Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Thursday, July 11, 2019

மகாநதி

      "பழையாத்துல இருந்து நேரா எடுத்து குழாயப் போட்டுட்டான். இனி வீட்டு பொம்பளைங்க எல்லாம் குடத்தத் தூக்கிட்டு குளம் வரைக்கும்  போக வேண்டாம்."



     "ஏலேய் சாத்தான்! அப்போ நீயும் போக வேண்டாம்! உங்க வீட்டு அம்மாவ குடம் கூடத் தூக்க விட மாட்டேங்கியேலே! உனக்கும் சவுரியமாப் போச்சு", சிரித்தவாறு சொன்னார் பூதலிங்கம்.



     இறச்சகுளம் பெருமாள் கோவில் தெரு, கீழத் தெரு, மேலத் தெருவென தெருவிற்கு ஒரு குழாய் போடப்பட்டது. என்றும் வற்றாத பழையாறு இறச்சகுளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏனைய இடங்களின் நீர்த் தேவையைப் பார்த்துக் கொள்கிறது.

இருபது வருடங்களுக்குப் பிறகு 

     "தாத்தா. உங்க  ஊரு தண்ணி ரொம்ப சுவீட்டா இருக்கு. வாட்டரே இவ்வளவு டேஸ்ட். சூப்பர்."
   "ஏலே மக்கா அரவிந்து! உங்க ஊரு இல்ல நம்ம ஊரு. மெட்ராஸ் போயிட்டா நீ இறச்சகுளம் இல்லையா? பழையாறு லே. உங்க அப்பா, நான், எங்க அப்பா எல்லாம் இந்தத் தண்ணி. மண்ணு, தண்ணியே நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்குது. தாத்தா பார்த்தியா எப்படி இருக்கேன்?"
    சாஸ்தா தெரு வழியே சென்றார்.
    "ஏலே சாத்தான்! ரெண்டு நாளா அகப்படவே இல்ல. என்ன லே வயசாயிடுச்சா?"
   "பெரிய குளத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு யாரு வேகமா வருவாப் பாப்போமா லே. வயசாயிடுச்சா? நம்புரான் குதிரைய ஒத்தையாளாத் தூக்கிடுவேன் லே."
   "போ லே சாத்தான்." 
   "பேரன் என்ன சொல்றான்?"
   "நம்ம ஊரு தண்ணி நல்லா இருக்காம்."
   "பழையாத்து தண்ணி மக்களே." சொல்லிக்கொண்டே சாஸ்தா நகர்ந்தார்.

மதிய உணவு முடித்துவிட்டு அரவிந்த் பூதலிங்க  தாத்தாவிடம் வந்தான்.
    "தாத்தா! பழையாறு"
    "வீராணமங்கலம் போகும் போது ஓடுதே அதான். ரிவர்."
    "ஐயோ தாத்தா அது எனக்குத் தெரியும். ரொம்ப ஆறு ஆறு னு அதையே சொல்றீங்க."
    "உங்க ஊருல பாட்டில்ல தண்ணி மக்களே. அதான் அப்படி கேக்கற. நம்ம தெருல என்ன கோயில் இருக்கு?"
    "பெருமாள் கோவில்."
    "சரி. நம்ம குளத்துக்கிட்ட நெறைய நெல் வயல் எல்லாம் இருக்கே."
    "ஆமாம்."
    "தட் பிளாங்ஸ்  டு கோவில்."
    "இது எதுக்கு சொல்றே?"
    "காரியமாத்தான். அந்த நிலம் எல்லாம் ஊருல ஒவ்வொருத்தர் பொறுப்பு. அவங்க அவங்க விவசாயம் பண்ணி பணம் எடுத்தக்கலாம். கோயிலுக்கு கொஞ்சம் நெல் கொடுத்தாப் போதும்."
   "அதுக்கு."
   "நிலத்துக்கு எப்படித் தண்ணி வருது தெரியுமா?"
   "அன்னிக்கு சொன்னியே! ஓடை."
   "பழையாறுல இருந்து பெரிய குளத்துக்கு வந்து, குளத்துல இருந்து ஓடை வழியாத் தண்ணித் திரும்ப வீராணமங்கலத்துல பழையாத்துல சேர்ந்துடும்."
  "அப்படியா?"
  "பழையாறு குடிக்கத் தண்ணி தருது, விவசாயத்துக்கு தருது அதுனால நமக்கு சோறு. மத்தியானம் சாப்பிட்டியே. நம்ம நிலத்துல வந்த அரிசி தான். வாழைப்பழம் நம்மத் தோட்டம். பழையாறும் நமக்கு பெருமாள் மாதிரி தான். அந்த தண்ணி குடிச்சு தான் பாத்தியா எல்லா வீட்டுலயும் தாத்தா, பாட்டி எல்லாம் ஸ்ட்ராங் ஆ இருக்காங்க."

  "தாத்தா கரெக்ட் தான். ஆனா நிறைய வீட்டுல தாத்தா பாட்டி மட்டும் தானே இருக்காங்க."
  "உங்க அப்பா மாதிரி எல்லாம் மெட்ராஸ், டெல்லி, அமெரிக்கா போயிட்டாங்க. ஊரெல்லாம் மெட்ராஸ் போய் அங்க தண்ணி இல்லாமப்  பண்ணியாச்சு. இங்கப் பாரு பழையாறு அவங்க எல்லாம் போயும் கோபம் இல்லாம விடாம கொடுத்துட்டு இருக்கு."
  
மறுநாள் குளத்திற்கு சென்று பூதலிங்கமும் அரவிந்தும் ஆசை தீர குளித்தனர். சிறு வயதில் குளத்தில் டைவ் அடித்த கதைகளை எல்லாம் கூறினார் பூதலிங்கம்.



வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

   "வீட்டுல பெரியவங்க இருக்காங்களா?"
   "தாத்தா ஒரு அங்கிள் வந்திருக்காங்க.", உள்ளே ஓடினான் அரவிந்த்.

   "யாரு மக்கா?"
   "சார். 'அக்வா குமரி'ன்னு தண்ணி கம்பெனில இருந்து வரோம் சார்."
   "தம்பி. பாக்க நம்ம கிட்டா மாதிரி இருக்கியே."
   "அவருக்கு மகன் ரங்கசாமி சார்."
   "மாமான்னு கூப்டு மக்கா. என்ன சார் எல்லாம்? என்ன கம்பெனி அப்போ?"
   "தண்ணி கேன் மாமா."
   "தயவு செஞ்சு போயிடு தம்பி."
   "ஏன் மாமா?"
   "நம்ம ஊருல தான் இல்லாம இருந்துச்சு. இங்கையும் வந்துடுச்சே."
   "மாமா நகரகோவில்ல எல்லாம் இருக்கு மாமா."
   "முட்டாளுங்க லே."
   "ஏன் மாமா?"
   "பழையாத்துல என்ன லே குறைய கண்டானுங்க? அதையே பாட்டில்ல போட்டுப் பணம் வேற? நம்ம பழையாறு பெருமாளு லே."
   "சரி மாமா! நான் வரேன்.", அடுத்த வீட்டுக்கு சென்றான்  
  
தான் வண்டியில் கொண்டு வந்த கேன்கள் எல்லாம் அவனோடுத் திரும்பின.

   "கிட்டாவுக்கு அறிவு வேண்டாம். பணம் வருதுன்னு அடச்சி வித்துட்டா, பணம் இருந்தா தான் தண்ணியும்னு ஆயிடாதா. பெருமாளே எல்லாருக்கும் புத்திய கொடுப்பா.", என்று வருந்திக் கொண்டார். 

 ஆற்றங்கரை, குளங்கள், வயல் வெளிகள் என அடுத்த ஐந்து நாட்களை அரவிந்த் தன் தாத்தாவுடன் கழித்தான். நீரும் மண்ணும் அவன் பால் காதல் கொண்டன. மண்ணின் மைந்தனின் வாசம் தெரியாதா மண்ணுக்கும் நீருக்கும்?

ஊருக்கு கிளம்பும் பொழுது இன்னும் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்தான்.
  
   "யப்போ! இது மணிகண்டன் ஆபிஸ் கொண்டு போற தண்ணி பாட்டில் இல்லையாப்போ?"
  " ஆமாம் தாத்தா. அப்பாவுக்கு ஒரு பாட்டில். லாஸ்ட் டைம் கொஞ்சூண்டு தண்ணி இருந்தது என் பாட்டில்ல. குடிச்சிட்டு எங்க ஊரு தண்ணி, எங்க ஊரு தண்ணின்னு சொல்லிட்டே இருந்தாரு. இப்போ முழு பாட்டில்."

அரவிந்தன் தன் தாயுடன் ஊர் திரும்பினான். சில தினங்களில் 'அக்வா குமரி'யின் கேன்கள் இறச்சகுளத்திலும் சில வீடுகளுள் நுழைந்தன. சில மாதங்களில் ஓரிரு விளை நிலங்கள் விலைபோக பிளாட்டுகளாக மாறியன.
சில இல்லங்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் குடும்பத்தினர் வருகையை நாள்காட்டியில் குறித்து எதிர்நோக்கி இருந்தனர். வாண்டுகளின் கண்ணாமூச்சி, சிறார்களின் படிப்பு, கிரிக்கெட், இளைஞர்களின் வேலை, பல பங்குனி உத்திரங்கள் என நாட்கள் சென்று கொண்டு தான் இருக்கிறது. பழையாறும் வற்றாது ஓடிக்கொண்டிருக்கிறாள். 

Monday, August 20, 2018

ஒன்பதும் அறுபத்தி இரண்டும்


"சித்தப்பா! கொல்கத்தாக்கு ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு. டெம்பரரி. ஆறு மாசம் தான். வெள்ளிக்கிழமை கிளம்புறேன்."கூறினான் சரவணன்.
"நித்யாவ கூட்டிட்டுப் போறியா?"
"இல்ல சித்தப்பா. நித்யாவும் குட்டியும் இங்க அம்மா கூட இருப்பாங்க. நவராத்திரிக்கு அங்க நாலு நாள் லீவு. அப்போ வருவேன். உடனே தீபாவளி. அப்படியே ஓடிடும்."
"நல்லதுப்பா."
"நான் கிளம்பறேன் சித்தப்பா."
"இருப்பா. திலகம்! திலகம்!!! என் சட்டப் பாக்கெட்ல பர்ஸ் இருக்கும். கொஞ்சம் எடுத்துட்டு வா."
"ஏன் சித்தப்பா பணம் எல்லாம்?"
"பெரியவங்க தந்தா வாங்கிக்கணும்."

ஐந்நூறு ரூபாய் சரவணன் கையில் சேர்ந்தது.

கொல்கத்தா

இதற்கு முன்னர் பணியில் சேரும் பொழுது வந்தது. மீண்டும் இப்பொழுது பன்னிரெண்டு வருடங்கள் கழித்து. டிராம்களை முந்திக் கொண்டு டோலிகஞ்ஜ் நோக்கி பயணப்பட்டது உபெர். சரவணன் தங்குவதற்கான வீடு முன்னரே தயாராய் பார்க்கப் பட்டிருந்தது. விமானத்திலிருந்து எடுத்து வந்திருந்த செய்தித்தாளின் பக்கங்கள் புறட்டப்பட்டன.

வீட்டில் இறங்கி சற்று தூங்கிவிட்டு மாலை தேநீருக்கு பால் வாங்க கிளம்பினான் சரவணன். படியில் இறங்கும் பொழுது ஒரு சிறுமி மேலே வந்தாள்.

புன்னகைத்துவிட்டு
"ஹை! வாட்ஸ் யுவர் நேம்?"
"பல்லவி நாயர்."
"ஓ! மலையாளி ஆனோ?"
"எஸ். நிங்களும் மலையாளி ஆனோ?"
"இல்ல. தமிழ்."
"அங்கிளிடே பேரு?"
"சரவணன்."
"பை அங்கிள்"வீட்டை நோக்கி கிளம்பினாள்.

சரவணனுக்கு ஹிந்தி தெரிந்தமையால் கொல்கத்தாவில் சமாளிக்க முடிந்தது. ரோட்டோர முடித்திருத்தகங்கள்இழுவண்டியில் மனிதர்களை இழுத்துச் செல்லும் தொழிலாளர்கள்மறுமுனையில் அடுக்குமாடி மகிழுந்து நிறுத்தம் - இவை அனைத்தையும் கண்டான். ஏற்றமும் தாழ்வும் தான் இந்தியா என எண்ணிக்கொண்டான். வீட்டின் நினைவு - மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பாய் சென்றது.

தேநீர் அருந்திவிட்டி தொலைக்காட்சி பார்க்கும் பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. கதவினை திறந்தான் சரவணன். சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி.

"பேட்டா. ஐ லிவ் இன் தி ஆப்போஸிட் ஹவுஸ். ஸ்ரீதேவி."
"கம் இன்."
"தமிழானோ?"
"ஆமாம்."
"நான் மலையாளி. பக்ஷே தமிழ் நல்லா தெரியும். கமலஹாசன் படம்இளையராஜா பாட்டு ரொம்ப பிடிக்கும். தமிழ் தான் பாப்பேன் டிவில.தமிழ் அப்டியே கத்துக்கிட்டேன்."
"பல்லவியோட பாட்டியா?"
"ஆமாம். பல்லவி மீட் பண்ணியாச்சா?"
"ஈவினிங் பார்த்தேன். ஸ்கூல் முடிஞ்சு டயர்டா வந்தாங்க."
சிரித்துவிட்டு, "நைட் என்ன சாப்பாடு?"
"வெளில போணும் ஆண்ட்டி. ஹோட்டல்."
"இங்க பக்கத்துல பெங்காலி ஹோட்டல் தான். சவுத்தும் கிடையாதுநார்த்தும் கிடையாது. கடுகு எண்ணெய்ல செய்வாங்க.நம்ம வீட்டுல சாப்பிடு. ஆப்பமும் பால்கறியும். பிடிக்குமா?"
தவிர்க்கும் விதமாய், "பரவா இல்ல ஆண்ட்டி."
"அதெல்லாம் இல்ல. நம்ம வீட்டுல சாப்பிடு."என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றாள். ஸ்ரீதேவி அழைத்த விதம்! யாராலும் மறுக்க முடியாது. சரவணன் வருவதாய் கூறினான்.

பல நாட்கள் பழகியவர் போல பழகுகிறார்களே! என்று ஆச்சரியப்பட்டான். எதிர்வீட்டு சாப்பாடு தகவலை மனைவிக்கு வாட்சப்பில் தெரியப் படுத்தி ஆயிற்று.

எட்டு மணி. மீண்டும் அழைப்பு மணி. இம்முறை பல்லவி.
"அங்கிள் சாப்பிட வாங்க."
"பல்லவிக்கு தமிழ் தெரியுமா?"
"பாட்டி எப்பவும் தமிழ் தான் பாப்பாங்க டிவில. அதுனால தெரியும்,"
"கியூட்டாப் பேசுறியே! எந்த கிளாஸ் படிக்கிற?"
"ஃபோர்த்."
"ம்ம்ம்ம்.."

பல்லவியின் வீட்டிற்கு சென்றான். கே டிவியில் அஞ்சான் ஓடிக் கொண்டிருந்தது. ஸ்ரீதேவி சமையல் அறையிலிருந்து வந்து
"மோனே! சாய குடிக்குமோ?" என்று கேட்டார்
"இல்ல ஆண்ட்டி. நான் இப்ப தான் குடிச்சேன்."
உள்ளே சென்று தன் கணவரை அழைத்தார். சரவணனை அறிமுகம் செய்து வைத்தார்.
"அங்கிளுக்கு தமிழ் பேச வராது. ஆனா புரியும்."என்று சிரித்தவாறே சொன்னார்.

சரவணனின் கண்கள் பல்லவியின் தாய் தந்தையரைத் தேடின. ஒரு படுக்கை அறை வீட்டில் ஐந்து பேராஹாலிலும் கட்டில் இல்லையே என்று மனவோட்டம். ஒரு பெரிய சைசில் பல்லவியின் புகைப்படம். தொலைக்காட்சியின் மேலே பாட்டியுடன் ஒரு புகைப்படம்.

நன்றி: www.alamy.com


உணவு முடிந்து

"ஆண்ட்டி பல்லவியோட பேரெண்ட்ஸ் காணுமே!"
"புவனேஸ்வர்ல இருக்காங்க."பதில் அளிக்கும்போதே முகம் மாறியது.
"ஓ! என்ன பண்றாங்க?"
"ட்ராவல் ஏஜென்சி."

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாஸடர் மகிழுந்தை வெளிநாட்டு நிறுவனம் வாங்கிய பின்னர் அதனை மறுபடியும் உற்பத்திக்கு கொண்டுவர ஆய்வு செய்யும் வேலை சரவணனுக்கு. மறுநாள் தன் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பினான். ரசம் செய்து கொஞ்சம் பல்லவி வீட்டிற்கு கொடுக்க எடுத்து சென்றான். வாங்கி வைத்து விட்டு தான் செய்த அவியலை எடுத்து கொடுத்தார் ஸ்ரீதேவி. கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் திரைப்படம் ஓடி கொண்டிருந்தது.

"மோனே! எதுக்கு சமைச்சதுஇங்க சாப்பிடலாமே."
"இல்ல ஆண்ட்டி."
"நீ எனக்கு மோனப்போல. இங்கையே சாப்பிடு."என்றார்.
"பரவாயில்லை ஆண்ட்டி. எதுக்கு கஷ்டம் உங்களுக்கு?"
"கொஞ்ச நாள்ல ஊருக்கு போக போகுது."
"இல்ல ஆண்ட்டி. ஆறு மாசம்."
"ஆறு மாசம் தானே மோனே."
தமிழர்கள் மட்டுமல்ல மலையாளிகளும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். சேரநாடு தானே என எண்ணிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் சரவணன் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
"வாங்க ஆண்ட்டி."
சுவற்றில் மாட்டியிருந்த படத்தை பார்த்துவிட்டு, "உங்க ஆள்காரா?"
"ஆமாம்."
"பேரு?"
"அம்மா லதாவைஃப் நித்யா. பாப்பா பேரு கண்ணம்மா."
"பாப்பா பெரு பழசா இருக்கே?"
"பாரதியார் பிடிக்கும். அதான்."
"சரி. சரி."
"சொல்லுங்க ஆண்ட்டி."
சிரித்த முகம் வாட ஆரம்பித்தது
"மோனே. பல்லவி முன்னாடி அவ பேரெண்ட்ஸ் பத்தி கேக்கண்டா."
என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாது அமைதியாய் இருந்தான். ஸ்ரீதேவியின் கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. சரவணன் இறந்திருப்பார்களோ என்று யோசித்தான்.

"மோனே! உன்ன என் மகன் மாதிரி நினைச்சி சொல்றேன். என் பொண்ண நான் சரியா வளர்க்கலையோன்னு எனக்கே தோன வெச்சிட்டாங்க."
ஆறுதல் தேடி வந்திருக்கிறார். எப்பொழுதும் சிரித்தபடி இருக்கும் முகத்திற்குள் ஏதோ ஒரு கடுஞ்சோக கதை இருப்பதை உணர்ந்தான்.

"என் பொண்ணு. பி.ஏ டூரிஸம் படிச்சது. ஒரு பெங்காலிய லவ் பண்ணி படிக்கும் போதே கல்யாணம் பண்ணாங்க. நாங்க வீட்டுலையே சேர்க்கல. அவளும் அவனும் டூரிஸம் ஏஜென்ஸி நடத்தினாங்க.. இவப் பெரியவளா அவன் பெரியவனான்னு எப்பவும் சண்டை. பல்லவி ரெண்டு மாச குழந்தை. விட்டுட்டு டைவர்ஸ் பண்ணிட்டாங்க. இங்க வந்து இருந்தா அதுக்கு அப்புறம். பொண்ணாச்சே சேர்த்துக்கிட்டேன். ஒரு ஒரிஸா காரனுக்கு பழசு எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணோம். குழந்தை இங்க இருக்கட்டும்னு சொல்லிட்டு போய்ட்டா. எட்டு வருஷம் ஆச்சு. சொல்லப் போன பல்லவி இங்க வந்தது இருந்தே நான் தான்பா அவளுக்கு அம்மா. அங்கிள் தான் அப்பா. முதுகே வலிக்கும் இருந்தாலும் பல்லவிக்காக எல்லா வேலையும் சிரிச்சிக்கிட்டே செய்வாரு. அங்கிள் பாவம். ஆனா ஒன்னு. என் குழந்தைய மாதிரி பல்லவி வரமாட்டா. கட்டுப்பாடும் சுதந்திரமும் ஒரு சேர வளர்ப்பேன். தப்பா நினைக்காத மோனே. பல்லவிக்கு விஷயம் தெரியும். இருந்தாலும் யாராவது கேட்டா அன்னிக்கு எல்லாம் அவ முகம் பார்க்கவே நல்லா இருக்காது. இங்க அவ அம்மா அப்பப்போ வந்துட்டுப் போகும். இருந்தாலும் நாங்க தான் அவளுக்கு எல்லாம். அதான்."

"பல்லவி நல்ல வருவா அம்மா. வேற எதுவும் சொல்ல என்னால முடியல."

அன்று இரவெல்லாம் சரவணனுக்கு தூக்கம் வரவே இல்லை. இந்த தாயுள்ளம் கொண்டவளுக்கு மகளையே விட்டு சென்ற ஒரு மகள் . எது காதல் என்றே தெரியாத தலைமுறையினர் என்ற கோபம். நான் தான் முக்கியம் என்று எண்ணி பெற்ற மகளை விட்டுச்செல்லும் அளவுக்கு இருக்கிறார்கள். ஸ்ரீதேவி அம்மா இருக்கிறார் என்ற உறுதியில் தனக்கென்று மற்றொரு வாழ்க்கையைத் தேடிச் சென்றிருப்பாளோ?  ஸ்ரீதேவியின் மகள் ஆயிற்றே ஈரம் இல்லாமலா இருக்கும்? இவள் புதுமைப் பெண்ணாஇல்லை தாயுமான பாட்டியாய் இருக்கிறாளே ஸ்ரீதேவி அம்மா. அவர் புதுமைப் பெண்ணாஎன்று கேள்விகள். இன்னும் சில வருடங்களில் பல்லவி தெளிந்தவளாய் வளர்ந்த பின்னர் வயது இடைவெளி பிரச்சனைகளைத் தாருமே. ஸ்ரீதேவி அம்மா -புதுமைப் பெண் - பார்த்துக் கொள்வார் என்று தனக்குத் தானே பதில் அளித்துக் கொண்டான்.

நாட்கள் சென்றன. பல்லவியுடன் நல்ல நட்பாகிக் கொண்டான். மாலை ஸ்ரீதேவி அம்மாவுடன் திரைப்படம்சனி ஞாயிறுகளில் ஒன்றாய் ஊர் சுற்றுதல் என்று சென்றது. நவராத்திரி விடுமுறைக்கு சென்னை செல்ல தந்து தாய்மனைவிகுழந்தைக்கு ஸ்ரீதேவி அம்மா வாங்கி தந்த ஆடைகளோடு ஆயத்தமானான்.

சித்தப்பா தந்த ஐந்நூறு ரூபாய் இவர்கள் ஒரு மாதம் முன்னே காளி கோவில் சென்றபோது வரிசையை மீறி செல்ல ஒரு ஹிட்லர் மீசைக்காரனிடம் காணிக்கையாய் சென்றது.

Saturday, December 9, 2017

கண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை

1960, மதராஸ்

கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என தெரு எங்கும் வண்டிகள். அன்று சுப்புலட்சுமி கச்சேரி வேறு.

கச்சேரி தெரு வாசி - கணபதி சுப்பிரமணியம். டெலிபோன்சில் வேலை. சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். வேலை நிமித்தமாய் வெளியூர் வாசியானதில் முதலாமவர். மனைவி கண்ணம்மா, மகன் கணேசன் என தனிக் குடித்தனம்.

"கண்ணம்மா! இன்னிக்கி சுப்புலட்சுமி கச்சேரி", ஆரம்பித்தார் சுப்பிரமணியம் .

காபியை ஆற்றிக் கொண்டிருந்தவாறே கண்ணம்மா, "நேத்தே கோவில் வாசல்ல அட்டைல எழுதி இருந்தது பாத்தேன். கண்டிப்பா போகணும். சுவாமிய பாக்க வராளோ இல்லையோ. அவாப் பாட்டுக்கு கூட்டம் கூடிடும். ஞாயித்துக் கிழமை வேற."

"சரியா சொன்ன. கிராமபோன் எல்லாம் இப்ப எம்.எஸ் பாட்டு தான்."

"நானும் நேர்ல பாக்கணும்னு அவ்வளவு ஆசப் பட்டேன். கோவில்லப் பாக்கற மாதிரி பண்ணிட்டான்."

"அத ஏன் கண்ணம்மா கண்ண கசக்கிண்டே சொல்ற?"

"ரெண்டு நாளா ஒரே எரிச்சல். கண் ஆஸ்பத்திரிக்குப் போனா சுலைமான் டாக்டர் டிராப்ஸ் தருவர். சரி ஆயிடும்."

"இப்படி எதையும் என் கிட்ட சொல்லாம  இரு. நாளைக்கு சாயங்காலம் சீக்கரம் வரேன், டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போறேன்."

காபியை அருந்தி விட்டு கோவிலுக்கு கிளம்பினர். சுப்புலெட்சுமியை நேரில் பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சி. வீடு திரும்புகையில் கண்ணம்மாவிற்கு இமைகள் வெடித்தாற்போல் ஓர் உணர்வு. வலியால் துடித்தாள்.

"அண்ணா! கண்ணெல்லாம் கட்ட எறும்பு கடிக்கற மாதிரி இருக்கு."

"என்ன கண்ணம்மா இப்படி சிவந்துருக்கு. தூசி ஏதாவது விழுந்துருக்கும்.", என்று சொல்லி விட்டு தன அங்கவஸ்திரத்தை அவிழ்த்து வாயினில் ஊதி அவள் கண்களில் வைத்தார்.

"எல்லாரும் பாக்குறா."

"பாக்கட்டும். ரெண்டு நாளா கண் வலின்னு சொல்ற. இப்ப வேற இப்படி செக்கச்செவேல்னு எம்.எஸ். உடுத்திண்டு வந்த புடவை கலர் மாதிரி ஆயிடுத்து உன் கண்ணு. நாளைக்கு நான் ஆபிஸ் லேட்டா போயிக்கிறேன். ஒன்பது மணிக்கெல்லாம் சுலைமான் டாக்டர் கிட்டப் போயிடலாம்."

"எம்.எஸ். புடவையத்தான் பாத்துண்டு இருந்தேளா?"

"பாத்தேன். அவளோ செவப்பா பளிச்சுனு இருந்ததே. உனக்கு வாங்கினா நல்லா இருக்குமேன்னுப் பாத்தேன். சந்தேகத்தப் பாத்தியா உனக்கு? ராமனே தோத்துடுவான் உன் ஆத்துக்காரன் கிட்ட."

"அதையும் பாக்குறேன்."

அடுத்த நாள் காலை. சுலைமான் டாக்டரிடம் கிளம்பினர். ஆய்வுகள் எல்லாம் செய்தார் சுலைமான் டாக்டர்.

"கணபதி சார்! உங்க மனைவிக்கு கண்ணுல இருக்கற நரம்புல பிரச்சனை. வலி இன்னும் அதிகம் ஆகும். கார்னியால இருந்து மூளைக்கு போற நரம்பு. நீங்கப் படிச்சவங்க சொல்றத  புரிஞ்சிப்பீங்க. உங்க கிட்ட சொல்றேன் அவங்க கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அவங்க பார்வை கொறஞ்சிக்கிட்டு இருக்கு. கார்னியா ரெண்டு கண்ணுலையும் இனபெக்ஷன்ல அஃபக்ட் ஆயிருக்கு, ஆபரேஷன் பண்ணாலும் பிரயோஜனம் இல்ல. இன்னும் சில நாட்கள் தான் அவங்களுக்கு பார்வை."

கணபதி எதுவும் பேச முடியாது அமைதி ஆனான்.

"சாரி கணபதி."

"டாக்டர் இப்போ கண்ணம்மா கிட்ட சொல்ல வேண்டாம். நீங்க வைட்டமின் மாத்திரை எழுதித் தாங்க. அவக்கிட்ட தூசி, அடுப்புக் கரி கண்ணுல பட்டதுனால எரிச்சல்னு சொல்லி குடுங்க. நான் சமயம் பாத்து சொல்லிக்கறேன்."

கணபதி சொன்னவாறே செய்தார் டாக்டர். வலி மிகாமல் இருக்க மாத்திரைகள் வழங்கினார்.

நாட்கள் செல்ல பார்வை மங்குவதாய் உணர்ந்தாள் கண்ணம்மா. டாக்டர் சுலைமான் கருணையில் ஒரு கண்ணாடிப் பொருத்தப்பட்டது.

"கணபதி சார்! கண்ணம்மா கிட்ட இன்னும் சொல்லலையா நீங்க?"

"தைரியம் வர வெச்சிட்டு இருக்கேன் சார்.  டிரான்ஸப்ர் கிடைச்சிருக்கு. நாகர்கோவிலுக்கே. மே மாசம் அங்க மாறனும். இங்க இருந்தா அவளுக்கு கஷ்டம். அங்க பாத்துக்க நிறைய பேர் இருகாங்க."

"கடவுள் காப்பாத்துவான் கணபதி சார். நான் உங்களுக்காக துஆ பண்றேன்."

"நன்றி சார்."

பங்குனி முடிந்து சித்திரை பிறந்தது. வாசலில் கோலமிட்டுவிட்டு வந்தாள் கண்ணம்மா.

"கோலம் போட்டாச்சா?"

"போட்டாச்சுண்ணா."

சற்று முன்னே சென்றவள் பின்னே வந்து
"இந்த சுலைமான் டாக்டர் வைத்தியம் படிச்சிட்டு வந்தாரா என்னன்னே தெரியலை. புள்ளிய வெச்சிட்டு பாத்தா ஒன்னும் தெரியலையேன்னு தெரியறவரைக்கும் போட்டேன். பக்காத்தாத்து கிரிஜா வந்துட்டு புள்ளியையே கோலம் அளவுக்கு போடுறையேன்னு கேலி பண்றா. கண்ணாடிப் போட்டும் நல்லா தெரிஞ்ச பாடு இல்ல. இன்னும் மோசமாயிண்டு இருக்கு."


"என்ன சொல்ற நீ? நல்லாத் தெரியும்போதே சிவாஜி படம் வந்துருக்கு. தெய்வப்பிறவி. பாத்துடலாம். பிளாசா தியேட்டர்ல போட்டுருக்கானாம்."

"நான் வரல."

"கணேசன் படம் கண்ணம்மா. சிவாஜி கணேசன் படம். உன் பையனுக்கு கணேசன் பெயர் வைக்க ஒத்த கால்ல நின்ன."

"போகலாம்."

மாலை படம் முடிந்து வீடு திரும்பினர்.

"அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம். அன்பாலே தே...டிய என் அறிவு செல்வம் தங்கம்.", சுருதி கட்டிப் பாடினார் கணபதி.

"படுக்கைல என்ன முதலிரவுப் பாட்டு.?"

"எவ்வளவு நல்லா இருந்தது அந்தப் பாட்டு. படம் பிடிச்சதா?"

"பிடிச்சது. கண்ணுதான் சரி இல்ல. சிவாஜி யாரு, எஸ்.எஸ்.ஆர் யாருன்னுத் தெரியல. குரல் வெச்சுக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. பாடும் போது மட்டும் அவருக்கு ரெண்டு குரல் பாத்தேளா?"

"மக்கு. சிவாஜி பாட மாட்டார். அவர் வாயசைப்பார். பாட தனியா ஆள் இருக்கா. அவா பாடினதையும் இவா வாயசைக்கரதையும் சேர்த்துடுவா. இன்னும் பாகவதர் காலத்துலயே இருக்க."

"அது சரி. வயசானவர் பாடுற மாதிரி இருந்தது அந்தப் பாட்டு."

படுக்கையில் படுத்துக் கொண்டே பேச்சு தொடர்ந்தது.

"நாகர்கோயில் மாற்றம் கேட்டிருக்கேன் கண்ணம்மா. மே மாசம் அங்க போக சொல்லுவா போல இருக்கு ஆபீஸுல. இதே உத்தியோகம் தான். இறச்சகுளத்துல இருந்தே சைக்கிள்ல போயிட்டு வந்துடலாம்."

"நீங்களே மாற்றம் கேட்டேளா?"

"ஆமாம் கண்ணம்மா."

"மெட்ராஸ்ல தான் நல்ல முன்னேற முடியும். அது இதுன்னு சொல்லி கூட்டிண்டு வந்தேள்."

"நம்ம கோவில் தாணு ஐயரோட சக்கர பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை மாதிரி இங்க எவனும் பண்ணலையே."

"இது ஒரு காரணமா?"

"உன் கண் வேற சரி இல்லைன்னு சொல்றியே கண்ணம்மா."

"அதான் சுலைமான் டாக்டர் மருந்து குடுத்துருக்காரே."

"கண்ணம்மா! நான் உன்கிட்ட மறைச்சிட்டேன். உனக்கு கண்ணுல பார்வை கொறஞ்சிண்டு வருது. இன்னும் கொஞ்சம் நாள்ல உன் பார்வை முழுசா போயிடும்னு டாக்டர் சொன்னார். நீ எப்படி கண்ணம்மா இங்க தனியா கஷ்டப்படுவ? அங்க என் அம்மா, உங்க அம்மா எல்லாரும் இருக்கா?"

அழுது தீர்த்தாள் கண்ணம்மா. தூங்கிக் கொண்டிருந்த கணேசன் சிலுசிலுத்தான். ஏதேதோ புலம்பி தீர்த்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா! அழாதே. வெப்ராளப் படாதே.  இனி உனக்கும் சேர்த்து நான் பார்ப்பேன். அழாதே.", உருகினார் கணபதி.

மே 1961, இறச்சகுளம்

ஊர் உள்ளே வரும் பொழுது நாவல் மரங்களும், தென்னை மரங்களும் சுகமாய் காற்றைத் தந்தன. சுற்றியிருக்கும் மலைகளில் மேகம் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தது

"சாமி, விடுமுறையா? பங்குனி உத்திரத்துக்கு வரலையே. இந்த முற சரியான சாமியாட்டம். பூதத்தானும் வந்து போனபாடு இல்லையே."

"அப்படியா? செல்லையா நான் லீவுல வரல. இங்கையே மாத்தி வந்துட்டேன். நாகர்கோவில்ல தான் ஜோலி."

"நல்லதா போச்சு சாமி."

"எத்தனை தடவ சொல்லிருக்கேன் சாமின்னு கூப்பிடாதான்னு."

இந்த சம்பாஷனை தொடர, கண்ணம்மா சுற்றியும் பார்த்துக் கொண்டு வந்தாள். மரங்களின் பச்சையும், சாலையின் மண் நிறமும், குளங்களின் நீர் நிறமுமே அவள் கண்களுக்குத் தெரிந்தன. நிறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு. மரங்களின் உயரத்தை வைத்து நாவல், தென்னை, வாழை என வகைப்படுத்திக் கொண்டாள்.

கண்ணம்மாவிற்கு தனக்கு திருமணம் ஆன பதினாறு வயது வரை இறச்சகுளம் தான் உலகம். ஒவ்வொரு அடியும் அத்துப்படி. படிகளில் ஏறுவது, வீட்டின் முகப்பில் ஓட்டில் இடித்துவிடாமல் குனிந்து செல்வது எனப் பார்த்துக்கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல நிறங்களும் தெரியாது இருள் மட்டுமே தெரிந்தது கண்ணம்மாவிற்கு.

"கண்ணம்மா பாசமலர்னு ஒரு படம் சிவாஜி கணேசன் நடிச்சது போலாமா?"

"நான் என்ன அண்ணா பாக்கறது? இருட்டுத் தவிர ஒன்னும் தெரியல இப்ப எல்லாம். கணேசன் சமத்து தொந்தரவு பண்ணாம புரிஞ்சிண்டு இருக்கான்."

"அவன் நம்ம பையன். சமத்தா தான் இருப்பான். நாளைக்கு சாயிங்காலம்  ஆட்டத்துக்கு பாசமலர் போறோம். தயாரா இரு."

படத்துக்கு கிளம்பினர். வசனங்கள் இல்லாது காட்சிகளால் புரியவைக்கும்படி இருக்கும் இடங்களில் கணபதி விளக்கினார், கணபதியின் கண்கள் வழி திரைப்படம் பார்த்தாள்  கண்ணம்மா.

"கண்ணம்மா படம் பிடிச்சதா?"

"எனக்கு அழுகையே வந்துடுத்து."

"பார்த்தேனே. அந்த மலர்ந்தும் மலராத பாட்டுல என்னமா அழுத? முன்னாடி உட்கார்ந்தவன் வெள்ளம்னு நெனைச்சிட்டான்."

"சிவாஜிக்கு இந்த குரல் பொருத்தமா இருக்கு. அவரே பாடுற மாதிரி.  அந்த தெய்வப்பிறவி பாட்டு கிழவன் பாடின மாதிரி இருந்தது."

ஊரில் திரும்பி வரும்பொழுது கண்ணுத் தெரியாதவளுக்கு பாசமலர் படமாம். எதைக்கண்டானோ இந்த கண்ணம்மா கிட்ட என கிராமம் முழுதும் காதுப்படவே பேச்சுக்கள்.

நாட்கள் சென்றன. நேரில் எல்லோரும் அன்பாய் பேசினாலும், குருடிக்கு வாழ்வைப் பார் எனப் பேச்சுக்களும்.

"போன வாரம் செல்லையன் வயல் பணம் கொடுத்தான். நல்ல விளைச்சல் இந்த வருஷம். அந்தப் பணத்துல உனக்கு ஒரு ஆரமும் வளையலும் வாங்கினேன். போட்டு விடட்டா?"

"எனக்கெதுக்கு அண்ணா நகை. குருடிக்கு"

"அப்படிச் சொல்லாத கண்ணம்மா."

"எனக்குன்னு ஏன் இப்படி செலவு? பார்க்கவும் முடியாது, நான் ஊர் முன்னாடி தங்கத்துல மின்னிண்டு என்ன பிரயோஜனம்."

"கோவில்ல தினமும் தாணு சாமிக்கு எல்லாம் நகைல அலங்காரம் செய்யுறான். சாமிக் கேட்ட மாதிரி நான் பார்க்கலையே. இல்ல சாமி தான் பாத்துக்கறதா தனக்கு இந்த இந்த நகைப் போட்டுருக்கு, இந்த இந்த பூ சாத்திருக்குன்னு."

"உடனே கடவுளப் பழிக்காதேள்."

"நான் மாட்டி விடட்டா?"
மாட்டி விட்டார் கணபதி.

யக்ஞ மாமா வாசலில் இருந்து கணபதியின் பெயரை அழைத்தார்.

"வாங்கோ! யக்ஞ மாமா. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு. இப்பதான் கண்ணு தெரிஞ்சதா?"

"எனக்கு நல்லாத் தெரியறது. உனக்கும் தெரியறதான்னு கேட்டுண்டுப் போக வந்தேன்."

"சண்டை போடவந்துருக்கேளா? உக்காருங்கோ."

"கணபதி! உன் ஆத்துக்காரிக்கோ கண்ணு சுத்தமாத் தெரியலை. கணேசனும் சின்ன பையன். நீ நல்லா சம்பாதிக்கற. சர்க்கார் உத்தியோகம், நல்ல வயல் எல்லாம் இருக்கு."

"என்ன சொல்ல வரேள் மாமா?"

காபி எடுத்து வந்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா கோவில்ல தாணு பாயாசம் தரேன்னு சொன்னான். அவன் நாகர்கோயில் போகணுமாம். கொஞ்சம் வாங்கிண்டு வாயேன்."

கண்ணம்மாவும் கணேசனும் கோவில் கிளம்பினர். இருவரும் காபி அருந்தினர்.

"கணபதி. திருப்பதிசாரத்துல வெங்கடேசன் வாத்தியார் இருக்கார் இல்லையா. கோமதின்னு அவளுக்கு ஒரு பொண்ணு. திவ்யமா பாடுவா. நல்ல அழகு. சாவித்திரி மாதிரி. நான் சொன்னேன்னா."

"மாமா. நீங்க எதப் பேச வரேள்னு புரியறது."

திரும்பி வந்த கண்ணம்மா வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

"கணபதி குறையிருக்கு டா  அவளுக்கு, நீ என்னடான்னா சினிமா, நகைன்னு கண்ணுத் தெரியாதவளுக்கு இவ்வளவு செலவு பண்ணுற. இளமைய வீணாக்காதே."

சற்றே கோபம் ஆனார் கணபதி.

"அவளுக்கு என்னைய்யா குறைய கண்டீரு. காபி அவப்போட்டது தான். நல்லா இருந்ததா?"

"காபி போட்டா?"

"நல்லா இருந்ததா? இல்லையா? சொல்லும்."

"நல்லா இருந்தது."

"சக்கரைக்கு பதிலா உப்போ, பாலுக்கு பதிலா மோரோ குடுத்தாளா?"

"இல்லை. காபியும் இதுவும் எப்படி சரியாகும். குறை இருக்கே."

"எனக்குத்தான்  குறை. குன்னத் தொங்கிடுத்து. அவளுக்கும் மாப்பிள்ளை பாரு."

"ஏன் இப்படி எல்லாம் பேசற?"

"மாமா. நான் மரியாதையா சொல்லிக்கறேன். இதப் பத்தி பேச நம்மாத்துக்கு வர வேண்டாம். இங்க தான் நானும் அவளும் இனிமேல் வாழணும். புரிஞ்சிண்டு இருப்பேள் அப்படின்னா சந்தோசம்."

திண்ணையில் அமர்ந்திருந்த கண்ணம்மாவிற்கு கேட்காமலா இருந்திருக்கும்?

அன்று இரவு

"என்ன ஒரே சத்தம் யக்ஞ மாமாவோட."

"புஷ்கலா மாமி படுத்தறாளாம். பாவம் புலம்பித் தள்ளிட்டார்."

"வாசல்ல என் காதுல விழுந்தது."

"இதப் பற்றி பேச வேண்டாம். தூக்கம் வருது. நான் படுத்துக்கறேன்."

கண்ணம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டி எண்ணம். வார்த்தையால் சொல்லி என்ன பயன்? நெகிழ்ச்சியில் அவள் வாயடைத்தது. இதுவல்லவோ காதல் என எண்ணிக் கொண்டாள்.

குற்ற உணர்வோ என்னவோ? அடுத்த நாளிலிருந்து யக்ஞ மாமா தினமும் காபி அருந்த ஆஜர் ஆகிவிடுவார்.

தெரு குழந்தைகள் எல்லாம் கண்ணம்மா வீட்டு தோசை என்றால் ஓடி வந்துவிடுவர். குரலை வைத்து யார் என கண்டு கொள்வார் கண்ணம்மா. அன்பாய் முகத்தை வருடியும் பார்ப்பாள்.

இருபது வருடங்கள் கழித்து

"அம்மா! நான் கேட்டாக் கோச்சிக்க மாட்டியே?"

"கணேசா! கிட்ட வா."
முகத்தை வருடிக் கொடுத்தார்.

"என் முகம் உனக்கு ஞாபகம் இருக்கா அம்மா?"

சிரித்துக்கொண்டு,"முகத்துல தாடி எல்லாம் வந்துருக்கு கணேசனுக்கு."

"இருக்கா அம்மா?"

"இருக்குப் பா. மயிலாப்பூர்ல இருந்தோம். மூணு வயசு உனக்கு. அப்பப் பார்த்த முகம். இன்னும் ஞாபகம் இருக்கு."

"இப்போ எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லையா?"

"முடியாதேப் பா."

"உனக்கு ஏதாவது கற்பனை வருமா? எப்படி இருப்பான்னு தோனுமா?"

"அந்த மூணு வயசு குழந்தைக்கு மீசை மொளச்ச மாதிரி" என்று சிரித்தார்.

கணபதி  உள்ளே நுழைந்தார்.

"கண்ணம்மா! நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்கறையா?"

"எனக்கு எதுக்கு?"

"இன்னும் அழகாயிட்ட. தலையில அங்க அங்க வெள்ளி முடி. அவ்வளவு தான். எனக்கு தான் வழுக்கை. யக்ஞ மாமா மாதிரி,"
சிரித்துக் கொண்டாள் கண்ணம்மா.

தனது வழுக்கைத் தலையில் கண்ணம்மாவின் கையை எடுத்து வைத்தார் கணபதி. இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடின.

1996, இறச்சகுளம்

"பாட்டி, பாட்டி."

"ஆனந்த். பாட்டி தூங்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா?"

"பாட்டி, நீ தான் கூப்டா எழுந்துக்கற. தாத்தா எழுந்துக்கல."

"அவரத்  தொந்தரவுப் பண்ணாத."

மாலை நான்கு மணிக்கு காபி போட்டுவிட்டு கணபதியை எழுப்ப சென்றார். அப்பொழுதும் எழவில்லை.

"என்ன தூக்கம். ரிட்டயர்டு ஆனா ராத்திரி பகல் தெரியாம தூங்கறது. காபி ஆறறது. டேய் ஆனந்த். எழுப்பு டா தாத்தாவ. கணேசா! பாரு அப்பா இப்படித் தூங்கறாரு."

கணேசன் வந்து பார்த்துவிட்டு கதறி அழத்தொடங்கினான். புரிந்து கொண்ட கண்ணம்மா புலம்பிக்கொண்டே சமயலறைக்கு சென்றாள்.

"கண்ணுத் தெரியமாட்டேங்கறது கணேசா! இருட்டா இருக்கு கோமதி. ஆனந்த், ராதா பாட்டிக்கு கண்ணுத் தெரியலை."
இருவரின் அன்பை நன்கு அறிந்த கணேசனமும் அவரது மனைவியும் அமைதியாய் இருந்தனர்.

இந்த கதை எழுத காரணியாய் இருந்த உண்மை தம்பதி. புகைப்பத்திற்கு நன்றி திரு, ஆனந்த் 


என்றும் நன்கு அறிந்து காலடி வைக்கும் கண்ணம்மாவின் கால்களுக்கு அப்பொழுது ஒவ்வொரு அடியும் புதிதாய் இருந்தது. அவள் சற்று முன்னர் ஏற்றிய விளக்கு அவள் ஆடையைப் பற்றிக்கொண்டது.

"கண்ணுத் தெரியலையே கணேசா. கண்ணுத் தெரியலையே."
உடல் எரிவதைக் கண்ட ஆனந்த்

"அப்பா! பாட்டி பாட்டி", என அலறினான்.

"அம்மா"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா."

"அம்மா(அழுதவாறு)"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா. அவர் எழுந்துட்டாரா?"

"அம்மா!"

தண்ணீரை எடுத்து அவர் மேல் ஊற்றினான். நெருப்புக்  காயம் உடலெங்கும் இருந்தது.

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது. இருட்டா இருக்கு எனக்கு. அவர் எங்கே இருக்கார். ஆனந்த் தாத்தாவ எழுப்பு."


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு நாட்களில் உயிர் இழந்தார் கண்ணம்மா!

_____________________________________________________

உருக்மிணி - கண்களை இழந்த தேவதை. இவர்களை நேரிலும் பார்த்திருக்கிறேன். இவரது மகன் இராம்ஜி மற்றும் பேரன் ஆனந்த் இவர்களைப் பற்றி கூறும்போது நெகிழ்வாய் உணர்ந்திருக்கிறேன். அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடிய வாழ்க்கை. அவர்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாய்க் கொண்டு கற்பனை சிறுகதை. அனுமதி தந்த ஆனந்திற்கு நன்றி. என்னுடைய கதைகளில் எத்தனையோ மரணிக்கும் சம்பவங்கள் எழுதி உள்ளேன். இந்த கதையில் எழுதும்பொழுது அழுதேன். மனநிறைவு தந்த கதை.

Friday, November 10, 2017

அன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி

அவன்: சார் காபியா? டீயா?
இவன்: காபியே சொல்லிடுங்க சார்
அவன்: ரெண்டு காபி தம்பி

அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம்
இவன்: என்ன சார்? என்ன ஆச்சு? நீங்க இந்த மாதிரிலாம் சொன்னா எப்படி?  சந்தோசமா  பாஸிட்டிவா இருந்தா தானே சார் நீங்க.
அவன்: என்ன பண்றது சார். நாம எல்லாருக்கும் அன்பு செஞ்சு நல்லது செஞ்சாலும், எல்லாரும் அப்படி நமக்கு திருப்பி நினைக்கறது இல்லையே. நன்றியும் மன்னிப்பும் சொல்றதுக்கு கூட மனசு இல்ல சார் பலருக்கு.
இவன்: புரியுது சார்
அவன்: நாம எல்லார் மேலயும்  காட்டுற அன்பு நமக்கு திருப்பி கெடைக்கலனா ஒரு சோகம் வருது பாருங்க. மன வேதன சார்.
இவன்: காபி எடுத்துக்குங்க சார்.


அவன்: நான் எதையும் எதிர்பார்த்து செய்யல. ஆனா அப்பப்போ மனசு கேக்குது சார்.
இவன்: ஹ்ம்ம்
அவன்: வெறுப்பு உணர்ச்சி வருது சார்.
இவன்: உங்கள பார்த்து பாசிட்டிவிட்டி தெரிஞ்சிக்கிட்டேன் சார். உங்களுக்கு இந்த மனநிலை இப்படி வந்துருக்க வேண்டாம். நான் ஒன்னு சொல்லட்டா சார்.
அவன்: சொல்லுங்க சார்
இவன்: இந்த அன்புக்கும் நியூட்டன் மூன்றாம் விதி மாதிரி இக்குவல் அண்ட் ஆப்போசிட் ரியாக்சன் கண்டிப்பா இருக்கு சார். கர்மான்னும் சொல்லலாம். தமிழ்லயே அழகா சொல்லிருக்காங்க தினை விதைச்சா தினை தான் சார்.
அவன்: எப்போ பா?
இவன்: கிடைக்கும் சார் நியூட்டன் காலத்த வெச்சி சொல்லலையே. இக்குவல் என்ன சார்? அதுக்கு மேலையே கிடைக்கும் அன்பு, காதல்ல எல்லாம்.
அவன்: பேச்சுக்கு நல்லா இருக்கு சார்.
இவன்: சார் உங்களுக்கு திருப்பி வரணும்னு இல்ல சார். உங்களப் பாத்து  நாலு பேரு ஏதாவது செய்யறான் சார். நான் அத நேர்லப் பாக்குறேன்.  அது கூட ஒரு ரியாக்சன். எங்கயோ படிச்ச ஞாபகம் சார். எதோ ஒரு மரம் வேர் விடறதுக்கே மாசங்கள் ஆகுமாம்.
அவன்: சரி. நீ சொல்றதே சரின்னு வச்சுக்குவோம். வஞ்சம் புடிச்சவன், ஏமாத்தி வாழறவன் எல்லாம் நல்லா வசதியா இருக்கானே.
இவன்: மாறும் சார். இங்கத் தொடங்குற அன்பும் நல்ல எண்ணங்களும்  பரவும் சார். அன்பு நிறைஞ்சிட்டா வஞ்சம் அழிஞ்சிடும். வஞ்சம் இன்னொரு பெரிய வஞ்சத்தால அழியறதோட அன்புனால இல்லாமப் போகட்டும் சார்.
அவன்: இந்த காபி மாதிரி புத்துணர்ச்சியா இருக்குப்பா நீ பேசுறது
இவன்: சார் உங்களுக்குப் போய்
அவன்: இக்குவல் ரியாக்சன் உணர்றேன் உங்க பேச்சுல.
இவன்: சார்!

Friday, August 18, 2017

கடநாட்டு மருதன்

  "எத்தனைப் போர் வீரர்களை இந்த நாட்டைக் கைப்படுத்த இழந்திருப்போம்! கொண்டாடடியே ஆக வேண்டும். அனைத்து செல்வந்தர்களும் தங்கள் செல்வங்களில் பாதியை தர வேண்டும். திருமணம் ஆகாத செல்விகளையும்" நமுட்டுச் சிரிப்புடன் ஆணையிட்டான் மருதன்.

         மருதன் கடநாட்டின் படைத் தளபதி. அசாத்திய வீரன். மிருகம். இவன் வாள் செலுத்தி எதிரியின் ரத்தம் இவன் முகத்தினில் தெளிப்பதையே இவன் மிகவும் விரும்பினான். இவன் வீழ்த்தாத நாடே எங்கென்றுத் தேட வேண்டும். கடநாட்டின் செல்வத்தைப் பெருக்கினான் - மக்களைக் கொன்று, செல்வங்களை கட்டாயப் படுத்தி அகப்பற்றி. மன்னனும் கண்டு கொள்ளவில்லை, தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்கு, தன் நாட்டு செல்வத்தேவைக்கு பிற நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டால் என்ன என்ற மனநிலை. மற்ற நாடெல்லாம் தனது கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். இவனேப் பெரியவன் என்ற மனநிலை. மன்னனின் பெயர் திரம்பன்.  

             முன்னர் செண்பக நாட்டில் நடந்த கதை மிகவும் கொடூரமானது.

  செண்பகநாடு - கடநாட்டின் கிழக்கே ஓர் அழகியத் தீவு. செல்வச் செழிப்பான நாடு.  வீரத்திலும் குறைவில்லாத நாடு. கடநாட்டுக்கு இணையான படை பலம். மருதனுக்குத் தான் ரத்த போதை ஆயிற்றே, செண்பக நாட்டின் செந்நீர் வாசனை அறிய எண்ணினான். செண்பகநாட்டு செல்வங்களை எடுத்துக் கொண்டால் கடநாடு செல்வநாடு ஆகிடுமே! திரம்பனிடம் அனுமதி பெற்று செண்பகநாட்டுக்குப் படை எடுத்தான்.  இரு பக்கங்களும் உயிர் இழப்புகள் இருந்தாலும் மருதனின் படையே வென்றது. 
யுத்தத்தில் வென்றால் தர்பாரைக் கூட்டி திரம்பனின் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து செருப்பை அரசராய் அறிவிப்பான். இது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட செருப்புகள் அரியணை ஏறி உள்ளன. பின்னர் செல்வந்தர்களை அழைத்து பாதி செல்வத்தையும், பெண்களையும் சூறையாடி சென்றிடுவான். செண்பகநாட்டிலோ இவன் தர்பாரில் பேசும் பொழுது சில இளைஞர்கள் கல்லை இவன் மேல் எறிந்தனர். "காட்டுமிராண்டியே வெளியே போ", என்று கூச்சல்கள் வேறு. தலை வெடித்தாற்போல் இருந்தது மருதனுக்கு.
             
          "பயமற்று கடநாட்டவரையே எதிர்க்கும் பொதுமக்கள். இந்நாட்டவர் ஒரு ஆண்  கூட உயிரோடு இருத்தல் ஆபத்தாய் முடியலாம். எத்தனை லட்சங்கள் ஆண்கள் இருந்தாலும் அவர்கள் இறக்க வேண்டும் கடநாட்டு  வாளினால்! போர் வீரன் கொள்ளும் ஒவ்வொரு ஆணின் வீடும் அவ்வீட்டின் பெண்டிரும் போர் வீரனுக்கு சொந்தம்.", ஆணையிட்டான் மருதன்  அனைத்து ஆண்களும் மாண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கும் அன்றே கடைசி நாள். இறை முறையால் செண்பக நாட்டுப் பெண்கள் போர் பயிற்சி இல்லாதவர்கள். முக்காடு அணிந்தே இருப்பர். பல பெண்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். ஆணில்லா நாடாக்கி சிதைத்தான் மருதன்.

      ஆதிரநாட்டை வீழ்த்தி செல்வங்களை சூறையாடி நாடு திரும்பினான் மருதன். மருதனுக்கு இருபத்தி ஏழு மனைவிகள். வெறிகொண்ட மிருகத்திற்கு அன்பு ஏது? காதல் ஏது? வெறியினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள். இவன் முதல் மகளுக்கு இருபத்தி நான்கு வயது, பதினைந்து வயதில்  கற்பமாய் ஒரு மனைவி வேறு. போர் இல்லாவிடில் இதுவே அவன் வேலை. 
_________________________________________________________________________________
   
   மருதன் வீரனாய் கிடைத்ததற்கு கடநாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எதிரி என்று நாட்டவருக்கு ஒருவர் இல்லை.  போரில் எல்லாம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மருதனால் உலகில் எந்த நாடு ஆயினும் கடநாட்டிற்கு அடிமை நாடு தான். மற்ற நாடுகளுக்கு வேலை கடநாட்டின் வேலைகளுக்கு பின்னிருந்து உதவி செய்வதே. கடநாடு தரும் எலும்புக்கு வேலை செய்யும் அடிமைகள் தான். கடநாட்டுமயமாக்கல்!அவரின் கோபமும் வெறியுமே கடநாட்டு மக்களை நிம்மதியாக செல்வத்தில் குறைவில்லாது வாழ வைத்தது. நாட்டு மக்கள் எல்லாம் தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு மருதன் என்று பெயர் வைத்தனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு மாதமும் நாலாயிரம் தங்கங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் எல்லாம் அவன் வீரத்தில் மயங்கி அவனை மணக்க விரும்பினர். அரசரின் ஒரு பெண்ணும் மருதனின் மனைவிமார்களில் ஒருவர். மருதன் பெண்களை சென்று சூறையாடவில்லையே. அவர்களே வருகின்றனர். 
            
    ஒரு முறை தெருவில் மருதன் நடந்து செல்கையில், ஒரு சிறுவன் அவனிடம்  வந்து தொலைவில் இருக்கும் மலையைக் காண்பித்து அந்த மலைக்கு அப்பால் என்ன உள்ளது என்று கேட்டான். அந்த சிறுவனை அங்கு கூட்டி சென்று அங்கிருக்கும் சிற்றரசை வீழ்த்தி விட்டு அந்த சிறுவனையே அரியணையில் அமர்த்தினான் மருதன். அத்தகைய மனது மருதனுக்கு. அந்த சிறுவன் சூரியனையோ, நிலவையோ, நட்சத்திரங்களையோ காண்பிக்கவில்லை. அங்கும் சென்றிடுவான் மருதன். 

_________________________________________________________________________________  
        அன்றைய இரவு மருதன் கண்ட கனவு அவனையே மாற்றியது. தண்ணீரே இல்லாமல் போய்விடுகிறது கடநாட்டில். உலகில் செண்பக நாட்டைத் தவிர வேறு எங்கும் தண்ணீர் இல்லை. தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து விட்டது. உணவும் இல்லை.  ஊரில் முக்கால் வாசி உயிர்கள் உயிரிழக்கின்றன. முட்டி மோதி உருண்டு புரண்டு செண்பக நாட்டிற்கு செல்கிறான் மருதன். ஒரு பெண்மணி குவளையில் தண்ணீர் சுமந்து செல்வதை கண்டு தண்ணீர் கேட்கிறான். வேகமாக குடித்து முடிக்கிறான் மருதன்.

     "என் தந்தைக்கு உங்கள் வயது தான் இருக்கும். உங்களுக்கு தண்ணீர் கொடுப்பது என் தந்தைக்கே தண்ணீர் கொடுப்பது போல் உள்ளது. அவர் இப்போது இல்லை. மருதன் என்கிற மிருகம் என் தந்தையை கொன்று விட்டது. என் தந்தையை மட்டும் இல்லை, எங்கள் ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும். பிற உயிர்களை கொள்வதில் என்ன இன்பமோ? இதோ ஓடுகிறதே தண்ணீர், அன்று ரத்தம் ஓடியது. மன்னிக்கணும் அய்யா. என் துயரமெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்", என்றாள்.

        அதனைத் தொடர்ந்து அவன் கொன்று குவித்த முகங்களெல்லாம் வந்து தண்ணீர் கொடுத்தன. ஆறுதல் வார்த்தை சொல்லின. மக்கள் எல்லாம் செண்பக நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள பெண்கள் தாயைப் போல் வரவேற்றனர். கனவின் நிகழ்வுகளுக்கு நினைவில் கண்ணீர் சிந்தினான் மருதன். 

     அடுத்த நாளிலிருந்து அவன் செயல்கள் மாறுதலாய் இருந்தன. தனது நூற்றி மூன்றாவது குழந்தையை தூக்கி கொஞ்சினான். இருபதாவது மனைவி செய்திருந்த சமையலின் சுவையை வாழ்த்தினான். அவள் பெயரை கேட்டறிந்தான். 

          சில நாட்களுக்குப் பின் சதயநாட்டின் செல்வ வளங்களை அறிந்து அங்கு செல்லுமாறு திரம்பன் மருதனுக்கு ஆணையிட்டான்.
       "அரசே! படைவீரனின் வேலை நாட்டைக் காப்பது. எவரேனும் நம் நாட்டை தாக்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் அந்த நொடியே அவனை வெட்டி சாய்ப்பேன். மற்ற நாடுகளை சூறையாடுவது இல்லை அரசின் வேலை. அது கொள்ளைக் கூட்டத்தின் வேலை. நாம் சிறந்த நாடு. கொள்ளைக் கூட்டம் அல்ல."
    "திடீர் மாற்ற நாடகம். மருதா! நான் கூறுவதற்கு மறுப்பா? இது எல்லாம் சரித்தரித்தில் உள்ளனவே. ஒரு அரசு மற்ற அரசுடன் போர் முனைவது நாட்டை கையகப் படுத்துவது - இது எல்லாம் பொதுவாய் நடப்பதுவே. மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகைக்கு எங்கு செல்வது? அவர்கள் வாழ்வு நிலை?"
     "மக்கள் உழைக்கட்டும் அரசே! நம் நாட்டில் இல்லாத வளமா? விவசாய நிலங்களெல்லாம் மக்களுக்கு என்று அறிவியுங்கள். மக்கள் அதன் மூலம் பயனடையட்டும். உலகெல்லாம் சென்று விற்கட்டும். பிற நாடுகள் எல்லாம் நமக்கு செய்யும் வேலைகளுக்கு கொடுக்கும் தொகையை நம் மக்களுக்கு கொடுங்கள். அவர்களுக்கு கிடைக்கட்டும். "
         "சிறையில் இடுங்கள் இவனை!"
    "என்னையா சிறையில் இடுவீர்!", மருதனின் வாள் வீச்சில் திரம்பனின் தலை முப்பது அடிகளுக்கு அப்பால் பறந்தது. 
       "மனிதர்களை மிருகம் ஆக்கி வைத்தவன் திரம்பன் தான். இன்றிலிருந்து நானே அரசன். அமைச்சர்களே! இன்றே நான் சொன்னதை எல்லாம் செயலாக்குங்கள். விவசாயம் பயிற்றுவிக்க சோழநாட்டு விவசாயிகளை அழையுங்கள்."
        தான் அகப்பற்றிய நாடுகளை எல்லாம் மீண்டும் அந்தந்த அரசுகளுக்கே வழங்கினான். மாற்று நாட்டுத் திருமணங்களை வரவேற்றான். திருமணமாகாத செண்பக நாட்டு பெண்களுக்கு தன்னாட்டு இளைஞர்களை மணம் முடித்து செண்பக நாட்டிற்கு அனுப்பினான். 
           
_________________________________________________________________________________

        கொண்டாடப்பட்ட மருதனுக்கு பைத்தியம் பிடித்தது. ஒரு கனவில் பிடித்த பைத்தியம். மன்னர் ஆக வேண்டி பைத்தியம். மன்னரிடம் நற்பெயர் வாங்க மருதன் தானாய் முன் சென்று சூறையாடிய நாடுகள் நாற்பத்தி இரண்டு. திடீரென்று போர் செய்யமாட்டாராம். மூப்பு, சென்ற போரில் தொடையில் வாங்கிய வெட்டால் மரண பயம். பித்தினை புரட்சி என்று அவனே கூறிக் கொண்டான். 
    மக்கள் இவனை அரசனாய் ஏற்று கொள்ள நிலங்கள், பரிசுகள். இதைக் கொடுத்தார் போல் கொடுத்துவிட்டு மானியங்களை நிறுத்திவிட்டான். கோகில நாடு போல் மக்களிடமே பணம் பிடுங்கி நாட்டை நடத்தும் நிலை வராதது மட்டும் தான் மீதம். 
      மூப்புத் தொற்றிட்டே! போர் செய்ய இயலாது. போரிட்ட நாடுகளை எல்லாம் அழைத்து நண்பர்களாக்கிக் கொண்டான். 

_________________________________________________________________________________

  மருதன் அனைத்து நாட்டினவரோடும் நன்கு நட்பு பாராட்டினான். அரசர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அனைவரும் இனி நட்பு பாராட்டுவதாகவும், பாதுகாப்புக்காக போர் என்ற நிலை மாற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினான். சுற்றியுள்ள நாடுகளெல்லாம் ஒதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டினை அந்நிலையில் இருந்து மீட்டான். அன்பு கரை புரண்டு ஓடியது. உலகெல்லாம் மருதனை கொண்டாடியது.

       சுயசரிதை வேறு எழுதினான், "முப்பத்தி ஏழு வயது வரை லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தேன். ரத்தத்தில் .குளித்தேன். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் என் தூக்கத்தில் நான் கொன்றவர்கள் என்னை அன்பு பாராட்டினார்கள். பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர் இப்படி பல. கனவில் கூட பழி நினைக்காத அன்பு தேவதைகளை கொன்றேன். மிருகம் மனிதன் ஆக இப்போது வரை முயற்சிக்கறேன். ஒரு வாழ்க்கை - வன்மம், வெறி, பகை எதற்கு? அன்பு பாராட்டுவோம். நான் தினம் தினம் இறக்கிறேன் குற்ற உணர்ச்சியில். வெறுப்பு வேண்டாம். தீமைகளெல்லாம் என்னோடு முடியட்டும். அன்பே ஆயுதமாய் இருக்கட்டும்." இவ்வாறு முடித்து இருந்தார்.

_________________________________________________________________________________

        
     மருதன் வரலாற்றை மாற்றி சொல்ல ஒரு சுயசரிதை வேறு எழுதினான். தனது பைத்தியக்கார செயல்களை நியாயப் படுத்த. போர் மறந்த வீரன் நேரம் போக வேண்டுமே. மூப்பும் இயலாமையும் தான் காரணம் அனைத்திற்கும். மன்னனாய்த் தன்னை தானே அறிவித்தப் பின் ஒரு புது மணம் கிடையாது. இருந்த எந்த மனைவியும் கற்பம் தரிக்கவில்லை. அந்தப்புரமும் வேண்டாம் என்று விட்டான். 
      அன்பின் அடையாளம் என்றொரு அடையாளம் வேறு. 
      ஒரு லட்சம் கொலைகள். ஒரு நாட்டின் ஆண்களையே இல்லாமல் செய்தது. மகளை விட இளைய மனைவி. இதையெல்லாம் சுருக்க சொல்லி அன்பின் அடையாளமாய் காட்டிக் கொள்ள ஒரு புத்தகம்! இது தான் மருதனின் வாழ்க்கை.
         
        
      


  
                                

Monday, June 13, 2016

இறச்சகுளத்தில் கெட் - டுகெதர்

                இறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்  ஆயிரம் கதைகள்
இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களில் ஒரு பத்து நாட்கள் அதீத மகிழ்ச்சியில் சூழ்ந்திருக்கும் இந்த வீடு. ஊரின் அழகினாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பதினால் சுற்றி இயற்கை அழகு சூழ்ந்த இடங்கள் இருப்பதினாலும் வருடம்  ஒரு பதினைந்து பேராவது கூடுவர் - கெட் டுகெதர் - ஃபேமிலி கேதேரிங்.

                 சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு பதினைந்து பேர் இயல்பாகவே வாழ்ந்தும் வந்தனர். இப்பொழுது பெருமாள் கோவில் காலை மாலை பூஜைக்கு பதினைந்து பேரை கூட காண முடியவில்லை.  கால மற்றும் அறிவியல் முன்னேற்றம்.

                 இந்த வருடம் உறவினர் கூடுதலுக்கான நாள் நெருங்கி வரத் தொடங்கியது. இந்த வீட்டு அம்மா. அறுபது வயது. சுறுசுறுப்பினையும் செயல்களையும் பார்த்தால் அப்படி சொல்லிட முடியாது - இளைஞர்களுக்கு இணையான வேகம்.  பாவம் இந்த அம்மாவிற்கு தனிமையைப் பரிசாக கொடுத்திருக்கிறது வாழ்க்கை. மகனிற்கு அயல்நாட்டில் வேலை. கணவர் பணி ஓய்வு பெற்று இறச்சகுளம் வந்து ஒரு வருடத்திலேயே இறந்து விட்டார். மூன்று வருடங்களாய் தனிமை வாழ்க்கை தான். வருடம் இருமுறை விடுமுறையில் மகன் வருவான். அதை ஒட்டி உறவினர்களும் வருவர். அந்நாட்களே இந்த அம்மாளுக்கு கொண்டாட்டம் - பொங்கல், தீபாவளி எல்லாம்.




                  தை அம்மாவாசை - அவரது திதி. இந்த வருடம் ஜனவரி இருபத்தி ஐந்து அன்று. புதன் கிழமை. இருபதாம் தேதியே மகன் வருவதால் மகனுக்கு பிடித்ததை செய்து தர வேண்டும் என்று இப்பொழுதே தயாரானாள். இன்னும் நான்கு நாட்கள் தான். பின்னர் பொங்கல் அதன் பின் ஐந்தே நாட்கள் மகன் வந்துவிடுவான். சென்ற வருடம் அவன் வரும்போது நட்ட செவ்வாழை மரம் நன்று வளர்ந்து இருந்தது. தன் கைபேசியில் அதனை படம் பிடித்து வாட்சப்பில் மகனுக்கு அனுப்பினாள். என்ன செய்வது என்று புரியாதவளாய் டிவி ரிமோட்டை அழுத்தினாள். அம்மாளின் பெயர் ராஜேஸ்வரி.

                 அம்மாளின் மகன் கிருஷ்ணன். நாட்கள் நெருங்க ஊர் செல்லத் தயாரானான்.பின்னர் வருவோர்க்கும் ஒவ்வொரு பொருளாக வாங்கினான். ஆண்கள் அனைவருக்கும் ஒன்றாய் இருப்பதுபோல் சட்டையும் வாங்கினான். மக்களிடம் சொல்லவும் இல்லை. சர்ப்ரைசாம். ஒவ்வொரு வருடமும் இருமுறை ஊருக்கு செல்வது வழக்கம். ஆனால் தை மாதம் தான் களை கட்டும். வாட்சப்பில் உறவினர்கள் வருவதை உறுதி செய்து கொண்டான். ஒவ்வொருவரும் சீரியாசனவர்களும் கேளிக்கை விரும்பிகளுமாய் கலவை செய்யப்பட்டவர்கள். மற்ற நேரங்களில் சீரியசானவர்களாய் அதிகம் தென்பட்டாலும், கூடும்பொழுது கேளிக்கை விரும்பிகளாகவே இருப்பர்.

                  ஒருவருக்கு அப்படி சீரியசான நிலைமை தான். பல வேலைகளில் இருந்து விட்டு டெஹல்கா என்ற நிறுவனத்தில் வேலை. அடித்தது ராஜயோகம் என்று பார்த்தால் அடுத்த நாளே அதன் முதலாளியின் கசமுசா காட்சிகள் வெளியே வர, புத்தகத்தின் விற்பனை குறைந்து அவல நிலை. டெஹல்காவில் வேலை என்றால் இவரே அந்த கசமுசா செய்தது போல் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு பணிவிடுப்பு இவர் மனதிற்கு தேவையாகவே இருந்தது. டெஹல்காவும் அவரது மனைவியும் வர ஆயத்தமாயினர். டெஹல்காவின் பெயர் ராமன். அவர் மனைவியின் பெயர் கவிதா. கிருஷ்ணனின் பெரியம்மா மகள்.

                  மற்றொருவர் இவர்களுடன் நன்கு பேசினாலும் இது போன்று மூன்று நான்கு நாட்களுக்கு வந்து சேர்ந்து இருந்ததில்லை. இவர் பெயர் ஹரன். ஹரன் மாப்பிள்ளை வருகிறார் என்ற சந்தோசமும் ராஜேஸ்வரி அம்மாளுக்கு இருந்தது.

                    சென்னையிலிருந்து ராஜேஸ்வரியின் அக்காள் குடும்பத்தினர், தங்கை, மற்றொரு அக்காளின் மகள் குடும்பத்தினர் என மொத்தம் பதினைந்து பேர் சேர்வதை எண்ணி ஒரே சந்தோசம் ராஜேஸ்வரிக்கு. எல்லோரும் சென்றவுடன் பல நாட்களுக்கு இந்த நினைவுகளே ஓடும் அவள் மனதில்.

                    முதலில் மகன் வந்தாயிற்று. அவள் முகம் மலர்ந்தது போல் அந்த வீடே மலர்ந்திருந்ததாய் தெரிந்தது. மகன் வந்தால் கூடுதல் சுறுசுறுப்பாகிவிடுவாள் ராஜேஸ்வரி. எல்லா வீட்டிற்கும் இவள் செய்த காய்கறிகள் போகும். மகன் அல்லவா வந்தது. தனிமைக்கு விடுமுறை கொடுத்து சுகமாய் மகனோடு செலவிடுவாள். என்ன தான் வாட்சப்பும் ஸ்கைப்பும் இருந்தாலும் கூட அமரசெய்து தான் செய்த உணவினை பரிமாறுவதைப் போல் வருமா? மகன் தான் செய்ததை நன்கு சாப்பிடுகிறானா என்று கவனிப்பாள். இன்னும் ஐந்து நாட்களில் மற்றவர்கள் வந்து விடுவார்களே. அப்பொழுது இதுபோல் உபசரிக்க முடியுமோ முடியாதோ? எதுவெல்லாமோ அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றும். ஆனால் பேச்செடுக்காமலே சென்று விடும். தனிமை பற்றி. அதை சொன்னால் கலங்கி விடுவானே. அவர் கனவில் வருவதை பற்றி. அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு. ஊரார் பேசும் புரளி பற்றி. திட்டிவிடுவானோ? திருமணம் பற்றி. ஓரிரு வருடம் போகட்டும் என்று சொல்லிவிடுவான் என அவளுக்குள்ளேயே பேசி நிறுத்திக் கொள்வாள். இருப்பினும் பேசியே பொழுதைக் கழிக்க தலைப்புகளா இல்லை. நாட்கள் அவ்வாறே சென்று திதியும் முடிந்தது. தனது பிள்ளைகள் மற்றும் பெயரன் பெயர்த்தி வருகிறார்கள் என்ற அந்த கூடுதல் சந்தோசம் அவள் பார்வையிலேயே தென்பட்டது. இன்னும் நான்கு நாட்களுக்குத் தான் என்று கூடவே மனம் சொல்லும்.

                      வாசலில் அழகிய கோலம் இட்டிருந்தாள்.
           
                      உறவினர்கள் அனைவரும் வந்திறங்கி ஆண்கள் ஆற்றில் குளிப்பது என்று தீர்மானமானது. செல்கையில் ராமன் தனது டெஹல்கா விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாக சொன்னார். ஹரன் ஊரின் அழகினை தனது கேமராவில் ஏற்றினார். விஜயன் தனது மருத்துவ கல்லூரி அனுபவத்தை தன் தந்தை சுரேஷிடம் பகிர்ந்து வந்தான். அடுத்து மூன்று நாட்களுக்கு கடல், அருவி, குளம், ஆறு, கோவில், சினிமா  என்று எங்கு செல்லலாம் எனத் திட்டமிட ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

                    "அஸ் யூசுவல் கன்னியாகுமரி, சுசீந்திரம் ஒரு நாள். நாளைக்கு போலாம். சனிக்கிழமை நல்லா இருக்கும். சண்டே மார்னிங் திற்பரப்பு ஃபால்ஸ் மட்டும் போயிட்டு வந்துடலாம். இவினிங் கிளம்பணும். இன்னிக்கி சங்கரன் கோவில் போலாம். 4 மணிக்கு வேன் வர சொல்றேன். காலையில லக்ஷ்மி அக்காக்கு  தெரிசனங்கோப்பு வைத்தியர்ட காமிக்கலாம்.", என்றான் கிருஷ்ணன்.
                     "சூப்பர் டா. ஆட்டம் பாட்டம்னு ஜமாய்ச்சிடலாம்.", என்றார் சுரேஷ்.

                     தான் வாங்கித்தந்த துணிகளை அனைவருக்கும் கொடுத்தான் கிருஷ்ணன். அப்படி ஒரு மகிழ்ச்சி ராஜேஸ்வரிக்கு. இதையெல்லாம் காண தன் கணவனில்லையே என்ற வருத்தம். காட்டாமல் இருந்தாள். வண்டியில் அனைவரும் ஆடி பாடி மகிழ்வதை கண்டு மகிழ்ந்தாள். தானும் பாடினாள். அனைவரும் வீடு திரும்பினர்.
                 
                    தன் அம்மாள் அறுபது வயதை அடைந்ததை காரணமாய் கொண்டு முன்பே உறவினர்களை வைத்து ஒரு காணொளி தயார் செய்திருந்தான் கிருஷ்ணன். அனைவர் முன்னரும் அதனைப் போட்டு காட்டினான். நெகிழ்ச்சியில் வாயடைத்தது ராஜேஸ்வரிக்கு.
     
                    அடுத்த நாள் கன்னியாகுமரியிலும் மகிழ்ந்தாள். மாங்காயை பார்த்தவுடன் ஆசை. தனது அக்காள் மகனிடம் கூறி வாங்கி சாப்பிட்டாள். படகு சவாரி முடிந்து கோவில் தரிசனம் முடிந்து சுசீந்திரம் தரிசனமும் முடிந்து வீடு அடைந்தனர். பாடல்களின் சத்தம் தெருவிற்கே கேட்டது. நாளையுடன் அனைவரும் சென்று விடுவர் என்பது அவள் மனதினில் அடித்தது.

                  "இது மாதிரி எல்லா வருஷமும் சேரணும் சித்தி. நான் மிஸ் பண்ணிட்டேன் போன வருஷம் எல்லாம்", என்று ஹரன் சொல்ல
                 "ஆமாம் பா", என்றாள் ராஜேஸ்வரி.
                 "சித்தி நிஜமா சித்தி. எவளோ வருத்தம் தெரியுமா வரதுக்கு முன்னாடி. மூணு நாள் இங்க வந்த தான் கொஞ்சமாவது மாறும்னு நினைச்சேன். இப்போ தான் ஃப்ரீ யா இருக்கு. ஏதோ கிருஷ்ணன் எங்கள கூப்டறான்.",  என்றார் ஹரன்.
                "அதான் அப்டி ஆட்டம் போட்டேன்களா வேன்ல?", என்று ராஜேஸ்வரியின் அக்கா விஜி கேட்க இடமே சிரிப்பில் மூழ்கியது.
             

                  ஏனோ அடுத்த நாள் ராஜேஸ்வரி திற்பரப்பு செல்லவில்லை. நாளை முதல் தனிமை வாசம் தான் என்று தெரிந்தபின்பு எதற்காக இன்றைய குதூகலம். வற்புறுத்தியும் சமைப்பதாக சொல்லி நின்று விட்டாள். அவளது அக்காளும் நின்று விட்டாள். அக்காள் அல்லவா? புரிந்து கொண்டாள்.

                 மதியம் அனைவரும் திரும்ப வந்தனர். வருத்தத்தை முகத்தில்
காட்டாது பரிமாறினாள்.
                       
                 மாலை சென்னை செல்பவர்கள், பெங்களூர் செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப, கிருஷ்ணனும் தான் அழைத்திருந்த டாக்ஸியில் திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட்டான். அவள் வாசலில் இருந்து அனுப்பிவிட்டு, ஜன்னல் வழியே ஒரு ஏக்கப் பார்வை பார்த்தாள். அந்த வீடும் மக்கள் பின்னர் எப்போ வருவர் என்ற ஏக்கப் பார்வை பார்ப்பது போல் இருந்தது.
             
                 உள்ளே சென்று தன் கணவனின் லேமினேஷன் ஃபோடோவைப் பார்த்து, "இனி நீங்களும் நானும் தான் கிருஷ்ணன் ஜூன்ல வரவரைக்கும்.", என்று  சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்றாள்.

             

Sunday, January 10, 2016

வெள்ளையில் சிவப்பு

          "இந்த வருஷம் பூதபாண்டி எட்டாந்திருநாளுக்கு யாருலே நாதஸ்வரம் வாசிக்கா?", பெட்டிக்கடை கணபதியிடம் கேட்டார் தாணு.
          "தெரியிலே தாணு. போன வருஷம் ராசுக்குட்டி கச்சேரி பாத்துக்கிடு. அவா தான் இந்த வருஷமும் வாசிப்பான்னு நெனைக்கேன்."

தாழக்குடி திருப்பத்தில் ஒரு லாரி வீட்டு சாமான்களுடன் திரும்பியது.

           "நம்ம கிராமத்துக்கா லே?"
           "ஆமாம் கணபதி. நம்ம கிட்டு சாமி வீடு பூட்டியே கெடக்கல்ல. தாமசத்துக்கு விடப்  போறேன்னு சொல்லி இருந்தான் பாத்துக்கோ. அதான் வந்திருக்கா. வடிவீஸ்வரத்துல இருந்து. இங்க வாடகை கம்மி தானே."
           "ஓஹோ."
           "ஒரு சீப்பு மட்டிப்பழம் குடேன். வீட்டுல பாக்கியம் கேட்டாப் பாத்துக்கோ."

தாணு தன் வீட்டை அடைந்தார். லாரியிலிருந்து புது குடித்தனம் வந்தவர் வீட்டிற்கு பொருட்கள் ஏறிக் கொண்டிருந்தன. தாணு வங்கியிலிருந்து ஓய்வுப் பெற்று தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.ஒரு மகன். சென்னையில் வேலை. வயது 28. இன்னும் திருமணம் ஆகவில்லை.

மாலை கோவிலுக்கு செல்லுமுன் புதுக்குடித்தின வீட்டிற்குச் சென்றார் தாணு. கதவைத் தட்டியவுடன்  வெளியே வந்தார் மணிகண்டன்.

         "நமஸ்காரம். நான் தாணு. மூணாவது ஆத்துல இருக்கேன்."
         "உள்ள வாங்கோ."

வீட்டுப் பொருட்களை எல்லாம் நோட்டம் விட்டார் தாணு.
       
          "உங்க பெயர் சொல்லலையே."
          "நான் மணிகண்டன். சமையலுக்குப் போயிண்டு இருக்கேன். முன்னாடி ரப்பர் எஸ்டேட் அக்கௌன்டன்ட் வேல பாத்துண்டு இருந்தேன்."
          "சந்தோசம். நான் இந்தியன் பேங்க் ரிடயர்ட். இப்போ பொறந்து வளந்த ஊர்ல சுத்திச் சுத்தி வந்துண்டு இருக்கேன்."
           "காபி சாப்பிடறேளா? வசந்தா! மாமாவுக்கு ஒரு காபி குடேன்."

வசந்தா காபி  எடுத்து வந்தாள்.



          "என்னம்மாப் பண்ற?"
          "ஆதர்ஷ் ஸ்கூல்ல மாத்ஸ் டீச்சர் மாமா."
          "வெரி குட்."
          "மணிகண்டன். வசந்தாவுக்கு இருவத்தஞ்சு இருவத்தாறு வயசு இருக்கும் போல இருக்கே. வரன் பாக்கலையா?"
           "மாமா. அவ விடோ. கல்யாணமாகி மூணே மாசம் ஆக்சிடெண்ட்ல தவறிட்டார். ஆச்சு பிப்ரவரி வந்தா ரெண்டு வருஷம் ஆயிடும்"
          சற்று நேரம் அமைதியான தாணு, வசந்தாவைப் பார்த்து
           "சாரி மா. தப்பா நினைச்சிக்காத."
           "பரவாயில்ல மாமா.", என்று சொல்லிவிட்டு தாணு குடித்த டம்ளரை எடுத்துச் சென்றாள் வசந்தா.
           "தப்பா நெனச்சிக்காத மணிகண்டா!"
           "இருக்கட்டும் மாமா."
           "உங்காத்து மாமி எங்க?"
           "நாகர்கோவில் போயிருக்கா. நாகராஜா கோவில் வர."
           "நான் கிளம்புறேன். எதுன்னாலும் வந்து கேளுங்கோ. நானும் என் ஆத்துக்காரியும் தான் இருக்கோம். ஒரு பையன். சென்னைல சாப்ட்வேர்ல இருக்கான்."

           பாக்கியம், தாணுவின் மனைவி. கர்நாடக இசை வாய்ப்பாட்டில் வல்லுநர். தற்காலங்களில் கச்சேரிப் பாடுவதில்லை. கோவிலில் தினமும் ஒரு பாடல் பாடுவார். வேண்டி வருவோருக்கு கற்றுக் கொடுப்பார். மாலை கோவிலில் பாடிவிட்டுத் திரும்பும் போது வீணையிசைக் கேட்டு வசந்தா வீட்டு வாசலில் நின்றார்
            "டீவிலே வீணைக் கச்சேரி போயிண்டிருக்கு. போடுங்கோ."
            "எந்த டீவி? எதுலையும் இல்லையே?"
            "புதுசா வந்துருக்காளே அவா ஆத்துல ஓடிண்டு இருந்தது."
            " பக்கவாத்தியம்லாம் கேட்டதா?"
            "இல்லையே."
            "பாக்கியம்! அவாத்துக்குப் போறச்ச வீணையப் பார்த்தேன்டீ. அவாத்துப் பொண்ணு வசந்தா வாசிப்பாளாம்."
            " நானும் அவளப் பார்த்தேன். நம்ம ஆனந்துக்கு பொருத்தமா இருப்பா. கேக்கலாமா?"
            "எனக்கும் பார்த்த உடனே தோனித்து. பாவம் அந்தப் பொண்ணு விடோ."
            "எப்படி?"
            "கல்யாணமாகி மூணே மாசத்துல ஆக்ஸிடெண்ட்ல தவறிட்டான். ரெண்டு வருஷம் ஆயிடுத்தாம்."
            "ஐயோ பாவம்."

நாகர்கோவிலிலிருந்து தாணு ஸ்கூட்டரில் இறச்சகுளம் புறப்படத் தயாரானார். அருகில் தாணுப் பிள்ளை (ஃபங்க்) நடந்து வருவதைப் பார்த்தார். 
           "லேய் ஃபங்க்கு. இறச்சகுளம் தான் போறேன் ஏறிக்க."
           "உன்ன நம்பி ஏறலாமா?"
           "(சிரித்தவாறு) உன் டோப்பா பறந்து போற அளவுக்கு வேகமா ஓட்ட மாட்டேன். ஏறு."
           "சரி லே."
           "என்ன லே சைக்கிள் கணக்கா ஒன் சைட்ல உட்காருத."
           "உடல் உபாதை லே. நீ ஓட்டு."
           "என்ன இப்போ ரெண்டு வாரமா டுயூசன்ல ஆளே இல்லையாமே? எல்லாம் வசந்தா வந்தவுடனே அங்க போயிட்டாளாம். போட்டி ஜாஸ்தி ஆயிடுச்சா?"
           "மக்கா! கோபப் படுத்தாத டேய். படிக்கிறவனுக்கும் படிப்பிக்கிறவனுக்கும் போட்டியே இருக்கக் கூடாது பாத்துக்கிடு.முப்பத்தஞ்சு வருஷ சர்வீஸு. இது வரைக்கும் ஒருத்தனும் கணக்குல தோத்தது கிடையாது. உன் பிள்ளை ஆனந்தையும் சேர்த்து நானூறு பேருக்கு மேலே பத்து கணக்குல நூத்துக்கு நூறு. நான் போட்டிலாம் பாத்ததே இல்ல டேய். பையமார் பார்ரத்தாலும் படிப்பு பரிட்சையோடப் போயிடும்."
            "கோவிக்காத."
            "பாவம் அந்தப் பொண்ணு. விதவை. குடும்பத்தையும் பாத்துக்குது. அதான் கிராமத்துலே டியூசன் நிப்பாட்டிட்டேன். சரி. அது இருக்கட்டும். உங்க இதுல மறுமணம்லாம் ஒத்துக்கமாட்டடாங்க இல்லையா?"
            "ஆமாம் டா. எல்லாம் பழைய பஞ்சாங்கங்க."
            "திருப்பதிசாரத்துல ஒரு டைவர்ஸி. குவைத்துல வேல. பார்ப்போமா?"
            "வியாழன் நல்ல நாள். நீயும் நானும் போய் பேசலாம். சரி பட்டா, வசந்தா அப்பா கிட்ட நான் பேசறேன்"
            "டேய் போற வழிலே பூதத்தான் கோவில் போவோம்."

மாலை கோவிலில் பாடிவிட்டு பாக்கியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் வசந்தாவின் வீணையிசை அவரை ஈர்த்தது. பாடலைக் கேட்டவாறே வீட்டினுள் நுழைந்தார். முழுப் பாடலையும் கேட்டு ரசித்தார். பாடல் முடிந்தது.
            "ரொம்ப நல்லா வாசிக்கறமா. நான் இங்க மூணாவது ஆத்துல இருக்கேன்"
பாக்கியத்தின் காலில் விழுந்து வணங்கினாள் வசந்தா. 
            "நாராயணி, மாமிக்கு ஒரு காஃபி போடு."
            "மங்களகைசிகி ராகம். பாப்புலர் ராகம் கிடையாது மா இது. ஆர்டிஸ்ட்லாம் பாடிக் கூட நான் கேட்டதில்ல. இந்த வீணைக்கு சரஸவதி வீணைன்னு ஒரு பேர் இருக்குமா. அது சத்தியம். சரஸவதி கடாஷம் உனக்கு இருக்கு."
            "மாமி, என் பேரு மணிகண்டன். இவ என் பொண்ணு. பேரு.."
            "தெரியும். ஆத்துல சொல்லிருக்கார்.", என்று சொல்லிவிட்டு, "சீதம்ம மாயம்மா" என்ற பாடலின் பல்லவியைப் பாடினார். "என்ன ராகம் மா?"
            "வசந்தா." என புன்சிரிப்புடன் சொன்னாள் வசந்தா.
            "தெய்வீகமா இருந்தது மாமி. மாமா நீங்க பாடுவேள்னு சொல்லலையே." எனக் கேட்டார் மணிகண்டன்.
            "மறந்துருப்பார்."
            "மாமிப் பேரு."
            "பாக்கியம்"
            "பாக்கியம் மாமி எங்காத்துக்கு வந்தது எங்களுக்கு பாக்கியம்."
            "நன்னாப் பேசறேள்." 
            "மாமி, தெரிசனங்கோப்பு பாக்கியமா?", ஆர்வமாக கேட்டாள் வசந்தா.
            "ஆமாம் மா. இப்போ இறச்சகுளம் பாக்கியம். பெருமாள் கோவிலோட சரி. கச்சேரிக்கெல்லாம் உடம்பு ஒத்துக்கமாட்டேங்கறது."
            "கமலா டீச்சர் அடிக்கடி சொல்லிண்டே இருப்பா."
            "கமலத்தோட சிஷ்யையா?"
            "ஆமாம் மாமி."
            "அதான் மங்களகைசிகிலாம் வாசிக்கற. குருவையும் மிஞ்சிட்ட வாசிப்புலே. வசந்தா, நான் தினமும் கோவில்ல ஆறு மணிக்கு பாட்டுப் பாடுவேன். பத்து நிமிஷம் தான். நீயும் வா மா, வீணை வாசிக்க."
            "உங்களுக்கு வாசிக்க யார் தான் மறுப்பா மாமி. ஆனா நான் கோவில் போறது இல்ல."
            "தெரியும் மா. ஆத்துக்காவது வா."
            "வீக்கெண்ட்ஸ்ல வரேன் மாமி."
            "சரி. நான் வரேன் மா"

சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார் தாணு.
            "என்ன பாக்கியம், ரெண்டு மூணு பாட்டு சேர்த்து பாடிட்டியா? லேட் ஆயிடுத்து. ரெண்டாவது விளம்பர இடைவேளை விட்டுட்டான்டி."
            "வசந்தா ஆத்துக்குப் போயிருந்தேன். நல்லப் பொண்ணு. வீணை அருமையா வாசிக்கறா. என் ஃபிரெண்ட் கமலத்தோட சிஷ்யை. சமத்துப் பொண்ணு."
            "அவளுக்கு செகண்ட் மேரேஜ் பண்ணா என்னடி?" 
            "நானும் அத..."
            "மேலத்தெரு தாணு திருப்பதிசாரத்துல ஒரு டைவர்ஸி இருக்கான்னு சொன்னான். அவாளும் வரன் பார்க்கராளாம். வியாழக்கிழமைப் போறோம்."
            "இவாத்துல ஒத்துப்பாளா?"
            "பையன் நல்லவனா இருந்தா, இங்க நடக்கவேண்டியதெல்லாம் என் பொறுப்பு."
            "பேசியே சரி பண்ணிடுவேள்."
            "ஆமாம்"
            "அவ ஆனந்...தமா இருக்கணும்."

தாணு ஃபங்குடன் திருப்பதிசாரம் புறப்பட்டார்.
           "வீடு அருமையா இருக்கே."
           "ஸகூட்டரு, குவைத் பணம் லே."
           "காலிங் பெல் அடிக்கட்டுமா?"
           "என்னலே கேள்வி? பொறவு எப்படி உள்ளப் போவ?"
           கதவ தட்டியும் போலாம் என்று கூறியவாரே காலிங் பெல்லை அழுத்தினார்.
           "நமஸ்காரம். என் பேர் தாணு. வெங்கடேஷுக்கு டீச்சர்."
           "உள்ள வாங்கோ."
           "நீங்க?"
           "என் பேரும் தாணு தான். தாணுக்கு ஃபிரெண்ட்."
           "சிரிப்பா பேசறேளே."
           "உங்களுக்கு நோய் விட்டுப் போணும்லியா."
           "சரி தான்"
           "மணி ஐயர் உங்காத்துப் பையனுக்கு வரன் பார்க்கறதா சொன்னார்."
           "எல்லாத்தையும் சொன்னாரா?"
           "எல்லாத்தையும் சொன்னார். சரியான தங்கம் மாதிரி ஒரு வரன் கொண்டு வந்துருக்கேன்."
           "சந்தோஷம். அவனும் அவன் அப்பாவும் வந்துடுவா. நான் காஃபி போட்டு எடுத்தண்டு வரேன்."
           "சரி மாமி."
           "டேய் ஃபங்க்கு மாமி ஓகேடா. நல்ல டைப்"
           "மாமா கொஞ்சம் ஒரு மாதிரி."
           "ஓ.."
    
வெங்கடேஷும் அவரது தந்தையும் உள்ளே நுழைந்தனர்.
             
           "வாங்க. வாங்க. வாங்க. வெங்கடேஷா! தாணு சார் வந்துருக்கார் பாரு."
           "வணக்கம். இவர் என் ஃபிரெண்ட் தாணு ஐயர். இறச்சகுளம் தான்."
           "நமஸ்காரம். என் பேர் மகாதேவன் மகாதேவைய்யர்."
           "சந்தோஷம் மாமா."
           "காஃபி சாப்டேளா?"
           "ஆச்சு மாமா."
           "என்ன விஷயம்?"
           "சார், வெங்கடேஷுக்கு பொண்ணுப் பாக்கறதா மணி சொன்னான். தாணு ஐயருக்கு நெருங்கியவங்க வீட்டுல ஒரு வரன் இருக்கு."
           "ஓ! பொண்ணு யாரு?"
           "தாணு! நீங்க சொல்லுங்க."
           "நல்ல பொண்ணு சார். பேரு வசந்தா. ஆதர்ஷ் ஸ்கூல்ல மேத்ஸ் டீச்சர்."
           "வெரி குட்"
           "வீணை அருமையா வாசிப்பா. கமலத்தோட சிஷ்யை."
           "வடிவீஸ்வரம் கமலமா? பேஷ். பொண்ணோட அப்பா என்ன பண்றார்?"
           "பாலமோர் ரப்பர் எஸ்டேட்ல அக்கௌண்டண்டா இருந்தார். இப்போ சமையல் வைதீகம்னு போயிண்டு இருக்கார்."
            "சமையலா?"
            "அதுனால என்ன மாமா? பொண்ணு சரஸ்வதி கடாஷம். அப்படி இருப்பா."
            "ஓஹோ மேல சொல்லுங்கோ."
            "வெங்கடேஷ் மாதிரியே வசந்தாவும் மேரிட்"
            "என்ன சொல்றேள்?"
            "விடோ. பாவம் மாமா. ஆத்துக்காரன் மூணு மாசத்துல போயிட்டான்."
            "வேண்டாம் மாமா."
            "மாமா! வெங்கடேஷும் கல்யாணமவன் தானே. நல்ல பொண்ணு மாமா."
            "உங்களப் பாத்ததுல இருந்து ஒரு மரியாத இருக்கு. கெடுத்துக்காதேள்"
            "சரி மாமா. மரியாதையோட நாங்க கிளம்பறோம். ஷேமமா இருங்கோ."
            
            "ஃபங்க்கு, ஒரு நிமிஷம். வெங்கடேஷ்! நீ உன் முதல் பொண்டாட்டிய தொட்டதே இல்லலையா?"
            "ஸ்கூட்டரு, நீ வா. அவாளுக்கு ரெண்டு வயசுல ஒரு குழந்த இருக்கு. அம்மாவோட இருக்கான்"
            "தப்பித்தது குழந்தை. நான் வரேன்பா வெங்கடேஷ். வெரி நைஸ் மேன். ஆல் தி பெஸ்ட்."

வண்டியில் திரும்ப வருகையில்
           "ஃபங்க்கு. நல்ல ஆளப்பிடிச்ச நீ."
           "வெங்கடேஷ் அவன் அப்பாவத்தான் கட்டிக்கணும், ஸ்கூட்டரு"
           "நல்லா சொன்ன. மாமிக் கிட்ட அவா ஃபோன் நம்பர் வாங்கிருக்கலாம் டா."
           "ஏன்?"
           "மகாதேவனோட இருக்கா. ரத்த கொதிப்பு அது இதுன்னு இருக்கும். ஃபோன் பண்ணி சரி பண்லான்னு தான். அஞ்சாறு ஜோக் சொன்னா சிரிப்பாளே."

வீடு திரும்பினார்.
           "என்ன ஆச்சு அண்ணா?"
           "வசந்தாவுக்கு வேற நல்ல மாப்பிள்ளக் கிடைப்பான் பாக்கியம். இவா வேணாம்"

நாட்கள் சென்றன. வசந்தா ஞாயிறுகளில் வீட்டிற்கு வந்து வீணை வாசித்து வந்தாள்.
         
          "பாக்கியம். இன்னிக்கு ராசி பலன்ல உனக்கு மகிழ்ச்சி, எனக்கு சந்தோஷம்."
          "ரெண்டும் ஒன்னு தானே,"
          "அவன் மாத்தி மாத்தி ரொட்டேஷன்ல போடுவான்."
          "பெரியார் பேரன் மாதிரிப் பேசுவேள். என்ன ராசி பலன் எல்லாம்?"
          "சொல்லறேன் இங்க வா."
          "என்ன விஷயம்?"
          "கோச்சிக்கூடாது. கோச்சிக்கமாட்டேன்னு நினைக்கறேன்."
          "சொல்லுங்கோ."
          "ஆனந்துக்கு டிசம்பர் வந்தா இருபத்தி ஒன்பது வயசாறது. அவனுக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிடணும்."
         "பரவாயில்லையே பொறுப்பு தென்படறது."
         "ஒரு தெரிஞ்ச வரன் இருக்கு."
         "யாரு?"
         "நல்ல பொண்ணு. பேரு வசந்தா. சங்கீத்த்துல உன்ன மாதிரியே. வாய்ப்பாட்டு இல்ல. வீணை வாசிப்பா. வாய்ப்பாட்டும் நீ பின்ன சொல்லிக் கொடுக்கலாம். நல்ல குரலும் இருக்கு. மேத்ஸ் டீச்சர் வேற. கெட்டிக்காரி. என்ன சொல்ற."
        "நானும் நினைச்சிண்டே இருந்தேன்."
        "எனக்குத் தெரியும். திருப்பதிசாரம் போகும்போது, வசந்தா ஆனந்தமா இருக்கட்டடும்னு சொல்றதுக்கு ஆனந்த் அம்னு சொன்னியே அப்பவேப் பிடிச்சிட்டேன். "
        "எல்லாரும் ஏத்துப்பாளா?"
        "பையனுக்கு அப்பா, அம்மா நம்ப ஏத்துண்டாச்சு. ஆனந்த், வசந்தா, வசந்தாவோட அப்பா, அம்மா ஏத்துண்டா போதும். நான் பாத்துக்கறேன். ஆனந்த் பங்குனி உத்தரத்துக்கு வரானே, பேசிடறேன்"
        "பெருமாள் இருக்கார்."
        
பங்குனி உத்தரத்தை ஒட்டி வீடு வந்தடைந்தான் ஆனந்த். மதிய உணவிற்குப் பின் மூவரும் சோஃபாவில் அமர்ந்து கொண்டணர்.
        "ஆனந்த். என்னடா? ஸ்டாக்ஸெல்லாம் நல்லா ஏறிண்டு போறது இல்லையா?"
        "ஆமாம் அப்பா."
        "நான் சொல்லல பாக்கியம். அவனுக்கு இப்ப நல்ல நேரம். ஆனந்த் இட் இஸ் தி பெர்ஃபெக்ட் டைம் ஃபார் யுவர் மேரேஜ்."
        "போட்டுமே பா."
        "இல்லடா. நேரம் ஆக ஆக, பொண்ணு கிடைக்காது. பிக் அண்ட் சூஸ் பண்ண முடியாது. சூஸ் தி பெஸ்ட் ஏன்ஸர் முடியாது. ஃபில் இன் தி பிளாங்க்ஸ் தான்"
         "ஒரு முடிவோட தான் இருக்கிங்க. உங்க இஷ்டம்."
         "(எப்படா கேப்பான்னு காத்துண்டு இருந்துருக்கான்) குட் டா ஆனந்த்"
         "ரொம்ப அவசரமாத் தேடி ஸ்ட்ரெஸ்லாம் வேணாம்."
         "(உடனே பாக்க சொல்றான்.) கை வசம் ஒரு பொண்ணு இருக்கா. ஸ்ட்ரெஸ்லாம் இல்ல டா."
         "ஓஹோ!"
         "பொண்ணுப் பேர் வசந்தா. மேத்ஸ் டீச்சர். வீணை பிரமாதமா வாசிக்கறா. ரெண்டு மாசமா எல்லா ஞாயிறும் இங்க வரா வாசிக்க. கிட்டு மாமா ஆத்துல தான் இருக்கா."
         "கார்த்தால பார்த்தேன். ஆப்போஸிட்ல கிராஸ் பண்ணிப் போனா."
         "(பாத்துட்டான் செவன்ட்டி ஃபைவ் பெர்சன்ட் ஓகே.) ஒரு சின்ன பிரச்சனப் பாத்துக்கோ. உங்கம்மா என் கிட்ட சொல்லும்போது நான் ஏத்துக்கவே இல்ல. ஸீ வாஸ் மேரிட் ஃபார் த்ரீ மந்த்ஸ். ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்ஸிடெண்ட்ல தவறிட்டான். நான் ஒத்துக்கல ஃபர்ஸ்ட். அப்பறம் ஐ வாஸ் கன்வின்ஸ்ட் பை அந்த பொண்ணோட பிஹேவியர். என்ன சொல்ற."
        "அப்பா! நான் அந்தப் பொண்ணப் பார்த்தேன். அம்மா சர்ட்டிஃபை பண்றாங்க, நீங்களும். நான் அந்தப் பொண்ணோடப் பேசறேன். அவளுக்கும்  சரின்னா நான் பண்ணணக்கறேன் பா."
        "தேங்க்ஸ் டா. உடனேப் பேச வேண்டாம். விசுக்கப்பறம் பேச சொல்லி ஜோசியர் சொல்லிருக்கார்."
        "ஓ கே. நான் விசுக்கும் வரேன்"
        "சரி."
ஆனந்த் உள்ளே சென்றவுடன்
        "அண்ணா! ரெஸிஸ்ட் பண்ணாம ஒத்துண்டுட்டான்."
        "நீ எப்பவும் சொல்லுவியே, பெருமாள் செயல்."
        "கிண்டலா?"
        "விசன்னு சொல்லி மூணு வாரம் டைம் வாங்கிட்டேன். வசந்தம் வர."
        "நாரதரே அவதாரம் எடுத்து வந்த மாதிரி இருக்கு உங்களப் பார்க்க."
        "அடிப்பாவி. நான் முன்னாள் திக டி."

இரண்டு நாட்கள் கழித்து 
        "மணிகண்டா! மணிகண்டா! "
        "அவரில்லையே மாமா. சமையலுக்குப் போயிருக்கார். உள்ள வாங்கோ."
        "(தெரியுமே) நாராயணி. உன் காஃபி அருமை மா. காஃபி போட்டுத் தரயா?"
        "கண்டிப்பா மாமா."
காஃபி கொண்டு வந்தாள் நாராயணி.
        "நாராயணி. தேங்கஸ் மா. உன் பொண்ணு நல்லா வீணை வாசிக்கிறா. நீயும் வாசிப்பியா?"
        "இல்ல மாமா."
        "அப்போ என்ன உன் ஸ்பெஷல்?"
        "சமையலும் கோலமும் தான் மாமா."
        "மார்கழி மாசத்துல அமர்க்களப் படுத்தினியே மா. கோலம் எல்லாம் அமர்க்களம். பாக்கியம் போடணுமேன்னு போடுவா. பாட்டுக்கோலம் தான் அவளுக்கு."
        "மாமி தான் ஃபேமஸ் ஆச்சே மாமா."
                "ஏம்மா உன் கிட்ட கேக்கணும்னு நினைச்சேன் தப்பா எடுத்துக்காத. வசந்தாவுக்கு திரும்ப கல்யாணம் பண்ணா என்ன?"
        "எப்படி மாமா?"
        "விஷயத்த சொல்லியேக் கேக்கலாம் மா.உங்களுக்கு சரின்னா அமையும் மா."
        "அவருக்கும எனக்கும் ஆச தான். சுத்தி இருக்கறவா..."
        "அடப் போம்மா. எல்லாம் யோக்கியங்கப் பாரு. இதுல என்னம்மாத் தப்பு. நீ ஒன்னுப் பண்ணு. மணியன் வந்தவுடனே அவனையும் வசந்தாளையும் கூட்டிண்டு வா எங்காத்துக்கு. எனக்குத் தெரிஞ்ச பையன் இருக்கான். பேசலாம்."
         "சரி மாமா."
            
தன் வீட்டினுள் நுழைந்தான் தாணு.
        "பாக்கியம் பாக்கியம். கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான். நூறு சதம். தூங்கிண்டு இருக்காளா? தூங்கட்டும்."
        
நாராயணி சொன்னவாறு மணிகண்டனையும் வசந்தாவையும் அழைத்து வந்தாள்.
          
         "வாங்கோ. வாங்கோ."
         "மணிகண்டா உட்காரு டா. நீங்களும் உட்காருங்கோ. பாக்கியம் நீ கேசரி எடுத்துண்டு வந்துட்டு சேந்துக்கோ. கேசரி பிடிக்குமா வசந்தா?"
         "பிடிக்கும் மாமா."
         "குட். அம்மா சொன்னாளா மா?
         "நீங்க வரசொன்னதா சொன்னா மாமா."
         "சரியாப் போச்சுப் போ. ஓய் மணிகண்டா உன் கிட்ட என்ன சொன்னா?"
         "நீங்க சொன்னத சொல்லியிருக்கா."
         "வசந்தா. நாராயணி கெட்டிக்காரி. நீ வேணான்னு சொல்லுவியோன்னு, விஷயத்த சொல்லாமக் கூட்டிண்டு வந்துருக்கா. நான் அவாள வெச்சிண்டே கேக்கறேன். என் பையனப் பாத்துருக்கியா? பங்குனி உத்தரத்துக்கு வந்தானே. "
         "பாத்தேன் மாமா."
         "அவன உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்கும் பாக்கியத்துக்கும் ஆச."
         "நான் எப்படி மாமா? வேண்டாம் மாமா."
         "இல்லம்மா நீ ஒத்துக்கணும். அப்பா அம்மா மாதிரி மாமனார் மாமியார் நானாச்சும் ஃப்ராடு. அவன் பாக்கியம் மாதிரி. ரொம்ப நல்லவன். நீ பழச நினைக்காதே. நான் பாரதியார் வழி பிராமணன். எவன் எது சொன்னாலும் நாக்கப் பிடிங்கிக்கற மாதிரி கேப்பேன். அழாதே. பாக்கியம் இவள உள்ளே அழைச்சிண்டுப் போ."

பாக்கியம் வசந்ததாவை உள்ளே அழைத்துச் சென்றாள். 

         "மாமா நீங்க ஆனந்துக்கே கேப்பேள்னு நினக்கல."
         "நாராயணி, கண்ணக் கசக்காத. மணிகண்டா நீ என்னடா சொல்ற."
         "இறச்சகுளம் வந்த நேரம். எல்லாம் பெருமாள் செயல்."
         "கிரெடிட் கோஸ் டு பெருமாள் தோ தி எஃபெர்ட்ஸ் பியிங் ஃப்ரம் மை ஸைட்"
         "என்ன மாமா?"
         "சித்திரை விசுக்கு ஆனந்த் வரான். நாங்க அன்னிக்கி சாப்பட வரமாதிரி வரோம். நிச்சயம் பண்ணிக்கலாம். வெளியாட்களுக்கு முடியிற வரைக்கும் தெரிய வேண்டாம்."
        "சரி மாமா."

வசந்தாவும் அவர்கள் பெற்றோர்களும் சென்றவுடன்
         "பாரதியார் வழியாமே. எங்க அவர் பாட்டு ஒன்னு சொல்லுங்கோ."
         "அது தெரியாதா? (பாடலாய்) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?"
         "(சிரித்துவிட்டு) அது பாரதிதாசன் நல்லா சமாளிங்கோ."
         " நீ சிரிக்கறதுக்கு சொன்னேன்டி. நல்லதோர் வீணை செய்தேன். அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? நல்லதோர் வீணை வசந்தா. அவள புழுதில தள்ள விடமாட்டேன். வீணையடி வசந்தா ஆனந்துக்கு, மீட்டும் விரல் ஆனந்த் வசந்தாவுக்கு. புரிஞ்சதா?"
         "அது சரி."
         "நீ சித்திரை விசு வரைக்கும் தினமும் கோவில் போயிட்டு வரச்ச ஒரு எட்டுப் போயிட்டுவா."
         "வசந்தா ஆத்துக்குத் தானே. நீங்க சொல்லாட்டியும் போவேன்."

சித்திரை விசு அன்று,
        "மணிகண்டா!"
        "வாங்கோ மாமா! மாமி வாங்கோ!! ஆனந்த் வாப்பா!"
        "நாராயணி மாமி ரசம் எங்காத்து வரைக்கும் மணக்கறது."
        "மாமா! இன்னிக்கு ரசம் நான் பண்ணேன். அவ எடுபிடி."
        "நளபாகமா! வெரி குட்"
விரித்திரிந்த பாயில் அனைவரும் அமர்ந்தனர்.
        "பாயசம் எடுத்துண்டு வா மா வசந்தா."
அனைவருக்கும் வழங்கிவிட்டு தானும் அமர்ந்தாள் வசந்தா.
        "நம்ம எல்லாரும் பேசிட்டோம். வசந்தா ஆனந்த் தான் இனி பேசிட்டு சொல்லணும். அவா பின் பக்கம் போய் பேசிட்டு வரட்டும்.", என்றாள் பாக்கியம்.
        " ஆனந்த், வசந்தா. போங்கோ மா", என்றார் தாணு.

பின்புறத் தோட்டத்தில் மல்லிகைப் பூத்திருந்தது. மனோரஞ்சிதம் நறுமனம் வீசியது.
ஒரு பத்து நொடி மவுனம்.

        "வசந்தா! நான் கிளியரா சொல்லிடறேன். உன்னோட பாஸ்ட் எனக்குத் தெரியும். மூணு மாசத்துல தவறிட்டார். பரிதாபமோ, இல்ல இரக்கமோப் பட்டு நான் சம்மதிக்கல. உன்னப் பத்தி அப்பாவும் அம்மாவும் சொன்னா. நான் உன்னப் பாத்தப்பவும் பிடிச்சிருந்தது. நான் தெளிவா யோசிச்சு தான் சரின்னு சொன்னேன். அஃப் கோர்ஸ் நீயும் சரின்னு சொல்லணும். தெரியலையே பெரியவா எல்லாம் கம்பெல் பண்ணாளா இல்ல எப்படின்னு?"
        "நான் வேண்டான்னு தான் இருந்தேன். ஆனா இப்ப அப்படி இல்ல."
        "வெல். தென், இனி யார் என்ன சொன்னாலும் கவலப் படாத. ஐ வில் பி வித் யூ. எப்பவுமே."
         வசந்தாவின் முகத்தில் மல்லிகை மலர்தலைப் போல ஒரு சம்மத சிரிப்பு.
         "அப்போ நான் போய் சம்மதம்னு சொல்லலாமா?"
         "சொல்லலாமே."

இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.
         "என்னடா தட்ட மாத்திடலாமா?", என்றார் தாணு.
         "ம்ம்.."
         "வெரிகுட். மணிகண்டா, வாங்கிக்கோ. பாக்கியம் நீ வசந்தாவுக்கு குங்குமம் இட்டு விடு மா. "
         "தேங்கஸ் மாமா."
         "இருக்கட்டும் டா மணிகண்டா. உடம்ப பாத்துக்கோ. அப்பறம் ஒரு கண்டிஷன். நகை அது இதுன்னு ஒரு செலவும் கூடாது. கல்யாணமும் இங்க கிராமத்து மண்டபத்துல சிம்பிளா பண்ணாப் போதும்."
   
அன்று மாலையே கோவிலில் வீணை வாசிக்க வசந்தா வந்திருந்தாள். வசந்தா ராகத்தில் "பரம்புருஷ ஜகதீஸ்வர" என்றப் பாடலை பாக்கியம் பாட அதற்கு வீணை வாசித்தாள் வசந்தா.

நாட்கள் சென்றன.
        
        "பாக்கியம், பாக்கியம்"
        "சொல்லுங்கோ அண்ணா."
        "இங்க இருக்கியா? ஃபிரண்ட் ஒருத்தனப் பார்க்க நாகர்கோவில் கிளம்பினேன். பஸ் ஸ்டாப்ல வசந்தா நிந்துண்டு இருந்தா. உருமையா என்ன நிப்பாட்டி அவ ஸ்கூல்ல டிராப் பண்ண சொன்னா. நான் போய் விட்டுட்டு வந்தேன் ஸ்கூட்டர்ல."
        "அவளோ தானே."
        "என்ன நீ இப்படி சொல்ற? உரிமையா இருக்கா. எனக்கும் சந்தோஷமா இருக்கு."
        "எனக்கும் தான். ஆனா ஒரு விஷயம் தான் எனக்கு பயமா இருக்கு."
        "என்னது?"
        "அன்னிக்கு வசந்தா அழுதப்போ உள்ள கூட்டிண்டு போக சொன்னேள் இல்லையா?"
        "ஆமாம்"
        "கூட்டிண்டுப் போனேன். ஏன்மான்னுக் கேட்டேன். அவளோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட் பத்தின நினைப்பு அப்பப்போ வருதாம். பாவம் என்னப் பண்ண முடியும். கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போயிடும்னு சொன்னேன். சொல்லாமயே வெச்சிண்டு இருந்தேன். மனசுலயே வெச்சிண்டு இருக்க முடியல. அதான் சொல்லிட்டேன். அது ஒன்னு தான் ணா பயமா இருக்கு."
        "அடி போடி. காலேஜ் படிக்கும் போது ஆண்டாள்னு ஒரு பொண்ணு. லட்சணமா இருப்போ வாணிஶ்ரீ மாதிரி. அப்படி ஒரு லவ். ஒன் சைட் தான். இப்பவும் அப்பப்போ எனக்கு அவ ஞாபகம் வரும். என்ன பண்ண முடியும். இந்தப் பொண்ணு மூணு மாசம் ஒன்னா இருந்துருக்கா. எல்லாம் சரி ஆகிடும் ஆனந்த் பார்த்துப்பான்."

தன் முதல் கணவனின் நினைப்பு வசந்தாவை அவ்வப்போது வாட்டியது.

நாட்கள் சென்று. இனிதே நடந்தது ஆனந்த் வசந்தா திருமணம்.

        "வசந்தா. பாரதியார் எப்படி எழுதிருக்கார் பாரேன். வீணை அடி நீ எனக்கு. மீட்டும் விரல் நான் உனக்கு.", என்று சொல்லிக் கொண்டே வசந்தாவின் முதுகில் தன் விரலை வைத்தான் ஆனந்த்.
        வேண்டாம் என்பது போல் ஒரு சிணுங்கல்.
       "உடம்பு சரியில்லையா?"
         ஒரு அமைதி.
        "எதுலையோ டிஸ்டர்ப்டா இருக்க நீ. இட்ஸ் ஓகே. நீ ரெஸ்ட் எடு."
        "தேங்க்ஸ். என்ன புரிஞ்சிண்டதுக்கு."
        "எல்லாம் சரியாகிடும்"

ஒரு வாரம் கழித்து சென்னை வந்து சேர்ந்தனர் ஆனந்தும் வசந்தாவும்.
       "கல்யாணத்துக்கு என் கலீக்ஸ்லாம் வரல. அவங்களுக்கு ஒரு டின்னர் நெக்ஸ்ட் வீக் அரேஞ்ச் பண்ணிருக்கேன்."
       "சரி."
       "மிட் இயர். நீ ஸ்கூல் ஜாய்ன் பண்ண முடியாது. இன்டெர்நெட்ல வெப் பேஜ் கிரியேட் பண்ணித் தரேன். கிளாஸ் எடுத்து வீடியோஸ் அப்லோட் பண்ணு. உனக்கும் டச் இருக்கும். ரீச் நிறைய கிடைக்கும்."
       "சரி. ரொம்ப தேங்க்ஸ்."
       "எப்பன்னாலும் ஃபோன் பண்ணு. நான் வரேன்."
அபர்ணா, ஆனந்தின் நெருங்கிய நண்பர்.  கூட வேலை செய்பவர்.
       "அபர்ணா! ஹை."
       "வா. புது மாப்பிள்ளை. எப்படி இருக்கு மெரிட் லைஃப்."
       "ஒரு வாரம் தானே ஆயிருக்கு."
       "வசந்தா எப்படி இருக்கா?"
       "நல்லா இருக்கா. நான் போற வரைக்கும் தனியா இருக்கணும். பாவம் அவ ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட் பத்தின தாட்ஸ் இன்னும் இருக்கு. ரொம்ப கஷ்டப் படுறா என் கிட்டையும் காமிச்சிக்க முடியல."
       "சரி ஆகிடும் ஆனந்த். கல்யாண ஃபோட்டோ காட்டு."
        ஆனந்த் தன் மொபைலை நோண்டி விட்டு "ஆபிஸ் குரூப் வாட்ஸாப்லப் போட்டுருக்கேன் பாரு."
        "நல்ல ஜோடி டா. சாமி போஸ்டர்ல இருப்பாங்களே. அது மாதிரி இருக்கா வசந்தா."

ஆனந்த் மதிய உணவு முடித்து வரும்போது
       "ஆனந்த்"
       "சம்பத்! எப்படி இருக்க?"
       "நல்லா இருக்கேன். ஆனந்த் உன் கூட தனியாப் பேசணுமே."
       "வா மீட்டிங் ரூம் போலாம்"

       "சொல்லு சம்பத்."
       "ஃபோட்டோ பார்த்தேன். கங்கிராட்ஸ்"
       "தேங்க்ஸ் சம்பத்."
       "பொண்ணு பேர் என்ன?"
       "வசந்தா."
       "அப்பிடியா? சாரி டா. நான் உன் கிட்ட சொல்லாமான்னுத் தெரியல. ஸீ இஸ் எ மெரிட் உமன். நாகர்கோவில்ல என் கிளோஸ் ஃபிரெண்ட் ஷங்கர்னு. ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. பாவம் போயிட்டான்."
       "வேற யாருக்காவது தெரியுமா?"
       "இல்லத் தெரியாது."
       "குட். சம்பத் எனக்கு எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணேன். அபர்ணாக்குத் தெரியும். நாட் அதர்ஸ். அப்படியே இருக்கட்டுமே. யாராவது நெக்ஸ்ட் வீக் ட்ரீட்ல தெரியாத் தனமா ஓப்பன் பண்ணிணாலும் கஷ்டம்."
       "பிரவுட் ஆஃப் யூ டா. ஸீ இஸ் லக்கி. சொல்ல மாட்டேன். டேய் நான் ட்ரீட்டுக்கு வரல டா. சப்போஸ் என்ன ஐடண்டிஃபை பண்ணிட்டான்னா கஷ்டம். அந்த கல்யாணத்துக்கு நான் போனேன் டா."
       "இல்ல நீ வா. நான் சமாளிக்கறேன்"

வீட்டிற்கு வந்தடைந்தான் ஆனந்த்
       
      "பழகிடுத்தா?"
      "ஹ்ம்ம். நன்னா."
      "வீணை வாசிச்ச போல இருக்கே."
      "தினமும் வாசிப்பேன். நல்லாத் தெரிஞ்ச கலையாச்சே விட்டுடக் கூடாது. மாமி பாட்டுல ஃபேமஸ். உங்களுக்கும் எதாவது டச் இருக்கணுமே. நீங்க பாடுவேளா? எதாவது இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிப்பேளா?"
       "நல்லா வாசிப்பேன். பத்து பதினஞ்சு புக்ஸ் பாத்திருப்பியே. மியூசிக் கேக்கறதோட சரி."
       "பாக்கியம் மாமி இருந்தும் கத்துக்காம விட்டுட்டேள்."
       "அப்பா லைப்ரரி கூட்டிண்டு போய் பாரதியார், கல்கின்னு பழக்கப் படுத்திட்டார்."
       "நெக்ஸ்ட் வீக் ட்ரீட்னு சொன்னேளே. எத்தனப் பேரு?"
       "என் டீம் அஞ்சு பேரு. அவங்க ஃபேமிலி. மொத்தமா நம்பளையும் சேர்த்து ஒரு டசன் தல."
       "பன்னெண்டு பேருக்கு எதுக்கு ஹோட்டல்? நம்ப ஆத்துல கொடுப்போமே. நானும் ரெண்டு பாட்டு வாசிக்கறேன்."
       இரண்டு மணி நேரம் சம்பாஷனைத் தொடர்தது.

அடுத்த நாள் அலுவலகத்தில்
       "அபர்ணா. நேத்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். நல்ல புரிதல் உண்டாகிட்டிருக்கு."
       "குட்."
       "மோகனும் ரேவதியும் மௌன ராகத்துல சேருவாங்க இல்ல. அந்த ஒரு ஃபீல்."
       "நீ கலக்கு ஆனந்த்."
       "அப்பறம் ட்ரீட் வீட்டுல. ஸீ வான்ட்ஸ் டு பிளே கப்புல் ஆஃப் ஸாங்க்ஸ் ஃபார் யூ பீப்புல்."
       "குட் நான் மிதுனக் கூட்டிட்டு காலைலயே வந்துடறேன்."
       "கிரேட்"

அபர்ணா தன் கணவர் மிதுனுடன் காலையிலேயே வந்து சேர்தாள். நால்வரும் சேர்ந்து சமையலை முடித்தனர். மற்றவர்களும் ஏழு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தனர்.
      "சம்பத் இன்னும் வரல", என்றாள் அபர்ணா.
      "நான் கால் பண்றேன். அவன் வந்துட்டு இருப்பான்."
      "ஹலோ சம்பத்."
      "ஹலோ ஆனந்த். ட்ரீட் எப்படி போயிட்டிருக்கு."
      "வந்துட்டு இருக்கியா?"
      "இல்லடா நான் வரல."
      "என்னது வண்டி பிராப்ளமா?"
      "டேய் ஆனந்த்"
      "(வெளியே வந்து) நீ ஏன் வராம இருக்கன்னு எனக்குத் தெரியும். வந்து சேரு."
      "உன் வைஃப் ஐடன்டிஃபை பண்ணிட்டா கஷ்டமாப் போயிடும் வேணான்டா."
      "நீ வா. வர. வந்தாத் தான் நாங்க சாப்பிட ஆரம்பிப்போம். உன் வண்டி ரிப்பேர்னு சொல்லிருக்கேன். ஆட்டோல வா. ரிட்டன் மிதுன் டிராப் பண்ணுவான். ஆன் தி வே தானே. (உள்ளே வந்து) நீ அங்க வண்டிய நிப்பாட்டிட்டு ஆட்டோல வா."

சம்பத் வீட்டில்
      "யாரு டா?"
      "ஆனந்த் டா. அவன் வீட்டுல கல்யாண ட்ரீட்டு. மறந்துட்டேன். கால் பண்ணிட்டான். நான் போயிட்டு வரேன் டா."
     "வண்டி சாவி எடுக்காம்ப் போற."
     "இல்லடா ஹட்லைட் சரியில்ல. மாமா பாத்தான்னா பிரச்சன. நான் ஆட்டோலப் போறேன்"

ஆனந்த் வீட்டில்
      "சம்பத் வண்டி ரிப்பேராம் வர வழிலே. ஆட்டோல வந்துட்டு இருக்கான். அட்லீஸ்ட் ஆஃப் அன் அவர் ஆகும்"
      "சரி. வெயிட் பண்ணுவோம் ஃபார் டின்னர். வசந்தா நீ உன் வீணை கச்சேரி ஸ்டார்ட் பண்ணு." என்றாள் அபர்ணா.

 அனைவரும் அமர்ந்து கொண்டனர். இருபது நிமிடங்களுக்கு கார்நாடக ராகம் வாசித்தாள்.
    
        "ரொம்ப அற்புதம். கேக்க அற்புதமா இருந்தது. ஆனா எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி சினிமாப் பாட்டு வாசியேன்.", என்றாள் அபர்ணா.
        ஒரு வரி வாசித்து விட்டு, "இது என்னப் பாட்டு."
        "கண்கள் இரண்டால்"
        "இதே ராகம் தான் வாசிச்சேன். ரீதிகௌளை."
        "ஃபுல்லா வாசிம்மா ப்ளீஸ்."
        முழுவதும் வாசித்தாள்.
        " சூப்பர் மா."



        "தள்ளிப் போகாதேன்னு போன வருஷம் சிம்புப் படத்துல ஒரு பாட்டு வந்துதே மிதுனுக்குப் பிடிக்கும் அந்த பாட்டு."
        "வாசிக்கறேன்" என்று வாசித்தாள்.
        "ஆனந்த். நீ ஒரு பாட்டு கேளு. அவ வாசிக்கட்டும்."
        "எந்தப் பாட்டு கேக்கலாம்? தென்றல் வந்து தீண்டும் போது."
         வசந்தா வாசிக்க ஆயத்தமானாள்.
         "இரும்மா. உடனே ஸ்டார்ட் பண்ணாதே. நான் ஒரு ஹைப் கொடுக்கறேன். மிதுன் வீடியோ எடு. ரெடியா? இயர் கம்ஸ் தி ஸாங்க் தென்றல் வந்து தீண்டும்போது ஃப்ரம் தி வீணா ஆஃப் லவ்லி லேடி வசந்தா ஃபார் ஹெர் ஸ்வீட் ஹஸ்பண்ட் ஆனந்த்."
         வசந்தா பாதிப் பாடல் வாசித்தபோது சம்பத் உள்ளே நுழைந்தான். அவனை முன்னேயே பார்த்தது போல் நினைவு வந்தது அவளுக்கு. புதிதாய் பார்த்தவர் போல காட்டிக் கொண்டான்.சம்பத். 
         அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பினர். சம்பத் ஷங்கரின் நண்பர் என்பது வசந்தா நினைவுக்கு வந்தது. ஆனந்திடம் அவன் சொன்னால் ஆனந்த் வருத்தப்படுவார் என அவளே நினைத்துக் கொண்டாள். பிறர் என்ன நினைப்பர் என்ற எண்ணமே அவளை வாட்டியது. ஆனந்திடமும் சொல்ல இயலவில்லை. 

ஆறு மாதங்கள் நண்பர்களாகவே வாழ்ந்தனர். 

இறச்சகுளத்திற்கு சுமங்கலி பிரார்த்தனைக்குச் சென்றாள் வசந்தா.
        "வாம்மா வசந்தா. பரவாயில்லையே. தனியா வந்துட்டயே. இந்த பாக்கியத்துக்கு நாகர்கோவில் மார்கெட் போகவும் நான் துணைக்குப் போகணும்."
        "வா வசந்தா. என்ன எதாச்சு சொல்லணும் இவருக்கு."
 பூஜைக்கு கோவிலுக்கு கிளம்பினர்.
        "வா பாக்கியம். வாம்மா வசந்தா.", என்று அழைத்தார் ஜானகி.
        "வரோம்"
        "பாக்கியம்! வசந்தா உட்காரனுமா? "
        "ஏன் டி. ஆனந்த் உயிரோட தானே இருக்கான்."
        "அதுக்கு சொல்லல."
        "நாங்க கிளம்பறோம். நீ நல்லா நடத்து டி அம்மா."

திட்டியவாறே வீட்டிற்கு சென்றாள்.
       "அறிவில்லாதவா. நீ இங்க உட்காரும்மா. நான் பண்றேன் சுமங்கலி பூஜ. நீயும் நானும் மட்டும் போதும். இந்த ஜானகிக்கு டாப் இல்லம்மா. (கண்களில் தண்ணீர் வர) நீ உட்காரும்மா."

 வீட்டிலேயே சுமங்கலி பிரார்த்தனை நடத்தினாள். நடந்தவற்றை ஆனந்திடம் தொலைபேசியில் கூறினாள். வசந்தா சென்னை வந்தவுடன் வசந்தாவிற்கு தெரியாமல் அபர்ணா வீட்டில் ஒரு சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்து வசந்தாவைப் பங்கு பெற செய்தான். வசந்தாவிடம் தாழ்வு உணர்ச்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.
   
ஒரு நாள் மாலையில்
         "வசந்தா. நான் உன் கிட்டத் தனியாப் பேசணும்"
         " நீங்களும் நானும் தானே இருக்கோம்."
         "இல்லமா இன்னொருத்தரும் இருக்கா."
         "யாரு?"
         "ஒருத்தர். தனக்குள்ள எதையெல்லமோ வெச்சிண்டு வெளியே சொல்லாம சோக ராகங்கள் வாசிச்சிண்டு."
         "இல்ல"
         "நான் உன்ன வித்தியாசமாப் பாக்கல. எனக்குத் தெரிஞ்சு அந்த ஜானகி மாமித் தவர வேற யாரும் வருத்தப்படுத்தல. அவ பழையப் பஞ்சாங்கம் அடுத்த வருஷப் பூஜைக்கு அவ இருக்கப் போறதில்ல ஊசலாடிண்டி இருக்கா. ஏம்மா நீயே ஒரு சாரோ சர்க்கிள் கிரியேட் பண்ணிக்கற, ஒரு நண்பணா கேக்கறேன்."
        கண்ணீர் விடாது உள்ளே அழுதாள் வசந்தா.
        "நீயே தான்மா மத்தவா என்ன நினைப்பான்னு ஒரு இது க்ரியேட் பண்ணிண்டு இருக்க. நான் இருக்கேன். புரியரதா? ஒன்பது மாசமா ஒரே ஆத்துல இருக்கோம். உன்னப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீ நல்லவ. நீ என்ன ஏமாத்துல. உன்னையும் ஏமாத்திக்கல."
       அழத் தொடங்கினாள்.
       "அந்த சர்க்குளத் தூக்கிப் போடு மா. அழாதே. போய் தூங்கு."

அடுத்த நாள் மாலை மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் ஶ்ரீ ராகம் இரண்டு மணி நேரத்திற்கு வாசித்துக் கொண்டிருந்தாள் வசந்தா. ஆனந்த் வந்ததைப் பார்த்து ஒரு புன்னகைப் பூத்து வாசிக்கத் தொடங்கினாள்.

மறுநாள்
       "அபர்ணா. ஒரு வாரம் நான் லீவு."
       "என்னடா?"
       "வசந்தாவுக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு கூர்க் கூட்டிட்டுப் போறேன்."
       "என்ன ஹனிமூனா?"
       "அப்படித்தான்னு வெச்சிக்கோயேன்"
       "நல்ல சேன்ஜ்ல?"
       "ஒவ்வொரு நாளும். எஸ். அவ சில கஷ்டங்கள வெளில சொல்லாம கஷ்டப்பட்டா. உனக்குத் தான் தெரியுமே. க்ளியரா பேசினேன். அவளே ஒரு மாற்றத்துக்கு வெளில எங்கையாவது ஒரு வாரம் போலாம் னா. ரொம்ப சந்தோஷமா இருந்தா. கொஞ்சம் நாள் போனா மாறிடும். நல்லப் பொண்ணு யூ நோ."
       "ஹேப்பி ஃபார் யூ டா."
       "தேங்க்ஸ் அபர்ணா."
       "ஃபர்ஸ்ட் நைட் அங்கயா இல்ல?"
       "ஏன்டி அபர்ணா?"
       "சாரி டா. ஃபன் டா."

மூன்று மாதங்கள் கழித்து.

       "பாக்கியம் ஃபோன் அடிக்கறதுப் பாரு. எடு."
       "ஹலோ."
       "மாமி."
       "சொல்லும்மா வசந்தா. எப்படி இருக்க?"
       "நல்லா இருக்கேன் மாமி."
       "ஆனந்த்"
       "அவரும் நல்லா இருக்கார். மாமி.."
       "சொல்லும்மா."
       "ரெண்டு மாசம் எனக்குத் தள்ளிப் போயிருக்கு மாமி."
       "ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. நாராயணி இங்க தான் இருக்கா. கொடுக்கறேன். நீயே சொல்லு."

        "அண்ணா வசந்தாவுக்கு ரெண்டு மாசம் தள்ளிப் போயிருக்காம்"
        "ரொம்ப சந்தோஷம் மா. டேய் மணிகண்டா. என்ன முழிக்கற? தாத்தா ஆகப் போறடா."
        வார்த்தை வராமல் அப்படியே மகிழ்ச்சியில் அடைத்துப் போனார் மணிகண்டன்.
         "மணிகண்டா! என்னடா அப்படியே ஸ்டக் ஆயிட்டே. பேரன் பேத்தி பாக்காம்ப் போயிடப் போற டா."
        "எல்லாம் பெருமாள் செயல்"
        " அஸ் யூசுவல் கிரெடிட்ஸ் கோஸ் டு பெருமாள் தோ டெலிஜெண்ட் எஃபர்ட்ஸ் ஆர் ஃப்ரம் மை சன் அண்ட் டாட்டர் இன் லா."
        "என்ன மாமா?"
        "ஒன்னும் இல்ல டா. இங்கிலீஷ் மறக்கக் கூடாதுன்னு இங்கிலீஷ்ல சுக்லாம்பரதம் சொன்னேன்."
        "ஓஹோ."