Thursday, September 24, 2015

நல்லறமாலை - நல்லதை தினம் நினைத்திடு மனமே

பாடலாய்:


பல்லவி: (ராகம்: ரஞ்சனி)

நல்லதை தினம் நினைத்திடு மனமே
நல்லதை தினம் நினைத்திடு மனமே

சரணம் 1: (ராகம்: ஸ்ரீரஞ்சனி)

அன்பும் அறமுமாய் பண்பும் பயனுமாய்
நல்ல ஒழுக்கமுமாய்
நீ இருப்பாய் நீ இருப்பாய்


சரணம் 2: (ராகம்: மேகரஞ்சனி)

வாய்மை நிறைந்த மனதில் நீ
உலாவும் வெளிச்சம் நீ தெளிவும் நீ
நல்ல அறமும் நீ நல்லறமும் நீ

சரணம் 3: (ராகம்: ஜனரஞ்சனி)

ஈதலால் வரும் புகழும் நீ நற்பெயரும் நீ
வருவோர்க்கு வழங்கிடும் குணமும் நீ
நற்புகழும் நீ நல்லறமும் நீ

Saturday, September 19, 2015

நதிகள் இணைப்பு பாடல்


பாடலாக

பாடல் வரிகள்

பல்லவி:

வளைந்து வளைந்து வரும் காவிரி நதியே
கங்கையோடு இணையாயோ

அனுபல்லவி:

வங்கக் கடல் சேரும் மகாநதியே
நீ அரபிக் கடல் சேராயோ


சரணம் 1:

பாலையாய் போகும் பாலாற்றிலே
பாலாய் ஓடிடு கிருஷ்ணா
அழகர் இறங்கிடும் வைகைதனிலே
சிந்துவும் தபதியும் சேராதோ

சரணம் 2:

சிறுவாணி நீரின் சுவை பூர்ணாவில் சேரும்
காவிரி நீரின் சுவை கூவமும் அடையும்
துங்கையும் இங்கே பொன்னையில் கலந்திட
பயிர்களும் செழிக்கும் வயிர்களும் நிறையும்

Monday, September 14, 2015

முருகன் பாட்டு - மயில் மீது ஆடிடும்

கைலாஷ் கேரின் தில்ருபா பாடல் மெட்டிற்கு எழுதியது.

பாடலாக


பல்லவி:

மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
வேலவா சண்முகா அழைக்கிறோம் முன்னர் வா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா 


சரணம் 1:

பக்தரெல்லாம் கூடி நின்று ஆரோஹரா என்பர்
காவடியும் சுமந்து வந்து உந்தன் அடி சேர்வர்
உந்தன் பெயர் சொல்லி சொல்லி மலைமீது ஏறி
கோபுரம் தான் கண்ட பின்னே பரவசம் கொள்வர்
வேலவன் வேலினை கண்டதும் ஆனந்தம்

சரணம் 2:

வீரமுண்டு காதலுண்டு ரெண்டும் சேர்ந்த வேலவா
தமிழாக ஆகி நிற்கும் கலிதீர்க்கும் சண்முகா
சிவனுக்கு பாடம் தந்தாய் சுவாமிமலை ஏறி
உம்மை காண நாமும் வந்தோம் சந்தனம் பூசி
கந்தனாய் வேலனாய் நிற்கிறாய் சண்முகா

Saturday, September 12, 2015

கிருஷ்ணன் பாட்டு - இன்னும் என்ன கோபமோ

புரந்தரதாசர் அவர்களின் கன்னட பாடலான ராம மந்த்ரவ ஜபிசோ பாடலின் மெட்டிற்கு எழுதப்பட்டது

பல்லவி:

இன்னும் என்ன கோபமோ என்மேலே
இன்னும் என்ன கோபமோ கிருஷ்ணா

அனுபல்லவி:

பூவாலும் பாவாலும் உன்னையே தொழுதேனே
வெண்ணெய் பால் இவைகொண்டு நைவைத்யம் செய்தேனே



சரணம்:

பஜனைகள் பாடியும் தீராது ஒரு கோபம்
கீதையை தந்தோனே ஏன் இந்த தனி கோபம்
மந்திரம் பல சொல்லி தனியாத ஒரு கோபம்
கிருஷ்ணா என்றுருகி குறையாத ஒரு கோபம்

பாடலாக

https://soundcloud.com/ramanan-venkatasubramaniam/innum-enna-kobamo-ragam


Friday, July 31, 2015

சிதறுதேங்காய்

பள்ளியை முடித்து மணிகண்டனும் சுப்ரமணியும் வீடுத் திரும்பிக் கொண்டிருந்தனர். தென்மேற்கு பருவகாற்று
தொடங்க வாரங்களே இருக்கும் வேளையில் வானம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.

          " சுப்ரமணி! இந்த மாசம் சதுர்த்தி அன்னிக்கு எவம்லாம் வடல் போடுவானோ, ஒன்னு விடக்குடாதுலே அம்புட்டயும் பொறுக்கிடனும்"
          "ரெவிச் சண்டைக்கு வருவானே? அவனச் சமாளிச்சிட்டா போதும்லே. பொறவு அந்ந நாகம்மப்பாட்டி தான்."
          "ஆமாம்லே அவனக்கு எதையாவது கொடுத்து பேதிக்கிருக்க வைக்கனும். பங்குனி உத்தரத்துக்கு சாத்தான் கோயில்ல எல்லாரையும் சவட்டித் தள்ளி முன்னுக்குப் போய் எடுத்துக்கிட்டே இருந்தான். ஒரு மாசம் சாப்பாட்டுக்குச் சேத்துக்கிட்டானோ?"
         "ஓட்டலுக்கு வித்துட்டு தங்கத்துல சினிமாப் பாத்தானாம்"
         "மக்கா! ரெவிய இந்த தடவ விடக்கூடாதுலே. நாலஞ்சு தேங்காதான் உடைப்பாங்க பொறவு நமக்கு மிஞ்சாது." 
         "வழிப் பண்ணுவோம்"

காலையில் எழுந்து குளத்துக்கு செல்லும்போது திட்டம் தீட்டத் தொடங்கினர்.

        "என்னலே செய்யலாம் மணிகண்டா?"
        "இந்த ரெவி வீராணமங்கலம் ஆத்துக்கு போய்தாமுலே சாயிங்காலம் குளிப்பான். அவன் குளிச்சிட்டு இருக்குறப் பொறவு துண்டு துணி எல்லாம் தூக்கிட்டு ஓடிடுவோம். அடுத்த நாள் வரைக்கும் நீந்திகிட்டே இருக்கட்டும்."
        "நல்ல ஐடியா தான். யாரும் நம்மளப் பாத்துடக்கூடாது."
         "சுப்ரமணி, நான் ரன்னிங் ரேசில பர்ஸ்ட் பாத்துக்கோ. யாரும் பாக்காதப்போ ஆத்துல துணியப் போட்டுட்டு ஓடிடுவோம்"
         "சரிடா மணிகண்டா."

மாலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரமணியும் மணிகண்டனும் ஆற்றங்கரைய அடைந்தனர். மணி ஐந்தரை ஆகியும் ரெவி வந்திருக்கவில்லை. இன்னும் பொறுத்தால் அங்கே ஒன்றும் முடியாது என்று கிராமத்துக்குப் புறப்பட்டனர். செல்லும் வழியில் ரெவி ஏன் குளிக்க வரவில்லை என்ற கேள்விகள். கோவிலிலும் ரெவி இல்லை. மணிகண்டன் வேகமாக ரெவியின் வீட்டிற்கு ஓடினான். வீட்டினுள் படுத்துக் கிடந்தான்.
       
        "அண்ணே இன்னிக்கு சதுர்த்தி. கோயிலுக்கு வரலியா?"
         " மக்கா. காய்ச்சல் டேய். வரலே."
         "சரிண்ணே. பூஜ ஆரம்பிச்சிடும். நான் வரேன்"

காற்றினில் கைகளச் சுற்றிக் கொண்டு வேகமாக்க் கோவில் வந்தடைந்தான். 
      
       "ரெவிக்கு உடம்புக்குச் சுகம் இல்ல. வரமாட்டான்"
       "நாகம்மப் பாட்டி மட்டும் தான் நிக்குது. அது குனியறதுக்குள்ள நம்ம அள்ளிடலாம்"

மணி ஏழைத் தொட்டது. கோவில் வந்தவர்கள் எவரும் தேங்காய் கொண்டு வந்த பாடில்லை.
      
      "ஏலேய் எவாளும் தேங்காய் கொண்டுவந்த பாடுல்லையே."
      "ரெவியும் இல்ல தேங்காயக் காணுமே."

கோயிலுக்குள் ஃபங்க் வாத்தியார் தேங்காயோடு நுழைந்தார். 
      "போச்சுலே மணிகண்டா"

 சிறுவர்களைப் பார்த்து ஒரு அதட்டல் பார்வை பார்த்து
      "என்னலே வடல் தேங்கா பொறுக்கவா?", ஆம் என்பது போல் இருவரும் தலையாட்டினர்.
      "காலாண்டுத் தேர்வு என்னிக்குலே?"
      "அடுத்த வாரம்."' என்றான் சுப்ரமணி. 
      "போனப் பரிட்சைல கணக்குல எவ்வளவு டேய்"
      மெல்லிய குரலில், "அம்பத்தி ஏழு."
       "மணிகண்டா நீ?"
       "எழுவது."
       "படிக்காம தேங்காப் பொறுக்கு நூற்றுக்கும் மேல வாங்கலாம். ஓடிடு கண்ணுலப்படக்கூடாது. கற்பூரம் காமிக்கற வரைக்கும் இங்கதாம்லே இருப்பேன். எட்டு மணிக்கு வந்து கொழுக்கட்ட வாங்கிட்டு ஓடிடனும்."
       தலையாட்டிவிட்டு இருவரும் ஓடினர்.


   
எட்டு மணிபோல கோவிலுக்கு வந்து கொழுக்கட்டை வாங்கிக்கொண்டு அவரவர் வீடு திரும்பினர் சுப்ரமணிக்கு நாகம்மைக்கு அடுத்த வீடு.

        அரைமணி நேரம் கழித்து நாகம்மையின் குரல் கேட்டது. வாசலுக்கு ஓடினான் சுப்ரமணி.
       
        "சுப்ரமணி. லஷ்மண சாமிக்கு மவன் பதினெட்டுத் தேங்கா உடைச்சாங்கப்போ. நான் சமையலுக்கு எடுத்துக்கிட்டேன். இந்தாப்போ பையம்மாருக்கெல்லாம் கொடு. ரெவிக்கும் கொடு காய்ச்சலாம் பாவம்"
        
        சரி என்று வாங்கி கொண்டான். பத்து செதில்களை தனக்கு எடுத்துவிட்டு, மணிகண்டனுக்கும் கொடுத்தான். ஊர் சிறார்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி பத்து செதில்களில் ஆளுக்கு ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரெவி வீட்டுக்குச் சென்றனர்.

        "அண்ணே. தேங்கா."
        "என்னலே, இவ்வளவு?"
        "சுந்தர் மாமா பதினெட்டுத் தேங்கா உடைச்சாராம்"
        "அடேங்கப்பா. எனக்கு எதுக்குடா இவ்வளவு? ஒன்னு போதும் சாமிக்காக. நாகம்மை பாட்டிக்கு கொடு. சமச்சிக்கிடும் பாவம்"

         "அட ரெவி அண்ணனப் போய் இப்படி சொல்லுதாய்ங்களே ஊருல."
         "ஆமாம் லே. சரி நான் தூங்கப் போறேன்"

         சுப்ரமணி அருகில் படுத்திருந்த தாத்தாவிடம், "தாத்தா, கோவில்ல எதுக்கு தேங்கா உடைக்குறாங்க?", என்று கேட்டான்.
          "அதுவாப்போ. தேங்கா வெளிலப் பாத்தா மொரடா இருக்குல்ல?"
          "ஆமாம்"
          "உடைச்ச உடனே உள்ள நல்ல ருசியானத் தேங்கா. அத உடைக்கற மாதிரி, போட்டி பொறாம இந்த மாதிரி கெட்டதையெல்லாம் உடச்சி, நல்ல குணத்த கொடுன்னு வேண்டற மாதிரி."

           எதையோ யோசித்துக் கொண்டேத் தூங்கிப் போனான் சுப்ரமணி.

Friday, July 24, 2015

தித்திப்பு பாகற்காய்

திவ்யா காலாண்டுத்தேர்வின் போது

             "கீதா!! நாப்பத்திரெண்டு வயசாகுது உனக்கு. கல்யாணமாகி பதினேழு வருஷம். இன்னும் எத்தன நாள் சண்டபோடப்போறோம்."
             "நீ பேசறதெல்லாம் சரி. நான் எது சொன்னாலும் தப்பு."
             "ஏம்மா இப்பிடி ஹிஸ்டீரியா வந்நவ மாதிரி கத்தற?"
             "சேகர், நீங்க அமைதியா இப்பிடி குத்தற மாதிரிப் பேசுவீங்க. நான் கத்தி பதில் பேசினா ஹிஸ்டீரியாவா?"
              "கீதா! திவ்யா டீயூசன் முடிஞ்சு வர நேரம். எக்ஸாம் வேற, இந்த நேரத்துல சண்ட வேண்டாம்"
              "எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டு சண்ட வேண்டாமாம் நரகம்டா சாமி."
              "ஒரு ரிமோட்டுக்காக எவளோ சண்டடா சாமி?", தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் சேகர்.
             
               சற்று நேரத்ததில் சமையலறையில் இருந்து டமடம என சத்தம் கேட்டது. ஓடினான் சேகர். கீதா இடுப்பைப் பிடித்தவாறு கீழே விழுந்து இருந்தாள்

               "ஹாஸ்பிடல் போலாமா?"
               "ஒன்னும் வேணாம். ஆ... ஐயடக்ஸ் தடவினாப் போதும்"
               "இல்லமா போவோம்."
               "ஹிஸ்டீரியாவுக்கு காமிக்கவா? எனக்கின்னும் ஃபுல்லா கோபம் குறையல."
 

திவ்யா பள்ளி சுற்றுலா சென்றபோது

                "முடியல என்னாலே. ஏன் இப்படி ஆகுதோ? கீதா, எதுக்கெடுத்தாலும் சண்ட. நீ பேசினாலே அயன் பாக்ஸ மூஞ்சுல வெச்ச மாதிரி இருக்கு."
                "எத செஞ்சாலும் எதாவது சொன்னா? மனசுல நான் உங்கள மதிக்கலன்னு நினைப்பு. ஈகோ."
                "வாயமூடு. பேசினா.."
                "ஏன் மூடனும். யார்கிட்ட இருக்குற கோபத்தையோ என்கிட்ட காமிக்க வேண்டியது. நான் என்ன கோவத் தொட்டியா? ரொம்ப பேசாதீங்க. எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுங்க. நான் போயிடறேன்."
                " போதும். எல்லாம் போதும். நாளைக்கு காலைலயே என் ஃபிரெண்ட் அட்வகேட் அசோக் கிட்ட பேசுறேன். இனிமேலாவது நிம்மதியா..."
                 
                காலிங் பெல் சத்தம் கேட்டது. சேகர் கதவை திறந்தான்.
           
                "வாடா சுந்தர். கீதா உன் தம்பி வந்துருக்கான் மா. அப்பிடியே தூத்துக்குடில இருந்து வாங்கிட்டு வந்த மக்ரூன் நாலு எடுத்துட்டு வாம்மா சுந்தருக்கு."

                மூவருக்கும் சம்பாஷனைத் தொடர்நத்து. 

                "மாமா. புது செல்போன் வாங்கிருக்கேன்"
                "சூப்பர் டா."
                "அக்கா நீயும் மாமாவும் அந்திமழைப் பொழிகிறது பாடுங்க. நான் வீடியோ எடுக்கறேன்."
                "தொண்ட சரியில்ல டா. வேணாம்."
                " மாமா, நீங்கப் பாடுங்க. அக்கா பிஹு பண்ணும் ஆனா பாடிடும்."
                    
                இருவரும் சேர்ந்து பாடி முடித்தனர். இருவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
                    
                "கீதா! நான் கிளம்புறேன். வாட்ஸப் குரூப்ல பாட்டு வீடியோப் போட்டுருக்கேன். பாருங்க. பை!!"

                சில நிமிடங்களுக்கு அமைதியே ஒலி நிரப்பியது. இருவர் கைபேசியிலும் குறிப்பொலி எழும்பியது. லேஸ் புன்னகை.
                     
                " கீதா! கீதா! பியூட்டிஃபுல் டூயட். கிரேட் அம்மா அண்ட் அப்பா. மேட் ஃபார் ஈச் அதர்னு திவ்யா போட்டுருக்கா. பாத்தீயா?"
                      
                காதில் வாங்காதவள் போல் இருந்தாள் கீதா. 
   
                "பேச மாட்டியா?"
                "எதுக்கு அயன்பாக்ஸ்ல எல்லாம் சூடு வச்சிக்கிட்டு?"
                        
                அன்றிரவு, இருவர் கைபேசியிலும் ஐந்து முறையாவது அந்திமழை பொழிந்தது.

திவ்யா கல்லூரி மூன்றாமாண்டின் போது

                "கீதா! என்னடி இது? ஒழுங்கா இருந்த புருவத்த பியூட்டி பார்லர் போய் என்னலாமோ பண்ணிட்டு வந்துருக்க. நம்மப் பொண்ணுக்கு இருபது வயசு ஞாபகம் வச்சிக்கோ."
                "நீங்க டை அடிச்சிக்கலாம். நான்.."
                "டைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா? யார்கிட்ட போய் சொல்றது. உன் அப்பா அம்மா டிக்கட் வாங்கிட்டாங்க. உன் தம்பி அரமண்டயன். அவனே ஒரு வானரம். முடி போன எடத்துலக்கூட டாட்டு போட்டு வெச்சிருக்ககான்."
                "பேசாம டைவர்ஸ் கொடுத்துட்டு நிம்மதியா இருங்க. நான் கோயமுத்தூர் போய் திவ்யா கூட இருக்கேன் பாட்டு கிளாஸ் எடுத்து பொழச்சிக்குவேன்."
                "டிக்கெட் எடுத்து தரேன் போயிட்டு வா. பட் பாட்டு எல்லாம் வேண்டாம். யாராவது ஸ்டூடண்ட் அடிச்சிட்டா, நான் விடோயர் கம் டைவர்சி ஆயிடுவேன். நல்ல காம்பினேசன்ல."
                 "நல்ல ஜோக். சிரிப்பு தான் வரல. வீக்கெண்ட் கோயமுத்தூர் போயிட்டு திவ்யா கூட ஊட்டி போலாமா?"
                 "ஸ்யூர்."


திவ்யா முதல் குழந்தையின் பதிமூன்று வயதின் போது
                
                "என்னங்க போயிட்டேன்", பாத்ரூமிலிருந்து குரல் கொடுத்தாள் கீதா.
        
                 மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு இருக்கும் பத்து பதினைந்து முடியையும் கோதியவாறு நுழைந்தார் சேகர். வாஷ் ஷவரை எடுத்து துடைத்து விட்டார். கீதாவின் கண்களில் நீர் தழும்பியது. 

                  "விளக்கேத்த நேரமாச்சு. என் தல சீவிவிடுங்களேன்"

                   தலை சீவிவிட்டு கண்ணாடியில் காண்பித்தார்.
                   
                   "வகுடு எடுக்கத் தெரியுதா? ஊட்டி ஹேர்பின் பெண்டே பரவாயில்லப் போலியே."
                   "திமிரப் பாத்தியா? திவ்யா காலாண்டுத் தேர்வின்போதே எழுதினவன் சண்டையப் பெருசாக்கி டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கலாம். எல்லாம் என் தலையெழுத்து. இருந்தாலும் ஒரு தித்திப்பு இருக்கு."
                 

          

Saturday, May 16, 2015

நந்தன் கதை

பூனூல் அணியா குலத்தவன்
சிவன்பாதம் சேர்ந்தனன்
மந்திரங்கள் அறியன்
வேதங்கள் அறியன்
சிவமே அறிந்தனன்

ஆதனூர் பறையர் குலத்தினில்
தலைவனாம் நந்தன்
தில்லை காண நாளை செல்வேன்
என நாளும் சொல்லி
சிவமே மனத்தில் கொண்டனன்

நெற்றியில் திருநீரும்
கழுத்தில் மாலையும்
வாயில் நமச்சிவாயமும் கொண்டு
பூனுல் அணியா அந்தணனாய்
இந்த பாவிப் பறையன்

உயிர்பலி கொடுத்து பூசைகள் வேண்டாம்
கடும் நோய்க்கு பூசாரி சூடிட வேண்டாம்
படைத்தவனுக்கே எதற்கு பலி வழிபாடு
சிவன் பெயர் சொல்லி போற்றி பேரானந்தம்
எனத் தன் கூட்டத்திற்கு கூறினான்

மாற்று சிந்தனை மனச்சிக்கல்-
பித்துப் பிடித்த மடையன் என
பலிபூசாரி சொல்லிட
சிவப்பித்தன் தான் என
பாடினன் நந்தன்

ஆதனூர் அந்தணர்  நிலந்தனை
உழுது வாழ்க்கை நடத்தினன் நந்தன்
இவன் மக்கள் யாவரும்
இவனோடு உழுது
செல்வத்தை ஈட்டினர்

தில்லை செல்ல அனுமதி கேட்க
என்றும் அந்தணர் கேலி செய்தார்
பறையனுக்கு எதற்கு தில்லை
தில்லை சென்றால் இங்கே சோறு இல்லை
தொழிலே தெய்வம் என பதில்கள்

நந்தன் மனமோ சிவனையே நாடிட்டு
திருப்பங்கூர் செல்ல திட்டம் ஆயிற்று
அவன் மக்கள் சிலர்  சேர்ந்தும் ஆயிற்று
பறையனுக்கு கோவிலில் என்ன வேலை
என சிலர் வராமலும் ஆயிற்று

நந்தன் கோவிலுக்கு செல்ல
நந்தி சிலையோ உயர்ந்து
வழிமறைத்து நின்றது

(பாடலாக) பாடல் -1

பூனுல் இல்லை கோவிலுள் செல்ல
பாகையும் இல்லை கோவில் செல்ல
நந்திக்கு நந்தன் மேல் என்ன பகை?
சிவலிங்க தரிசனம் என் குலத்தார்
காண நந்தி தடை
மலைப்போலே நந்தி
இதுபோலே  கண்டது இல்லை
இந்த பாவிப் பறையன்
உன்னைக் காணேனோ?
நந்தி நீயேயாயினும்
சற்று விலகாயோ?

என நந்தன் பாட

பாடல்-2

நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
விலகாயோ நீ விலகாயோ
சிலை நீ என நான் அறிவேன்
சிலை நீ அதை நான் அறிவேன்
தில்லை செல்லாது இங்கே வந்த்திட்ட
நந்தன் தான் எனை காண விலகாயோ?

பறையனென்று உள்ளே வரமால்
தான் பறையனென்று உள்ளே வரமால்
மனதினுள்ளே என்னை நினைத்து
என்னை காணாது மனம்வாடும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?

தில்லை கூட செல்லாது
உயர்தில்லை கூட செல்லாது
எனை காண மனம் ஏங்கி
மாந்தரோடு கூடி நின்று
நந்தன் தான் எனை காண விலகாயோ?

குலம்கொண்டு பிரித்தெடுத்து
கோவிலுள்ளே நுழையாது
மூடரவர் சொன்னதற்கு
பாவமாய் அங்கே நிற்கும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
(பாடல் முற்று)
என சிவனும் பாட
ஆங்கே சிலையும் விலகிற்று
ஆனந்த தரிசனம் கண்டனன் நந்தன்

ஊர்திரும்ப,
பறைபாவிக்கு கோவில் ;
உழுது யார் திண்ணுவார் ?
என அந்தணனும் திட்ட
நந்தன் மனம் உடைந்தான்
கூட சென்றவருக்கும்
வேலை இல்லை என ஆனது

நாளை நாளை என
பல நாளைக் கடந்தான் நந்தன்
தில்லை செல்ல வழி இல்லை என ஆனது

பாடல்-3

அந்தணன் வீடு சென்றான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்
அந்தணன் வெளியே வந்தான்
அந்தணன் வெளியே வந்தான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்

மடையா! நிலத்திலின்றி இங்கென்ன வேலை?
உழவு விட்டு இங்கென்ன வேலை?
வேதம் கற்க வந்தாயோ?
சிவமந்திரம் கற்க வந்தாயோ?
மடையா! சொல்லடா பைத்தியமே!

பைத்தியம் நான் அல்லன்
ஐயா! பைத்தியம் நான் அல்லன்
வேதமும் எட்டுவன் அல்லன்
தில்லைக்கு போகணுமே
அனுமதி தாரீரோ?

தில்லை இல்லை தில்லை இல்லை
தில்லை சென்றால் சோறு இல்லை
உழுவதற்கு யாரும் இல்லை
நீ என்ன அந்தணனோ
தில்லை ஈசன் காண்பதற்கு

அவன் தந்த இரு கண்ணும்
தில்லைநாதன் காண்பதற்கே
அவன் தந்த இரு காலும்
தில்லைதனை அடைவதற்கே
இருநாளில் திரும்பிடுவேன்
அனுமதி தாரீர்

மடையா! மரமடையா!
சொன்னால் விளங்காதோ
மடையா! மரமடையா!!
பித்தம் தெளியாதோ ?
போக வேண்டாம் மடையா!

மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
நிலவு வந்து கேட்கணுமோ
அந்த வானம் வந்து கேட்கணுமோ
சிவன் தனை காண இந்த மடையன்
செல்ல வேண்டும்
தில்லை செல்ல வேண்டும்

செல் நீ செல்
நாளை காலையே செல்
உழுதிட்ட பயிர் யாவும்
நாளை நெல் ஆயினால் செல்
மடையா! இப்போ வீட்டுக்கு செல்
(பாடல்  முற்று)

நந்தன் மறுநாள் கழனி செல்ல
நிலம் யாவும் நெல்லாய் இருந்தது
செய்தி அறிந்து அந்தணன் ஓடி வந்தான்

பாடல்-4

நந்தா நீ இல்லை மடையன்
இந்த பாவிதான் மடையன்
நந்தா நீ இல்லை மடையன்

அந்தணன் ஆனால் என்ன
பறையன்தான் ஆனால் என்ன
சிவனுக்கு தொழுகை செய்ய

இந்தப் பாவி மடையன் சொன்ன
வார்த்தையெல்லாம்
மன்னித்து நந்தா தில்லை செல்வாய்
நீ தில்லை செல்வாய்
(பாடல் முற்று)
என பாடி நந்தன் காலில் விழுந்தான் அந்தணன்


பாடல்-5

காலினில் விழலாமோ
எந்தன் காலினில் விழலாமோ
தாய் தந்தை முதியவர் சிவநாதன் தவிர
காலிலும் விழலாமோ
யார் காலிலும் விழலாமோ
அந்தணர் பறையர் பிரிவில்லை
சிவன் கண்ணினில் யாவவரும்
ஒன்றென அறியவேண்டாமோ
அந்தணர் பறையர் பிள்ளை
யார் என்றாலும்
செத்தபின் சாம்பல் தான்
என அறியவேண்டாமோ
அதை அறியவேண்டாமோ
சாதிகள் இல்லை என சொல்லிடவே
தில்லைநாதனும் என்னை படைதிருப்பானோ?
என்னை படைத்திருப்பனோ ?
அவனை காண வேண்டாமோ?
நான் காண வேண்டாமோ?
இருகண்ணிருக்கும்போதே
அவனை காண வேண்டாமோ?
(பாடல் முற்று)

அந்தணன் எழுந்தான்
தில்லை செல்ல தானே
செல்வம் கொடுத்தான்
தன் குற்றம் அறிந்தான்
மனிதம் மட்டுமே சாதி என்றான்

நந்தனார் தில்லை அடைந்தார்
கோவில் திறந்தவுடன்
மலராக மாறி
சிவன்பாதம் அடைந்தார்