக் கூடி இருந்த நண்பன் ஒருவன் கேட்க
"பைத்தியக்காரன் உளருறான் டா. எங்கப்பா லக்ஷ்மி மில்ஸ்ல சூப்ரவைசர். பீ அள்ளுற நாய் போதைல என்னமோ உளறுது.",என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கணேசன் அழுதவாறே புறப்பட்டான்.

வேலை முடிந்து கந்தசாமி வீடுத்திரும்பினான். குளித்துவிட்டு டீ.வீ  முன் அமர்ந்தான்.
"அம்மிணி. புள்ள பத்தரமாக் கிளம்பிட்டானா?"
"ஆங். கிளம்பிட்டான். என்ன நல்லாத் திட்டினாங்க?"
"ஏன்?"
"நேத்து நைட்டு வாட்சு வாங்கிருக்கான். உங்களுக்கு.குடுக்கணும் காலைல எழுப்புன்னு சொன்னான்.நீங்க எழுப்பவேனாமுன்னு சொன்னீங்களா, ஏன் சொல்லலேன்னுத் திட்டினான்?"
"அப்டியா?"
"ஆமாங்க. இந்தாப் போட்டுக்குங்க." என்று எடுத்துக் கொடுத்தாள்.
"எனக்கெதுக்கு வாட்ச் எல்லாம்? வெச்சி வை. அப்பறமாப் போட்டுக்கறேன்.", என்றுக் கூறிவிட்டு கடிகாரத்தை ஒரு முறைப் பார்த்துவிட்டு நாதஸ்வரம் பார்க்கத் தொடங்கினார்.

லட்சுமி தண்ணீர்ப்  பிடிக்க வெளியே சென்றபோது, "தேவி."
"என்னப்பா?"
"அப்பா! உங்க அண்ணன் வயசு இருக்கும் போது தங்க மோதரம் வேல செய்யும்போது கெடச்சது. வீட்டுக்காரர் கிட்டக் கூப்பிட்டுக் கொடுத்தேன். என் மக நீ! கீழ இருந்து எடுத்து வீட்டுக்கெல்லாம் கொண்டு வரகூடாது. "
"அப்பா!"
"நானும் ஸ்டேஷன் வந்துருந்தேன் நீ கீழ இருந்து எடுத்ததையும் பாத்தேன்."
"அப்பா.", அழுகுரலில்.
"அம்மிணி அழக் கூடாது. இனிமேல் செய்யாத. அம்மாக் கிட்ட நான் பாத்தத சொல்லாத. வருத்தப் படுவாங்க."
"செரிப்பா."
"என்ன! குணாவுக்குத் தான் அவங்க அப்பா சாக்கட அள்ளுறது பிடிக்கிலயாட்டு இருக்கு.", என்று கூறி தேவியின் கண்ணீரைத் துடைத்தார்.


'பீ மணம்' என்கிற துப்பரவுத் தொழிலாளர்களைப் பற்றிய  யூடியூப் காணொளியைப் பார்த்து மனதில் தோன்றிய கதை.

No comments:

Post a Comment