Monday, October 21, 2013

மழை அவளுக்காக

மலைமோதி மேகங்கள் மழையாக பொழியும்
அவளிட்ட கோலம் மழையோடு போகும் 
கோலத்தை காணாது சிற்றெறும்பு வருந்தும் 
அதன் கண்ணீரும் மழைநீரில் மெதுவாக கலக்கும் 

கூரையில் காகம் நனைந்தே மகிழும் 
அவள் விரட்ட காகமும் பறந்தே போகும் 
ஏன் விரட்டினோமென அவள் மனம் வருந்தும் 
அவள் சோகம் கண்டு காகம் திரும்பும் 

காற்றினில் கதவு வேகமாய் அடிக்கும் 
அவள் பாடும் பாட்டுக்கு தாளங்கள் போடும் 
நொடியேனும் அவள் பாடாது போனால்
டமடம என்று கோபத்தில் துடிக்கும்

மரங்கள்தான் பூரித்து காற்றலை வீசும் 
அவள் சிரிப்பலையின் திசையில் கலந்திட்டு செல்லும்
அவள் முகமோ நொடியேனும் வாடி போனால்
காற்றும் கூடவே நின்றே போகும் 

மின்னலொளி  இவளை கண்டிட்டு போகும் 
இவளொளி மின்னலொளி நேர்நேராய் பார்க்கும் 
அதனாலே பூகம்பம் இடியொலியாய் வாரும் 
வான் தோற்று அவமானம் தாங்காது இருளும் 

அவள் இடைதொட்ட நீர்த்துளி தற்பெருமை கொள்ளும் 
அவள் கண்ணிமையை தொட்ட மழைநீரோ மகிழும் 
அவள் உடைதொட்ட நீர்த்துளி மறுஜென்மம் கேட்கும் 
அவள் கால்பட்ட நீரோ சந்தோஷத்தில் குதிக்கும் 

மலை மோதாதா மேகம் துக்கம் கொள்ளும் 
திசைதிரும்பி சென்று மலைமோத எண்ணும்
அவள் மழைபோதும் என நினைக்க சோகம் கொள்ளும் 
மறுபடியும் அங்குவர பிரமனை வேண்டும் 

வெய்யில் வர சில நீரோ வான் நோக்கி செல்லும்
மீண்டும் வந்து அவளிடைதீண்ட ஆசை கொள்ளும் 
ஓடை சென்று கலந்திட்ட நீரோ 
மீனுக்கும் பாம்பிற்கும் அவளழகை உரைக்கும்

1 comment: