Saturday, December 9, 2017

கண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை

1960, மதராஸ்

கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என தெரு எங்கும் வண்டிகள். அன்று சுப்புலட்சுமி கச்சேரி வேறு.

கச்சேரி தெரு வாசி - கணபதி சுப்பிரமணியம். டெலிபோன்சில் வேலை. சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். வேலை நிமித்தமாய் வெளியூர் வாசியானதில் முதலாமவர். மனைவி கண்ணம்மா, மகன் கணேசன் என தனிக் குடித்தனம்.

"கண்ணம்மா! இன்னிக்கி சுப்புலட்சுமி கச்சேரி", ஆரம்பித்தார் சுப்பிரமணியம் .

காபியை ஆற்றிக் கொண்டிருந்தவாறே கண்ணம்மா, "நேத்தே கோவில் வாசல்ல அட்டைல எழுதி இருந்தது பாத்தேன். கண்டிப்பா போகணும். சுவாமிய பாக்க வராளோ இல்லையோ. அவாப் பாட்டுக்கு கூட்டம் கூடிடும். ஞாயித்துக் கிழமை வேற."

"சரியா சொன்ன. கிராமபோன் எல்லாம் இப்ப எம்.எஸ் பாட்டு தான்."

"நானும் நேர்ல பாக்கணும்னு அவ்வளவு ஆசப் பட்டேன். கோவில்லப் பாக்கற மாதிரி பண்ணிட்டான்."

"அத ஏன் கண்ணம்மா கண்ண கசக்கிண்டே சொல்ற?"

"ரெண்டு நாளா ஒரே எரிச்சல். கண் ஆஸ்பத்திரிக்குப் போனா சுலைமான் டாக்டர் டிராப்ஸ் தருவர். சரி ஆயிடும்."

"இப்படி எதையும் என் கிட்ட சொல்லாம  இரு. நாளைக்கு சாயங்காலம் சீக்கரம் வரேன், டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போறேன்."

காபியை அருந்தி விட்டு கோவிலுக்கு கிளம்பினர். சுப்புலெட்சுமியை நேரில் பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சி. வீடு திரும்புகையில் கண்ணம்மாவிற்கு இமைகள் வெடித்தாற்போல் ஓர் உணர்வு. வலியால் துடித்தாள்.

"அண்ணா! கண்ணெல்லாம் கட்ட எறும்பு கடிக்கற மாதிரி இருக்கு."

"என்ன கண்ணம்மா இப்படி சிவந்துருக்கு. தூசி ஏதாவது விழுந்துருக்கும்.", என்று சொல்லி விட்டு தன அங்கவஸ்திரத்தை அவிழ்த்து வாயினில் ஊதி அவள் கண்களில் வைத்தார்.

"எல்லாரும் பாக்குறா."

"பாக்கட்டும். ரெண்டு நாளா கண் வலின்னு சொல்ற. இப்ப வேற இப்படி செக்கச்செவேல்னு எம்.எஸ். உடுத்திண்டு வந்த புடவை கலர் மாதிரி ஆயிடுத்து உன் கண்ணு. நாளைக்கு நான் ஆபிஸ் லேட்டா போயிக்கிறேன். ஒன்பது மணிக்கெல்லாம் சுலைமான் டாக்டர் கிட்டப் போயிடலாம்."

"எம்.எஸ். புடவையத்தான் பாத்துண்டு இருந்தேளா?"

"பாத்தேன். அவளோ செவப்பா பளிச்சுனு இருந்ததே. உனக்கு வாங்கினா நல்லா இருக்குமேன்னுப் பாத்தேன். சந்தேகத்தப் பாத்தியா உனக்கு? ராமனே தோத்துடுவான் உன் ஆத்துக்காரன் கிட்ட."

"அதையும் பாக்குறேன்."

அடுத்த நாள் காலை. சுலைமான் டாக்டரிடம் கிளம்பினர். ஆய்வுகள் எல்லாம் செய்தார் சுலைமான் டாக்டர்.

"கணபதி சார்! உங்க மனைவிக்கு கண்ணுல இருக்கற நரம்புல பிரச்சனை. வலி இன்னும் அதிகம் ஆகும். கார்னியால இருந்து மூளைக்கு போற நரம்பு. நீங்கப் படிச்சவங்க சொல்றத  புரிஞ்சிப்பீங்க. உங்க கிட்ட சொல்றேன் அவங்க கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அவங்க பார்வை கொறஞ்சிக்கிட்டு இருக்கு. கார்னியா ரெண்டு கண்ணுலையும் இனபெக்ஷன்ல அஃபக்ட் ஆயிருக்கு, ஆபரேஷன் பண்ணாலும் பிரயோஜனம் இல்ல. இன்னும் சில நாட்கள் தான் அவங்களுக்கு பார்வை."

கணபதி எதுவும் பேச முடியாது அமைதி ஆனான்.

"சாரி கணபதி."

"டாக்டர் இப்போ கண்ணம்மா கிட்ட சொல்ல வேண்டாம். நீங்க வைட்டமின் மாத்திரை எழுதித் தாங்க. அவக்கிட்ட தூசி, அடுப்புக் கரி கண்ணுல பட்டதுனால எரிச்சல்னு சொல்லி குடுங்க. நான் சமயம் பாத்து சொல்லிக்கறேன்."

கணபதி சொன்னவாறே செய்தார் டாக்டர். வலி மிகாமல் இருக்க மாத்திரைகள் வழங்கினார்.

நாட்கள் செல்ல பார்வை மங்குவதாய் உணர்ந்தாள் கண்ணம்மா. டாக்டர் சுலைமான் கருணையில் ஒரு கண்ணாடிப் பொருத்தப்பட்டது.

"கணபதி சார்! கண்ணம்மா கிட்ட இன்னும் சொல்லலையா நீங்க?"

"தைரியம் வர வெச்சிட்டு இருக்கேன் சார்.  டிரான்ஸப்ர் கிடைச்சிருக்கு. நாகர்கோவிலுக்கே. மே மாசம் அங்க மாறனும். இங்க இருந்தா அவளுக்கு கஷ்டம். அங்க பாத்துக்க நிறைய பேர் இருகாங்க."

"கடவுள் காப்பாத்துவான் கணபதி சார். நான் உங்களுக்காக துஆ பண்றேன்."

"நன்றி சார்."

பங்குனி முடிந்து சித்திரை பிறந்தது. வாசலில் கோலமிட்டுவிட்டு வந்தாள் கண்ணம்மா.

"கோலம் போட்டாச்சா?"

"போட்டாச்சுண்ணா."

சற்று முன்னே சென்றவள் பின்னே வந்து
"இந்த சுலைமான் டாக்டர் வைத்தியம் படிச்சிட்டு வந்தாரா என்னன்னே தெரியலை. புள்ளிய வெச்சிட்டு பாத்தா ஒன்னும் தெரியலையேன்னு தெரியறவரைக்கும் போட்டேன். பக்காத்தாத்து கிரிஜா வந்துட்டு புள்ளியையே கோலம் அளவுக்கு போடுறையேன்னு கேலி பண்றா. கண்ணாடிப் போட்டும் நல்லா தெரிஞ்ச பாடு இல்ல. இன்னும் மோசமாயிண்டு இருக்கு."


"என்ன சொல்ற நீ? நல்லாத் தெரியும்போதே சிவாஜி படம் வந்துருக்கு. தெய்வப்பிறவி. பாத்துடலாம். பிளாசா தியேட்டர்ல போட்டுருக்கானாம்."

"நான் வரல."

"கணேசன் படம் கண்ணம்மா. சிவாஜி கணேசன் படம். உன் பையனுக்கு கணேசன் பெயர் வைக்க ஒத்த கால்ல நின்ன."

"போகலாம்."

மாலை படம் முடிந்து வீடு திரும்பினர்.

"அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம். அன்பாலே தே...டிய என் அறிவு செல்வம் தங்கம்.", சுருதி கட்டிப் பாடினார் கணபதி.

"படுக்கைல என்ன முதலிரவுப் பாட்டு.?"

"எவ்வளவு நல்லா இருந்தது அந்தப் பாட்டு. படம் பிடிச்சதா?"

"பிடிச்சது. கண்ணுதான் சரி இல்ல. சிவாஜி யாரு, எஸ்.எஸ்.ஆர் யாருன்னுத் தெரியல. குரல் வெச்சுக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. பாடும் போது மட்டும் அவருக்கு ரெண்டு குரல் பாத்தேளா?"

"மக்கு. சிவாஜி பாட மாட்டார். அவர் வாயசைப்பார். பாட தனியா ஆள் இருக்கா. அவா பாடினதையும் இவா வாயசைக்கரதையும் சேர்த்துடுவா. இன்னும் பாகவதர் காலத்துலயே இருக்க."

"அது சரி. வயசானவர் பாடுற மாதிரி இருந்தது அந்தப் பாட்டு."

படுக்கையில் படுத்துக் கொண்டே பேச்சு தொடர்ந்தது.

"நாகர்கோயில் மாற்றம் கேட்டிருக்கேன் கண்ணம்மா. மே மாசம் அங்க போக சொல்லுவா போல இருக்கு ஆபீஸுல. இதே உத்தியோகம் தான். இறச்சகுளத்துல இருந்தே சைக்கிள்ல போயிட்டு வந்துடலாம்."

"நீங்களே மாற்றம் கேட்டேளா?"

"ஆமாம் கண்ணம்மா."

"மெட்ராஸ்ல தான் நல்ல முன்னேற முடியும். அது இதுன்னு சொல்லி கூட்டிண்டு வந்தேள்."

"நம்ம கோவில் தாணு ஐயரோட சக்கர பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை மாதிரி இங்க எவனும் பண்ணலையே."

"இது ஒரு காரணமா?"

"உன் கண் வேற சரி இல்லைன்னு சொல்றியே கண்ணம்மா."

"அதான் சுலைமான் டாக்டர் மருந்து குடுத்துருக்காரே."

"கண்ணம்மா! நான் உன்கிட்ட மறைச்சிட்டேன். உனக்கு கண்ணுல பார்வை கொறஞ்சிண்டு வருது. இன்னும் கொஞ்சம் நாள்ல உன் பார்வை முழுசா போயிடும்னு டாக்டர் சொன்னார். நீ எப்படி கண்ணம்மா இங்க தனியா கஷ்டப்படுவ? அங்க என் அம்மா, உங்க அம்மா எல்லாரும் இருக்கா?"

அழுது தீர்த்தாள் கண்ணம்மா. தூங்கிக் கொண்டிருந்த கணேசன் சிலுசிலுத்தான். ஏதேதோ புலம்பி தீர்த்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா! அழாதே. வெப்ராளப் படாதே.  இனி உனக்கும் சேர்த்து நான் பார்ப்பேன். அழாதே.", உருகினார் கணபதி.

மே 1961, இறச்சகுளம்

ஊர் உள்ளே வரும் பொழுது நாவல் மரங்களும், தென்னை மரங்களும் சுகமாய் காற்றைத் தந்தன. சுற்றியிருக்கும் மலைகளில் மேகம் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தது

"சாமி, விடுமுறையா? பங்குனி உத்திரத்துக்கு வரலையே. இந்த முற சரியான சாமியாட்டம். பூதத்தானும் வந்து போனபாடு இல்லையே."

"அப்படியா? செல்லையா நான் லீவுல வரல. இங்கையே மாத்தி வந்துட்டேன். நாகர்கோவில்ல தான் ஜோலி."

"நல்லதா போச்சு சாமி."

"எத்தனை தடவ சொல்லிருக்கேன் சாமின்னு கூப்பிடாதான்னு."

இந்த சம்பாஷனை தொடர, கண்ணம்மா சுற்றியும் பார்த்துக் கொண்டு வந்தாள். மரங்களின் பச்சையும், சாலையின் மண் நிறமும், குளங்களின் நீர் நிறமுமே அவள் கண்களுக்குத் தெரிந்தன. நிறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு. மரங்களின் உயரத்தை வைத்து நாவல், தென்னை, வாழை என வகைப்படுத்திக் கொண்டாள்.

கண்ணம்மாவிற்கு தனக்கு திருமணம் ஆன பதினாறு வயது வரை இறச்சகுளம் தான் உலகம். ஒவ்வொரு அடியும் அத்துப்படி. படிகளில் ஏறுவது, வீட்டின் முகப்பில் ஓட்டில் இடித்துவிடாமல் குனிந்து செல்வது எனப் பார்த்துக்கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல நிறங்களும் தெரியாது இருள் மட்டுமே தெரிந்தது கண்ணம்மாவிற்கு.

"கண்ணம்மா பாசமலர்னு ஒரு படம் சிவாஜி கணேசன் நடிச்சது போலாமா?"

"நான் என்ன அண்ணா பாக்கறது? இருட்டுத் தவிர ஒன்னும் தெரியல இப்ப எல்லாம். கணேசன் சமத்து தொந்தரவு பண்ணாம புரிஞ்சிண்டு இருக்கான்."

"அவன் நம்ம பையன். சமத்தா தான் இருப்பான். நாளைக்கு சாயிங்காலம்  ஆட்டத்துக்கு பாசமலர் போறோம். தயாரா இரு."

படத்துக்கு கிளம்பினர். வசனங்கள் இல்லாது காட்சிகளால் புரியவைக்கும்படி இருக்கும் இடங்களில் கணபதி விளக்கினார், கணபதியின் கண்கள் வழி திரைப்படம் பார்த்தாள்  கண்ணம்மா.

"கண்ணம்மா படம் பிடிச்சதா?"

"எனக்கு அழுகையே வந்துடுத்து."

"பார்த்தேனே. அந்த மலர்ந்தும் மலராத பாட்டுல என்னமா அழுத? முன்னாடி உட்கார்ந்தவன் வெள்ளம்னு நெனைச்சிட்டான்."

"சிவாஜிக்கு இந்த குரல் பொருத்தமா இருக்கு. அவரே பாடுற மாதிரி.  அந்த தெய்வப்பிறவி பாட்டு கிழவன் பாடின மாதிரி இருந்தது."

ஊரில் திரும்பி வரும்பொழுது கண்ணுத் தெரியாதவளுக்கு பாசமலர் படமாம். எதைக்கண்டானோ இந்த கண்ணம்மா கிட்ட என கிராமம் முழுதும் காதுப்படவே பேச்சுக்கள்.

நாட்கள் சென்றன. நேரில் எல்லோரும் அன்பாய் பேசினாலும், குருடிக்கு வாழ்வைப் பார் எனப் பேச்சுக்களும்.

"போன வாரம் செல்லையன் வயல் பணம் கொடுத்தான். நல்ல விளைச்சல் இந்த வருஷம். அந்தப் பணத்துல உனக்கு ஒரு ஆரமும் வளையலும் வாங்கினேன். போட்டு விடட்டா?"

"எனக்கெதுக்கு அண்ணா நகை. குருடிக்கு"

"அப்படிச் சொல்லாத கண்ணம்மா."

"எனக்குன்னு ஏன் இப்படி செலவு? பார்க்கவும் முடியாது, நான் ஊர் முன்னாடி தங்கத்துல மின்னிண்டு என்ன பிரயோஜனம்."

"கோவில்ல தினமும் தாணு சாமிக்கு எல்லாம் நகைல அலங்காரம் செய்யுறான். சாமிக் கேட்ட மாதிரி நான் பார்க்கலையே. இல்ல சாமி தான் பாத்துக்கறதா தனக்கு இந்த இந்த நகைப் போட்டுருக்கு, இந்த இந்த பூ சாத்திருக்குன்னு."

"உடனே கடவுளப் பழிக்காதேள்."

"நான் மாட்டி விடட்டா?"
மாட்டி விட்டார் கணபதி.

யக்ஞ மாமா வாசலில் இருந்து கணபதியின் பெயரை அழைத்தார்.

"வாங்கோ! யக்ஞ மாமா. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு. இப்பதான் கண்ணு தெரிஞ்சதா?"

"எனக்கு நல்லாத் தெரியறது. உனக்கும் தெரியறதான்னு கேட்டுண்டுப் போக வந்தேன்."

"சண்டை போடவந்துருக்கேளா? உக்காருங்கோ."

"கணபதி! உன் ஆத்துக்காரிக்கோ கண்ணு சுத்தமாத் தெரியலை. கணேசனும் சின்ன பையன். நீ நல்லா சம்பாதிக்கற. சர்க்கார் உத்தியோகம், நல்ல வயல் எல்லாம் இருக்கு."

"என்ன சொல்ல வரேள் மாமா?"

காபி எடுத்து வந்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா கோவில்ல தாணு பாயாசம் தரேன்னு சொன்னான். அவன் நாகர்கோயில் போகணுமாம். கொஞ்சம் வாங்கிண்டு வாயேன்."

கண்ணம்மாவும் கணேசனும் கோவில் கிளம்பினர். இருவரும் காபி அருந்தினர்.

"கணபதி. திருப்பதிசாரத்துல வெங்கடேசன் வாத்தியார் இருக்கார் இல்லையா. கோமதின்னு அவளுக்கு ஒரு பொண்ணு. திவ்யமா பாடுவா. நல்ல அழகு. சாவித்திரி மாதிரி. நான் சொன்னேன்னா."

"மாமா. நீங்க எதப் பேச வரேள்னு புரியறது."

திரும்பி வந்த கண்ணம்மா வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

"கணபதி குறையிருக்கு டா  அவளுக்கு, நீ என்னடான்னா சினிமா, நகைன்னு கண்ணுத் தெரியாதவளுக்கு இவ்வளவு செலவு பண்ணுற. இளமைய வீணாக்காதே."

சற்றே கோபம் ஆனார் கணபதி.

"அவளுக்கு என்னைய்யா குறைய கண்டீரு. காபி அவப்போட்டது தான். நல்லா இருந்ததா?"

"காபி போட்டா?"

"நல்லா இருந்ததா? இல்லையா? சொல்லும்."

"நல்லா இருந்தது."

"சக்கரைக்கு பதிலா உப்போ, பாலுக்கு பதிலா மோரோ குடுத்தாளா?"

"இல்லை. காபியும் இதுவும் எப்படி சரியாகும். குறை இருக்கே."

"எனக்குத்தான்  குறை. குன்னத் தொங்கிடுத்து. அவளுக்கும் மாப்பிள்ளை பாரு."

"ஏன் இப்படி எல்லாம் பேசற?"

"மாமா. நான் மரியாதையா சொல்லிக்கறேன். இதப் பத்தி பேச நம்மாத்துக்கு வர வேண்டாம். இங்க தான் நானும் அவளும் இனிமேல் வாழணும். புரிஞ்சிண்டு இருப்பேள் அப்படின்னா சந்தோசம்."

திண்ணையில் அமர்ந்திருந்த கண்ணம்மாவிற்கு கேட்காமலா இருந்திருக்கும்?

அன்று இரவு

"என்ன ஒரே சத்தம் யக்ஞ மாமாவோட."

"புஷ்கலா மாமி படுத்தறாளாம். பாவம் புலம்பித் தள்ளிட்டார்."

"வாசல்ல என் காதுல விழுந்தது."

"இதப் பற்றி பேச வேண்டாம். தூக்கம் வருது. நான் படுத்துக்கறேன்."

கண்ணம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டி எண்ணம். வார்த்தையால் சொல்லி என்ன பயன்? நெகிழ்ச்சியில் அவள் வாயடைத்தது. இதுவல்லவோ காதல் என எண்ணிக் கொண்டாள்.

குற்ற உணர்வோ என்னவோ? அடுத்த நாளிலிருந்து யக்ஞ மாமா தினமும் காபி அருந்த ஆஜர் ஆகிவிடுவார்.

தெரு குழந்தைகள் எல்லாம் கண்ணம்மா வீட்டு தோசை என்றால் ஓடி வந்துவிடுவர். குரலை வைத்து யார் என கண்டு கொள்வார் கண்ணம்மா. அன்பாய் முகத்தை வருடியும் பார்ப்பாள்.

இருபது வருடங்கள் கழித்து

"அம்மா! நான் கேட்டாக் கோச்சிக்க மாட்டியே?"

"கணேசா! கிட்ட வா."
முகத்தை வருடிக் கொடுத்தார்.

"என் முகம் உனக்கு ஞாபகம் இருக்கா அம்மா?"

சிரித்துக்கொண்டு,"முகத்துல தாடி எல்லாம் வந்துருக்கு கணேசனுக்கு."

"இருக்கா அம்மா?"

"இருக்குப் பா. மயிலாப்பூர்ல இருந்தோம். மூணு வயசு உனக்கு. அப்பப் பார்த்த முகம். இன்னும் ஞாபகம் இருக்கு."

"இப்போ எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லையா?"

"முடியாதேப் பா."

"உனக்கு ஏதாவது கற்பனை வருமா? எப்படி இருப்பான்னு தோனுமா?"

"அந்த மூணு வயசு குழந்தைக்கு மீசை மொளச்ச மாதிரி" என்று சிரித்தார்.

கணபதி  உள்ளே நுழைந்தார்.

"கண்ணம்மா! நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்கறையா?"

"எனக்கு எதுக்கு?"

"இன்னும் அழகாயிட்ட. தலையில அங்க அங்க வெள்ளி முடி. அவ்வளவு தான். எனக்கு தான் வழுக்கை. யக்ஞ மாமா மாதிரி,"
சிரித்துக் கொண்டாள் கண்ணம்மா.

தனது வழுக்கைத் தலையில் கண்ணம்மாவின் கையை எடுத்து வைத்தார் கணபதி. இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடின.

1996, இறச்சகுளம்

"பாட்டி, பாட்டி."

"ஆனந்த். பாட்டி தூங்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா?"

"பாட்டி, நீ தான் கூப்டா எழுந்துக்கற. தாத்தா எழுந்துக்கல."

"அவரத்  தொந்தரவுப் பண்ணாத."

மாலை நான்கு மணிக்கு காபி போட்டுவிட்டு கணபதியை எழுப்ப சென்றார். அப்பொழுதும் எழவில்லை.

"என்ன தூக்கம். ரிட்டயர்டு ஆனா ராத்திரி பகல் தெரியாம தூங்கறது. காபி ஆறறது. டேய் ஆனந்த். எழுப்பு டா தாத்தாவ. கணேசா! பாரு அப்பா இப்படித் தூங்கறாரு."

கணேசன் வந்து பார்த்துவிட்டு கதறி அழத்தொடங்கினான். புரிந்து கொண்ட கண்ணம்மா புலம்பிக்கொண்டே சமயலறைக்கு சென்றாள்.

"கண்ணுத் தெரியமாட்டேங்கறது கணேசா! இருட்டா இருக்கு கோமதி. ஆனந்த், ராதா பாட்டிக்கு கண்ணுத் தெரியலை."
இருவரின் அன்பை நன்கு அறிந்த கணேசனமும் அவரது மனைவியும் அமைதியாய் இருந்தனர்.

இந்த கதை எழுத காரணியாய் இருந்த உண்மை தம்பதி. புகைப்பத்திற்கு நன்றி திரு, ஆனந்த் 


என்றும் நன்கு அறிந்து காலடி வைக்கும் கண்ணம்மாவின் கால்களுக்கு அப்பொழுது ஒவ்வொரு அடியும் புதிதாய் இருந்தது. அவள் சற்று முன்னர் ஏற்றிய விளக்கு அவள் ஆடையைப் பற்றிக்கொண்டது.

"கண்ணுத் தெரியலையே கணேசா. கண்ணுத் தெரியலையே."
உடல் எரிவதைக் கண்ட ஆனந்த்

"அப்பா! பாட்டி பாட்டி", என அலறினான்.

"அம்மா"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா."

"அம்மா(அழுதவாறு)"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா. அவர் எழுந்துட்டாரா?"

"அம்மா!"

தண்ணீரை எடுத்து அவர் மேல் ஊற்றினான். நெருப்புக்  காயம் உடலெங்கும் இருந்தது.

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது. இருட்டா இருக்கு எனக்கு. அவர் எங்கே இருக்கார். ஆனந்த் தாத்தாவ எழுப்பு."


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு நாட்களில் உயிர் இழந்தார் கண்ணம்மா!

_____________________________________________________

உருக்மிணி - கண்களை இழந்த தேவதை. இவர்களை நேரிலும் பார்த்திருக்கிறேன். இவரது மகன் இராம்ஜி மற்றும் பேரன் ஆனந்த் இவர்களைப் பற்றி கூறும்போது நெகிழ்வாய் உணர்ந்திருக்கிறேன். அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடிய வாழ்க்கை. அவர்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாய்க் கொண்டு கற்பனை சிறுகதை. அனுமதி தந்த ஆனந்திற்கு நன்றி. என்னுடைய கதைகளில் எத்தனையோ மரணிக்கும் சம்பவங்கள் எழுதி உள்ளேன். இந்த கதையில் எழுதும்பொழுது அழுதேன். மனநிறைவு தந்த கதை.