Monday, June 13, 2016

இறச்சகுளத்தில் கெட் - டுகெதர்

                இறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்  ஆயிரம் கதைகள்
இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களில் ஒரு பத்து நாட்கள் அதீத மகிழ்ச்சியில் சூழ்ந்திருக்கும் இந்த வீடு. ஊரின் அழகினாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பதினால் சுற்றி இயற்கை அழகு சூழ்ந்த இடங்கள் இருப்பதினாலும் வருடம்  ஒரு பதினைந்து பேராவது கூடுவர் - கெட் டுகெதர் - ஃபேமிலி கேதேரிங்.

                 சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு பதினைந்து பேர் இயல்பாகவே வாழ்ந்தும் வந்தனர். இப்பொழுது பெருமாள் கோவில் காலை மாலை பூஜைக்கு பதினைந்து பேரை கூட காண முடியவில்லை.  கால மற்றும் அறிவியல் முன்னேற்றம்.

                 இந்த வருடம் உறவினர் கூடுதலுக்கான நாள் நெருங்கி வரத் தொடங்கியது. இந்த வீட்டு அம்மா. அறுபது வயது. சுறுசுறுப்பினையும் செயல்களையும் பார்த்தால் அப்படி சொல்லிட முடியாது - இளைஞர்களுக்கு இணையான வேகம்.  பாவம் இந்த அம்மாவிற்கு தனிமையைப் பரிசாக கொடுத்திருக்கிறது வாழ்க்கை. மகனிற்கு அயல்நாட்டில் வேலை. கணவர் பணி ஓய்வு பெற்று இறச்சகுளம் வந்து ஒரு வருடத்திலேயே இறந்து விட்டார். மூன்று வருடங்களாய் தனிமை வாழ்க்கை தான். வருடம் இருமுறை விடுமுறையில் மகன் வருவான். அதை ஒட்டி உறவினர்களும் வருவர். அந்நாட்களே இந்த அம்மாளுக்கு கொண்டாட்டம் - பொங்கல், தீபாவளி எல்லாம்.




                  தை அம்மாவாசை - அவரது திதி. இந்த வருடம் ஜனவரி இருபத்தி ஐந்து அன்று. புதன் கிழமை. இருபதாம் தேதியே மகன் வருவதால் மகனுக்கு பிடித்ததை செய்து தர வேண்டும் என்று இப்பொழுதே தயாரானாள். இன்னும் நான்கு நாட்கள் தான். பின்னர் பொங்கல் அதன் பின் ஐந்தே நாட்கள் மகன் வந்துவிடுவான். சென்ற வருடம் அவன் வரும்போது நட்ட செவ்வாழை மரம் நன்று வளர்ந்து இருந்தது. தன் கைபேசியில் அதனை படம் பிடித்து வாட்சப்பில் மகனுக்கு அனுப்பினாள். என்ன செய்வது என்று புரியாதவளாய் டிவி ரிமோட்டை அழுத்தினாள். அம்மாளின் பெயர் ராஜேஸ்வரி.

                 அம்மாளின் மகன் கிருஷ்ணன். நாட்கள் நெருங்க ஊர் செல்லத் தயாரானான்.பின்னர் வருவோர்க்கும் ஒவ்வொரு பொருளாக வாங்கினான். ஆண்கள் அனைவருக்கும் ஒன்றாய் இருப்பதுபோல் சட்டையும் வாங்கினான். மக்களிடம் சொல்லவும் இல்லை. சர்ப்ரைசாம். ஒவ்வொரு வருடமும் இருமுறை ஊருக்கு செல்வது வழக்கம். ஆனால் தை மாதம் தான் களை கட்டும். வாட்சப்பில் உறவினர்கள் வருவதை உறுதி செய்து கொண்டான். ஒவ்வொருவரும் சீரியாசனவர்களும் கேளிக்கை விரும்பிகளுமாய் கலவை செய்யப்பட்டவர்கள். மற்ற நேரங்களில் சீரியசானவர்களாய் அதிகம் தென்பட்டாலும், கூடும்பொழுது கேளிக்கை விரும்பிகளாகவே இருப்பர்.

                  ஒருவருக்கு அப்படி சீரியசான நிலைமை தான். பல வேலைகளில் இருந்து விட்டு டெஹல்கா என்ற நிறுவனத்தில் வேலை. அடித்தது ராஜயோகம் என்று பார்த்தால் அடுத்த நாளே அதன் முதலாளியின் கசமுசா காட்சிகள் வெளியே வர, புத்தகத்தின் விற்பனை குறைந்து அவல நிலை. டெஹல்காவில் வேலை என்றால் இவரே அந்த கசமுசா செய்தது போல் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு பணிவிடுப்பு இவர் மனதிற்கு தேவையாகவே இருந்தது. டெஹல்காவும் அவரது மனைவியும் வர ஆயத்தமாயினர். டெஹல்காவின் பெயர் ராமன். அவர் மனைவியின் பெயர் கவிதா. கிருஷ்ணனின் பெரியம்மா மகள்.

                  மற்றொருவர் இவர்களுடன் நன்கு பேசினாலும் இது போன்று மூன்று நான்கு நாட்களுக்கு வந்து சேர்ந்து இருந்ததில்லை. இவர் பெயர் ஹரன். ஹரன் மாப்பிள்ளை வருகிறார் என்ற சந்தோசமும் ராஜேஸ்வரி அம்மாளுக்கு இருந்தது.

                    சென்னையிலிருந்து ராஜேஸ்வரியின் அக்காள் குடும்பத்தினர், தங்கை, மற்றொரு அக்காளின் மகள் குடும்பத்தினர் என மொத்தம் பதினைந்து பேர் சேர்வதை எண்ணி ஒரே சந்தோசம் ராஜேஸ்வரிக்கு. எல்லோரும் சென்றவுடன் பல நாட்களுக்கு இந்த நினைவுகளே ஓடும் அவள் மனதில்.

                    முதலில் மகன் வந்தாயிற்று. அவள் முகம் மலர்ந்தது போல் அந்த வீடே மலர்ந்திருந்ததாய் தெரிந்தது. மகன் வந்தால் கூடுதல் சுறுசுறுப்பாகிவிடுவாள் ராஜேஸ்வரி. எல்லா வீட்டிற்கும் இவள் செய்த காய்கறிகள் போகும். மகன் அல்லவா வந்தது. தனிமைக்கு விடுமுறை கொடுத்து சுகமாய் மகனோடு செலவிடுவாள். என்ன தான் வாட்சப்பும் ஸ்கைப்பும் இருந்தாலும் கூட அமரசெய்து தான் செய்த உணவினை பரிமாறுவதைப் போல் வருமா? மகன் தான் செய்ததை நன்கு சாப்பிடுகிறானா என்று கவனிப்பாள். இன்னும் ஐந்து நாட்களில் மற்றவர்கள் வந்து விடுவார்களே. அப்பொழுது இதுபோல் உபசரிக்க முடியுமோ முடியாதோ? எதுவெல்லாமோ அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றும். ஆனால் பேச்செடுக்காமலே சென்று விடும். தனிமை பற்றி. அதை சொன்னால் கலங்கி விடுவானே. அவர் கனவில் வருவதை பற்றி. அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு. ஊரார் பேசும் புரளி பற்றி. திட்டிவிடுவானோ? திருமணம் பற்றி. ஓரிரு வருடம் போகட்டும் என்று சொல்லிவிடுவான் என அவளுக்குள்ளேயே பேசி நிறுத்திக் கொள்வாள். இருப்பினும் பேசியே பொழுதைக் கழிக்க தலைப்புகளா இல்லை. நாட்கள் அவ்வாறே சென்று திதியும் முடிந்தது. தனது பிள்ளைகள் மற்றும் பெயரன் பெயர்த்தி வருகிறார்கள் என்ற அந்த கூடுதல் சந்தோசம் அவள் பார்வையிலேயே தென்பட்டது. இன்னும் நான்கு நாட்களுக்குத் தான் என்று கூடவே மனம் சொல்லும்.

                      வாசலில் அழகிய கோலம் இட்டிருந்தாள்.
           
                      உறவினர்கள் அனைவரும் வந்திறங்கி ஆண்கள் ஆற்றில் குளிப்பது என்று தீர்மானமானது. செல்கையில் ராமன் தனது டெஹல்கா விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாக சொன்னார். ஹரன் ஊரின் அழகினை தனது கேமராவில் ஏற்றினார். விஜயன் தனது மருத்துவ கல்லூரி அனுபவத்தை தன் தந்தை சுரேஷிடம் பகிர்ந்து வந்தான். அடுத்து மூன்று நாட்களுக்கு கடல், அருவி, குளம், ஆறு, கோவில், சினிமா  என்று எங்கு செல்லலாம் எனத் திட்டமிட ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

                    "அஸ் யூசுவல் கன்னியாகுமரி, சுசீந்திரம் ஒரு நாள். நாளைக்கு போலாம். சனிக்கிழமை நல்லா இருக்கும். சண்டே மார்னிங் திற்பரப்பு ஃபால்ஸ் மட்டும் போயிட்டு வந்துடலாம். இவினிங் கிளம்பணும். இன்னிக்கி சங்கரன் கோவில் போலாம். 4 மணிக்கு வேன் வர சொல்றேன். காலையில லக்ஷ்மி அக்காக்கு  தெரிசனங்கோப்பு வைத்தியர்ட காமிக்கலாம்.", என்றான் கிருஷ்ணன்.
                     "சூப்பர் டா. ஆட்டம் பாட்டம்னு ஜமாய்ச்சிடலாம்.", என்றார் சுரேஷ்.

                     தான் வாங்கித்தந்த துணிகளை அனைவருக்கும் கொடுத்தான் கிருஷ்ணன். அப்படி ஒரு மகிழ்ச்சி ராஜேஸ்வரிக்கு. இதையெல்லாம் காண தன் கணவனில்லையே என்ற வருத்தம். காட்டாமல் இருந்தாள். வண்டியில் அனைவரும் ஆடி பாடி மகிழ்வதை கண்டு மகிழ்ந்தாள். தானும் பாடினாள். அனைவரும் வீடு திரும்பினர்.
                 
                    தன் அம்மாள் அறுபது வயதை அடைந்ததை காரணமாய் கொண்டு முன்பே உறவினர்களை வைத்து ஒரு காணொளி தயார் செய்திருந்தான் கிருஷ்ணன். அனைவர் முன்னரும் அதனைப் போட்டு காட்டினான். நெகிழ்ச்சியில் வாயடைத்தது ராஜேஸ்வரிக்கு.
     
                    அடுத்த நாள் கன்னியாகுமரியிலும் மகிழ்ந்தாள். மாங்காயை பார்த்தவுடன் ஆசை. தனது அக்காள் மகனிடம் கூறி வாங்கி சாப்பிட்டாள். படகு சவாரி முடிந்து கோவில் தரிசனம் முடிந்து சுசீந்திரம் தரிசனமும் முடிந்து வீடு அடைந்தனர். பாடல்களின் சத்தம் தெருவிற்கே கேட்டது. நாளையுடன் அனைவரும் சென்று விடுவர் என்பது அவள் மனதினில் அடித்தது.

                  "இது மாதிரி எல்லா வருஷமும் சேரணும் சித்தி. நான் மிஸ் பண்ணிட்டேன் போன வருஷம் எல்லாம்", என்று ஹரன் சொல்ல
                 "ஆமாம் பா", என்றாள் ராஜேஸ்வரி.
                 "சித்தி நிஜமா சித்தி. எவளோ வருத்தம் தெரியுமா வரதுக்கு முன்னாடி. மூணு நாள் இங்க வந்த தான் கொஞ்சமாவது மாறும்னு நினைச்சேன். இப்போ தான் ஃப்ரீ யா இருக்கு. ஏதோ கிருஷ்ணன் எங்கள கூப்டறான்.",  என்றார் ஹரன்.
                "அதான் அப்டி ஆட்டம் போட்டேன்களா வேன்ல?", என்று ராஜேஸ்வரியின் அக்கா விஜி கேட்க இடமே சிரிப்பில் மூழ்கியது.
             

                  ஏனோ அடுத்த நாள் ராஜேஸ்வரி திற்பரப்பு செல்லவில்லை. நாளை முதல் தனிமை வாசம் தான் என்று தெரிந்தபின்பு எதற்காக இன்றைய குதூகலம். வற்புறுத்தியும் சமைப்பதாக சொல்லி நின்று விட்டாள். அவளது அக்காளும் நின்று விட்டாள். அக்காள் அல்லவா? புரிந்து கொண்டாள்.

                 மதியம் அனைவரும் திரும்ப வந்தனர். வருத்தத்தை முகத்தில்
காட்டாது பரிமாறினாள்.
                       
                 மாலை சென்னை செல்பவர்கள், பெங்களூர் செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப, கிருஷ்ணனும் தான் அழைத்திருந்த டாக்ஸியில் திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட்டான். அவள் வாசலில் இருந்து அனுப்பிவிட்டு, ஜன்னல் வழியே ஒரு ஏக்கப் பார்வை பார்த்தாள். அந்த வீடும் மக்கள் பின்னர் எப்போ வருவர் என்ற ஏக்கப் பார்வை பார்ப்பது போல் இருந்தது.
             
                 உள்ளே சென்று தன் கணவனின் லேமினேஷன் ஃபோடோவைப் பார்த்து, "இனி நீங்களும் நானும் தான் கிருஷ்ணன் ஜூன்ல வரவரைக்கும்.", என்று  சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்றாள்.

             

No comments:

Post a Comment