Friday, July 24, 2015

தித்திப்பு பாகற்காய்

திவ்யா காலாண்டுத்தேர்வின் போது

             "கீதா!! நாப்பத்திரெண்டு வயசாகுது உனக்கு. கல்யாணமாகி பதினேழு வருஷம். இன்னும் எத்தன நாள் சண்டபோடப்போறோம்."
             "நீ பேசறதெல்லாம் சரி. நான் எது சொன்னாலும் தப்பு."
             "ஏம்மா இப்பிடி ஹிஸ்டீரியா வந்நவ மாதிரி கத்தற?"
             "சேகர், நீங்க அமைதியா இப்பிடி குத்தற மாதிரிப் பேசுவீங்க. நான் கத்தி பதில் பேசினா ஹிஸ்டீரியாவா?"
              "கீதா! திவ்யா டீயூசன் முடிஞ்சு வர நேரம். எக்ஸாம் வேற, இந்த நேரத்துல சண்ட வேண்டாம்"
              "எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டு சண்ட வேண்டாமாம் நரகம்டா சாமி."
              "ஒரு ரிமோட்டுக்காக எவளோ சண்டடா சாமி?", தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் சேகர்.
             
               சற்று நேரத்ததில் சமையலறையில் இருந்து டமடம என சத்தம் கேட்டது. ஓடினான் சேகர். கீதா இடுப்பைப் பிடித்தவாறு கீழே விழுந்து இருந்தாள்

               "ஹாஸ்பிடல் போலாமா?"
               "ஒன்னும் வேணாம். ஆ... ஐயடக்ஸ் தடவினாப் போதும்"
               "இல்லமா போவோம்."
               "ஹிஸ்டீரியாவுக்கு காமிக்கவா? எனக்கின்னும் ஃபுல்லா கோபம் குறையல."
 

திவ்யா பள்ளி சுற்றுலா சென்றபோது

                "முடியல என்னாலே. ஏன் இப்படி ஆகுதோ? கீதா, எதுக்கெடுத்தாலும் சண்ட. நீ பேசினாலே அயன் பாக்ஸ மூஞ்சுல வெச்ச மாதிரி இருக்கு."
                "எத செஞ்சாலும் எதாவது சொன்னா? மனசுல நான் உங்கள மதிக்கலன்னு நினைப்பு. ஈகோ."
                "வாயமூடு. பேசினா.."
                "ஏன் மூடனும். யார்கிட்ட இருக்குற கோபத்தையோ என்கிட்ட காமிக்க வேண்டியது. நான் என்ன கோவத் தொட்டியா? ரொம்ப பேசாதீங்க. எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுங்க. நான் போயிடறேன்."
                " போதும். எல்லாம் போதும். நாளைக்கு காலைலயே என் ஃபிரெண்ட் அட்வகேட் அசோக் கிட்ட பேசுறேன். இனிமேலாவது நிம்மதியா..."
                 
                காலிங் பெல் சத்தம் கேட்டது. சேகர் கதவை திறந்தான்.
           
                "வாடா சுந்தர். கீதா உன் தம்பி வந்துருக்கான் மா. அப்பிடியே தூத்துக்குடில இருந்து வாங்கிட்டு வந்த மக்ரூன் நாலு எடுத்துட்டு வாம்மா சுந்தருக்கு."

                மூவருக்கும் சம்பாஷனைத் தொடர்நத்து. 

                "மாமா. புது செல்போன் வாங்கிருக்கேன்"
                "சூப்பர் டா."
                "அக்கா நீயும் மாமாவும் அந்திமழைப் பொழிகிறது பாடுங்க. நான் வீடியோ எடுக்கறேன்."
                "தொண்ட சரியில்ல டா. வேணாம்."
                " மாமா, நீங்கப் பாடுங்க. அக்கா பிஹு பண்ணும் ஆனா பாடிடும்."
                    
                இருவரும் சேர்ந்து பாடி முடித்தனர். இருவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
                    
                "கீதா! நான் கிளம்புறேன். வாட்ஸப் குரூப்ல பாட்டு வீடியோப் போட்டுருக்கேன். பாருங்க. பை!!"

                சில நிமிடங்களுக்கு அமைதியே ஒலி நிரப்பியது. இருவர் கைபேசியிலும் குறிப்பொலி எழும்பியது. லேஸ் புன்னகை.
                     
                " கீதா! கீதா! பியூட்டிஃபுல் டூயட். கிரேட் அம்மா அண்ட் அப்பா. மேட் ஃபார் ஈச் அதர்னு திவ்யா போட்டுருக்கா. பாத்தீயா?"
                      
                காதில் வாங்காதவள் போல் இருந்தாள் கீதா. 
   
                "பேச மாட்டியா?"
                "எதுக்கு அயன்பாக்ஸ்ல எல்லாம் சூடு வச்சிக்கிட்டு?"
                        
                அன்றிரவு, இருவர் கைபேசியிலும் ஐந்து முறையாவது அந்திமழை பொழிந்தது.

திவ்யா கல்லூரி மூன்றாமாண்டின் போது

                "கீதா! என்னடி இது? ஒழுங்கா இருந்த புருவத்த பியூட்டி பார்லர் போய் என்னலாமோ பண்ணிட்டு வந்துருக்க. நம்மப் பொண்ணுக்கு இருபது வயசு ஞாபகம் வச்சிக்கோ."
                "நீங்க டை அடிச்சிக்கலாம். நான்.."
                "டைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா? யார்கிட்ட போய் சொல்றது. உன் அப்பா அம்மா டிக்கட் வாங்கிட்டாங்க. உன் தம்பி அரமண்டயன். அவனே ஒரு வானரம். முடி போன எடத்துலக்கூட டாட்டு போட்டு வெச்சிருக்ககான்."
                "பேசாம டைவர்ஸ் கொடுத்துட்டு நிம்மதியா இருங்க. நான் கோயமுத்தூர் போய் திவ்யா கூட இருக்கேன் பாட்டு கிளாஸ் எடுத்து பொழச்சிக்குவேன்."
                "டிக்கெட் எடுத்து தரேன் போயிட்டு வா. பட் பாட்டு எல்லாம் வேண்டாம். யாராவது ஸ்டூடண்ட் அடிச்சிட்டா, நான் விடோயர் கம் டைவர்சி ஆயிடுவேன். நல்ல காம்பினேசன்ல."
                 "நல்ல ஜோக். சிரிப்பு தான் வரல. வீக்கெண்ட் கோயமுத்தூர் போயிட்டு திவ்யா கூட ஊட்டி போலாமா?"
                 "ஸ்யூர்."


திவ்யா முதல் குழந்தையின் பதிமூன்று வயதின் போது
                
                "என்னங்க போயிட்டேன்", பாத்ரூமிலிருந்து குரல் கொடுத்தாள் கீதா.
        
                 மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு இருக்கும் பத்து பதினைந்து முடியையும் கோதியவாறு நுழைந்தார் சேகர். வாஷ் ஷவரை எடுத்து துடைத்து விட்டார். கீதாவின் கண்களில் நீர் தழும்பியது. 

                  "விளக்கேத்த நேரமாச்சு. என் தல சீவிவிடுங்களேன்"

                   தலை சீவிவிட்டு கண்ணாடியில் காண்பித்தார்.
                   
                   "வகுடு எடுக்கத் தெரியுதா? ஊட்டி ஹேர்பின் பெண்டே பரவாயில்லப் போலியே."
                   "திமிரப் பாத்தியா? திவ்யா காலாண்டுத் தேர்வின்போதே எழுதினவன் சண்டையப் பெருசாக்கி டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கலாம். எல்லாம் என் தலையெழுத்து. இருந்தாலும் ஒரு தித்திப்பு இருக்கு."
                 

          

No comments:

Post a Comment